தர்மராணி காபி எடுத்துவந்து, முதியவரிடம் தந்தாள்.
" ஏம்மா! உன் புள்ளெ இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்து நிப்பானே, அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சியா?"
" போங்கப்பா!அவனை பெரிய மனுஷனாக்கிக்கிட்டு, டயத்தை வேஸ்ட் பண்றீங்க! நீங்க நிம்மதியா சுடோகு போடுங்க!.........."
" அவனுக்கு என்ன பதில் சொல்றது?"
" 'போய் உன் வேலையைப் பாரு'ன்னு விரட்டுங்க, பிறகு உங்கள தொந்தரவு செய்யமாட்டான்!"
"அப்படியே செய்யறேன், ஆனா நமக்குள்ளே பேசிப்போம். அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?"
" அவன் என்ன கேள்வி கேட்டான்?"
" நீதி, நேர்மை, நியாயம்னா என்ன?"
" அப்பா! இவை, பரம்பரையா நாம பயன்படுத்தற சொற்கள்! நம்ம மனசுக்கு எது நியாயம்னு தெரியும், ஆனா அதுக்கு ஒரு விளக்கம் கேட்டால், சொல்லமுடியாது!
உதாரணமா, சர்க்கரை இனிக்கும்னு சொல்றோம், நம்ம நாக்குக்கு இனிப்புன்னான்னு தெரியும், அதை சொற்களால் விளக்கமுடியுமா?
அதேபோல, தலைவலின்னு சொல்றோம், தலையா வலிக்கிறது, அல்லது நெற்றிப்பொட்டிலே நரம்பு புடைத்து அங்கே வலிக்கிறதான்னு சொல்லமுடியுமா?
'மரியாதை'ன்னு ஒரு சொல் இருக்கு, அது என்னன்னு மனசுக்குத் தெரியும், ஆனா விளக்கம் கேட்டா தெரியாது......"
" பிரமாதமா சொல்லிட்டே, இதைச் சொல்லி சமாளிக்கப் பார்க்கிறேன், ஆனா என் பேரன் கெட்டிக்காரன். அவன் என்ன கேட்பான், தெரியுமா?"
" சொல்லுங்க!"
" உன்னையோ, உன் புருஷனையோ அந்தக் கேள்வி கேட்கமுடியாது, ஆனா என்னைக் கேட்கமுடியும்......."
" அப்படியென்ன கேள்விப்பா?"
" நீதி, நேர்மை, நியாயம்னா என்ன ன்னு சொல்லமுடியாமலே, நாற்பது வருஷம் நீதித்துறையிலே பணியாற்றி பேரும் புகழும் வாங்கிட்டியா, தாத்தா!, யு ஆர் ரியலி கிரேட்னு கிண்டல் பண்ணுவாம்மா!"