அஞ்சுகத்தை பார்த்துவிட்டான்.
"புள்ள! கொஞ்சம் அங்கியே நிப்பாட்டு! இவனை கவனிச்சிட்டு வரேன்....."
அஞ்சுகம் வேறுவழியின்றி, நின்றாள்.
கீழே விழுந்தவன் கையிலிருந்த கேரியர் திறந்து உள்ளிருந்த உணவு தெருவில் இறைந்தது!
" ஏன்யா போலீஸ்! உன்னைப்போல, நானும் ஒரு தொழிலாளி! நீ அரசாங்கத்துக்கு வேலை செய்யறே, நான் ஓட்டல் மொதலாளிக்கு வேலை செய்யறேன்!
என் மொதலாளி சொல்ற வேலைய நான் செய்யலேன்னா, எனக்கு சம்பளம் தரமாட்டாரு! நானும் என் குடும்பமும் பட்டினி!
பட்டினியிலே சாகறதைவிட, கொரோனாவுல செத்தா, கவர்ன்மெண்டுல, என் குடும்பத்துக்கு சில லட்ச ரூபா உதவித்தொக கிடைக்கும்னு, உயிரை கையில பிடிச்சிக்கிணு நான் வேலை செய்யறேன்,
என் பொழப்புல மண்ணை வாரி போட்டுட்டியே, இப்ப சிதறிப்போன இந்த சாப்பாட்டுக்கு யார் தருவா, பணம்? நீயா தருவே? என் சம்பளத்திலே கையை வைக்கப்போறாரு, என் மொதலாளி!
பேசாம ஒண்ணு பண்ணு! என்னை கைது பண்ணி ஜெயில்ல அடச்சிடு! மொதலாளிக்கு போன்ல தகவம் சொல்லிடு, அவரு வந்து ஜாமீன் பணத்த கட்டி என்னெ இட்டுக்கிணு போவாரு, இந்த வீணாப்போன சாப்பாட்டுக்காக, சம்பளத்துல கையை வைக்கமாட்டாரு....."
என்று பேசியவாறே, போலீஸ்காரனின் முன்பாக, தன் இரண்டு கைகளிலும் விலங்கு மாட்டச்சொன்னான்.
வெறுத்துப்போன போலீஸ்காரன் "பொறம்போக்கு! கசமாலம்! ரெண்டு காசு புடுங்கலாம்னு பார்த்தா, என் வேலைக்கே வேட்டு வக்கிறியே, போ, போ!"
என அவனை விரட்டிவிட்டு, இளித்துக்கொண்டே, அஞ்சுகத்தை நெருங்கினான்!
" இத பாரு! என்கிட்ட வராதே!"
" என்னாச்சு உனக்கு? எங்க கூப்டாலும் வரேன்னு சொன்னே......."
" வரதா தான்யா சொன்னேன், ஆனா, நான் போன இடத்துல, ஒரு பெரிய மனுசன், என் நெத்தியில, துப்பாக்கிமாதிரி எதயோ வச்சு பார்த்துட்டு, எனக்கு கொரோனா வந்துருக்குன்னு விரட்டிட்டான், இப்ப நான் நேர ஆசுபத்திரிக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்....."
போலீஸ்காரன், தன் தலையில் அடித்துக்கொண்டு, " இன்னிக்கி எந்த கசமாலம் மொகத்துல முழிச்சேனோ, ஒரு காசுகூட தேறல! போய்த் தொல!" என அஞ்சுகத்தை விரட்டினான்!
அஞ்சுகம் குடிசைக்குள் நுழைந்தபோது, யாரோ ஒரு அன்னியரின் பேச்சுக்குரல் கேட்டது!
அஞ்சுகத்தின் புருசனும் அந்த அன்னியனும் பேசிக்கொண்டிருந்தனர்.