அதனாலே, தன் செல்லப் பேரனுக்கு ஆசை ஆசையாக, அந்தப் பெயரை சூட்டினார்!"
" தந்தையே! தாத்தாவின் உயிர்மூச்சே, நீதி, நியாயம், நேர்மை, சமத்துவம் என்றீர்களே, அதன் பொருள் என்ன என்ற என் கேள்விக்கு பதில் சொல்ல அவர் ஏன் தயங்குகிறார்?"
" அப்பா! என் மகன் நியாயமாத்தானே கேட்கிறான், அதற்கு பதில் சொல்லுவதில் என்ன கஷ்டம்? என்னை ஏன் உதவிக்கு அழைத்தாய்?"
" காமேசுவரா! சேம்சைட் கோல் போடாதேடா! என்னை காப்பாத்துடா!"
மகனும் தந்தையும் சிரித்தபோது, பேரன் சமத்துவன், அவர்கள் சிரிப்பில் கலந்துகொள்ளவில்லை!
" நீங்கள் இருவருமாகவே என் வினாவுக்கு விடை தரலாம், எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை........"
"அப்பா! நாற்பது வருஷம், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட்டிலே உழைச்சு பேரும் புகழும் பெற்றிருக்கே, இந்த சுலபமான கேள்விக்கு பதில் சொல்லேம்ப்பா!......"
காமேசுவரன், பொறுப்பை தந்தையின்மீது சுமத்திவிட்டு, நழுவினார்.
மகன் தப்பிச் சென்றதும், நீதியரசர் உதவிக்கு மருமகளை அழைத்தார்.
"தாயே தர்மராணி! கொஞ்சம் வந்துவிட்டுப் போயேன்........."
தர்மராணி, அங்கு வந்து, தன் மகன் கைகட்டி வாய் பொத்தி நிற்பதையும், அவன் தாத்தா நடுங்குவதையும் பார்த்து சிரித்துவிட்டாள்.
" இத பார், தர்மராணி! உன் புருஷன் என்னை கைவிட்டு நழுவிவிட்டான், நீயாவது என்னை காப்பாற்று!......"
" டேய் சமத்துவா! என்னடா தாத்தாவிடம் கலாட்டா பண்றே? உனக்கென்ன வேணும், என்னிடம் கேள்! தாத்தாவை இம்சைப்படுத்தாதே! பாவம்! அவர் யார் வம்புக்கும் வராமல், மௌனமா, 'சுடோகு' போட்டுண்டு பொழுதை போக்கறார்,....."
" சரி, தாயே! நீங்களே நியாயத்தை சொல்லுங்கள்! நான் என்னவோ அணுகுண்டைத் தூக்கிப் போட்டாமாதிரி, தாத்தா நடுங்கறாரே, தாத்தா எவ்வளவு பெரிய, எவ்வளவோ சிக்கலான வழக்குகளையெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார், அவரிடம் நான் கேட்டது, 'நீதி' ன்னா என்ன?, இதுக்கு ஏன் பயப்படறார்?"
தர்மராணி, தன் மகனை கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டு, மாமனாரிடம் கேட்டாள்:
" அப்பா! ரொம்ப ரொம்ப நியாயமாத்தானே என் பிள்ளை கேட்கறான், இந்தக் கேள்வியை, உங்களிடம் கேட்காமல், தெருவில் போகிறவனிடமா கேட்கமுடியும்? ஒத்தை வார்த்தையிலே பதில் சொல்லிடுங்களேன்....."