சிறுகதை - நீதி! - ரவை
ஓய்வுபெற்ற நீதியரசர் வினோதயன் முன்பு, அவருடைய பேரன் சமத்துவன் கைகட்டி வாய்பொத்தி நின்றான்!
தாத்தாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
" ஏன்டா! இன்னிக்கி என்ன பரீட்சை வைக்கப்போறே, எனக்கு?"
"கனம் நீதியரசர் அவர்களே!......"
"நான் ரிடையராயிட்டேன்டா!"
" பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், நீதியிலிருந்து ஓய்வு பெறவில்லை என்று நான் நம்புவது சரிதானே, கனம் நீதியரசர் அவர்களே!"
" யோசித்து பதில் சொல்லவேண்டியுள்ளதே....!"
" பரவாயில்லை; நாளை பதில் சொல்லுங்கள்!"
" அப்பாடா! இன்று தப்பிச்சேன்........"
" அவசரப்படாதீர்கள், கனம்........."
"சரி, நீட்டி முழக்கி நேரத்தை வீணாக்காதே! வந்த விஷயத்தை சொல்!"
" ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள், நீதித்துறையில், வழக்கறிஞராகத் துவங்கி,இறுதியில் உச்சநீதி மன்ற நீதியரசராகி, பணியாற்றியுள்ளீர்கள்!...."
" ஆமாம், வழக்கறிஞராக இருந்தபோதும் சரி, பின்னர் நீதியரசாக இருந்தபோதும் சரி, நீதி, நியாயத்துக்காக என்னால் முடிந்ததை செய்திருப்பதாக நம்புகிறேன்."
" மிக்க மகிழ்ச்சி! ஏதோ இரண்டு சொற்களை, அதுதான், நீதி, நியாயம் என்று, பயன்படுத்தினீர்களே, அவற்றின் பொருளை விளக்கமுடியுமா?"
" போச்சுடா! ஏதோ வில்லங்கத்திலே என்னை மாட்டத்தான், வந்து நிற்கிறே, காலங் கார்த்தாலே!....காமேசுவரா! ஓடிவந்து என்னை காப்பாத்துடா........!"
தந்தையின் அபயக்குரல் கேட்டு, மகன் ஓடிவந்தார்.
" என்னப்பா! என்னாச்சு?"
" என்னை பேராபத்திலிருந்து காப்பாத்துடா!"
காமேசுவரன், தன் மகனைப் பார்த்துக் கேட்டார்.
" ஏன்டா! பொழுது விடிந்தவுடனே, தாத்தாவை இம்சைப்படுத்தறே? உனக்கு என்ன வேணும், இப்ப?"
" சரி, தந்தையே! நீங்கள் சொல்லுங்கள், எனக்கு 'சமத்துவன்' என்கிற பெயரை சூட்டியது தாத்தா தானே?"
" ஆமாம்டா! அவருக்கு நீதி, நியாயம், நேர்மை, சமத்துவம் என்பவைதான் உயிர்மூச்சு!