" எல்லாரும் சொல்றாங்க, பேப்பரிலே போடறாங்கன்னு நீயும் சேர்ந்து ரொம்ப பேர் செத்துண்டிருக்கான்னு சொல்றியே, யோசனை செய்தியா?
நாடு முழுவதிலுமா, மூணு நாலு வாரத்திலே, முன்னூறுபேர் செத்ததை, ஆகா ஊகூங்கிறயே, டி.பி. நோயிலே ஒவ்வொரு நாளும் இந்த அளவு செத்துண்டிருக்காங்களே, அது தெரியுமா?
பசி, பட்டினியிலே, தினமும் சாகிறவங்க எண்ணிக்கை, புற்றுநோய், இருதய நோய், மற்ற நோய்களிலே இந்த நாட்டிலே தினமும் எத்தனைபேர் செத்துப்போறாங்கன்னு சொல்லமாட்டாங்க, கொரோனாவிலே நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துப்போகிறதை கணக்கெடுக்கிறாங்களே, ஏன் தெரியுமா?
இது பிரிட்டீஷ் இளவரசரையும், பிரதமரையும், இஸ்ரேல் அமைச்சரையும், கனடா பிரதமரின் மனைவியையும் பாதிக்கிறதுனாலே, உலகமெலாம் இந்த பாதிப்பு இருக்கிறதனாலே, பெரிசுபண்றாங்க!
மற்ற வியாதிங்களிலே தினமும் சாகிறவங்க, குப்பனும், சுப்பனும், முத்தனும், முனியனும் ஏழைசனங்க! அவங்க செத்தா, பரவாயில்லே! ஒருபய வாயை திறக்கமாட்டான்,
நூற்றுமுப்பது கோடி மக்கள் வாழற நாட்டிலே மூணு வாரத்திலே முன்னூறுபேர் செத்துப்போறதை பெரிசா பேசி, ஊரடங்கு சட்டம் கொண்டுவந்து, நாட்டையே முடக்கி, ஏழைங்க கோடிக்கணக்கிலே பசியிலே வாடவிடறது, நீதியா? நியாயமா? தர்மமா? நேர்மையா?
இதைத்தான் இந்த நாட்டிலே உள்ள அரசு நீதி, நியாயம், தர்மம் என்கிறது!
அரசியல் சட்ட அமைப்பும், சட்டங்களும், தீர்ப்புகளும் இதைத்தான் ஆமோதிக்கின்றன, ஏன் தெரியுமா?
இந்த நாட்டிலே உள்ள நீதிமன்றங்கள், அரசியல் சட்ட அமைப்புக்கும், சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவை!
அவைகளை தந்தது யார்? அரசாட்சி, அன்றிலிருந்து இன்றுவரை! மக்களாட்சின்னு பெரும்பான்மை மக்களாலே நிராகரிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நம்மை ஒப்புக்கொள்ளவைத்த சரித்திரப் பிழை!
தாத்தா! இந்தப் பிழையை நேர்த்தியாகச் செய்ததற்காகத்தான், உனக்குப் பதவியும் புகழும்!
கோடானுகோடி ஏழைமக்கள் நூற்றாண்டுகளாக அதே நிலையிலோ, அதைவிட மோசமான நிலையிலோ, உள்ளனர், அதே நேரத்தில், லட்சாதிபதிகள் கோடீஸ்வரன்கள் ஆகிவிட்டனர்! ஒரு டாடா, ஒரு பிர்லா இருந்த இடத்தில், இன்று ஆயிரக்கணக்கில் உலகப் பணக்காரன்களின் அளவுக்கு பெருகிவிட்டனர்.