" தாயே! அவர் தயாராவதற்குள், தாங்கள் சொல்லுங்கள்:
சற்றுமுன்பு, 'நியாயம்'னு ஒரு சொல்லை பயன்படுத்தினீங்களே, அதற்கென்ன பொருள், தாயே?"
" சமத்துவா! 'நியாயம்'னா, நேர்மையா, பகுத்தறிவுக்கு முரண்பாடில்லாம,ன்னு அர்த்தம்!"
" தாயே! இதைத்தான், தாத்தாவிடம் கேட்டேன்: 'நீதி, நியாயம், நேர்மைன்னா என்ன?'ன்னு!"
" அப்பா! குழந்தை ரொம்ப எளிதாத்தானே கேட்டிருக்கான், அவனுக்குப் பதில் சொல்லிட்டு, 'சுடோகு' போடுங்களேன், எனக்கு உள்ளே கொஞ்சம் வேலையிருக்கு......"
அவளும் நகர்ந்துவிட்டாள்!
" தாத்தா! என் கேள்விக்கு நாளை பதில் சொல்லுங்கள்! ஒரு சின்ன சந்தேகத்தை போக்கமுடியுமா?"
" நீ ரொம்ப நல்லவன்டா! சரிடா, சந்தேகம் என்னடா?"
" உலகத்திலேயே மிகப் பெரிய மக்களாட்சி நடக்கிற நாடு, நம்ம நாடுன்னு சொல்றாங்களே, அதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?"
" சந்தேகமில்லாம நம்ம நாட்டிலே நடப்பது, மக்களாட்சிதான்; பெருவாரியான மக்களாலே தேர்ந்தெடுக்கப்படுகிறவங்க, நடத்துகிற அரசு, நம்ம அரசு!"
" பெருவாரின்னா?"
" பெருவாரின்னா, மெஜாரிடி....."
" தாத்தா! பெருவாரியா என்கிற தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல், 'மெஜாரிடி'! நான் கேட்டது, விளக்கம்?"
" சமத்துவா! நூறு பேரிலே, பாதி எவ்வளவு?"
" ஐம்பது!"
" ஐம்பதுக்கு மேலே ஒருத்தனுக்கு வாக்கு கிடைச்சா, போட்டியிடுகிற மத்தவங்க எவனாவது, அவனளவு வாக்கு பெறமுடியுமா? அதுதான் 'பெருவாரியா' என்பதற்கு விளக்கம்!
அதனாலேதான், பெருவாரியான மக்களாலே தேர்ந்தெடுக்கப்படுகிறவங்க நடத்தற ஆட்சியை மக்களாட்சி என்கிறோம்...."
" தாத்தா! உன் விளக்கம் சரின்னா, நம்ம நாட்டிலே ஒவ்வொரு தொகுதியிலும், யார் ஐம்பது விழுக்காடுக்குமேலே வாக்கு பெறுகிறாங்களோ, அவங்கதான் தேர்ந்தெடுக்கப்படுகிறாங்க, அவங்கதான் ஆட்சி புரியறாங்கன்னு சொல்றியா?"
" ஆமாம்டா!"