ஏனோ தோன்றியது, தேவைப்பட்டால் மறுநாள் தெரிவிக்கலாம் என முடிவெடுத்தார்.
" தெரியலியே, நிர்மல்! என்ன உளறினேன்னு, உனக்கும் புரியலே, விடு!"
நல்லவேளையாக, நிர்மலா அத்துடன் நிறுத்திக் கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்.
செய்தித்தாளிலும் முழு கவனம் செலுத்த முடியாமல், நரேன் அன்று மாலை ரஞ்சனியை சந்திப்பதா, வேண்டாமா என குழம்பினார்.
அப்படி சந்தித்தால், என்ன பேசுவது? பேசலாமா, வேண்டாமா?
ரஞ்சனியின் குடும்பத்தைப் பற்றியோ, அவள் படிப்பை பற்றியோ, வேலை பார்க்கிறாளா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும், அப்போதுதான் அவளுடைய நெருக்கடியை முழுவதும் உணரமுடியும்.
அவளுக்கு மேற்கொண்டு உதவுவதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும்!
'வாடகை தோழி' என கேள்விப்பட்டதில்லையே என்று ஒரு வார்த்தை கேள்வி கேட்டதற்கு எவ்வளவு நீண்ட பட்டியலை தந்துவிட்டாள்!
அவள் புத்திசாலிதான்!
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
மாலை ஐந்து மணி! நரேன் 'வாக்கிங்' கிளம்புகிற நேரம்!
நரேன் தயாரானார்.
அப்போது, அங்கு வந்து நின்றாள், நிர்மலா!
" இன்றுமுதல் நானும் உங்களுடன் 'வாக்கிங்' வரப்போறேன். அப்பத்தான், என் உடல் எடை கூடாமலிருக்கும், வாங்க போகலாம்!"
" சரி, எங்கே போகலாம்?"
" இதென்ன புதுக் கேள்வி? வழக்கமா நீங்க போகிற பனகல் பூங்காவுக்குத்தான்....."
நரேன் பதில் ஏதும் பேசாமல், வெளியே வந்தார். நிர்மலாவும்தான்!
" இத பாருங்க! இப்பவே சொல்லிட்டேன், எட்டு சுற்று நடக்கும்போது, நானோ நீங்களோ வாயை திறந்து பேசக்கூடாது! உங்க நடைக்கு நீங்க நடங்க! என் நடைக்கு நான் பின்னே வரேன்! பெரியவங்க சொல்லியிருக்காங்க, 'பேசாமல் நட! கேட்காமல் கொடு!'ன்னு!"
நரேன், தான் சரியாக இன்று மாட்டிக் கொண்டுவிட்டோம் என்பதை புரிந்து கொண்டார்.
பூங்காவிற்குள் நுழையும்போதே, முதலில் கண்ணில் பட்டது, ரஞ்சனிதான்!
அவளோடு பேசுவதா, வேண்டாமா? அவளே வந்து பேசினால் என்ன செய்வது?
என் பின்னாலே வருகிற நிர்மலாவை கவனியாமல், ரஞ்சனி என்னை நெருங்கி பேச்சுக் கொடுத்தால், நிர்மலா என்னை தவறாக நினைப்பாளே!