சிறுகதை - நல்லவங்க நாலுபேர்! - ரவை
கார்ப்பொரேஷன் தேர்தல் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து சலித்துப் போயிருந்த நேரத்தில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளிவந்ததும், சலிப்பு பறந்துபோய் சிலிர்த்துக்கொண்டு எழுந்தார், சிதம்பரம்!
மறுபடியும் ஒருமுறை வெளியீட்டை படித்தார்.
மார்ச்சு மாதம் 21ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் விண்ணப்ப மனுவை கொடுத்தாகவேண்டும்.
திரும்பப்பெற இறுதிநாள், மார்ச் 25!
தேர்தலில் போட்டியிடுபவர் பட்டியல் வெளியீடூ மார்ச் 26!
தேர்தல், ஏப்ரல்16!
ஓட்டு எண்ணுதல், ஏப்ரல்18!
அன்றிரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும்!
முதலில், அவர் தேடிச் சென்றது, ஜோசியர் வீட்டுக்கு!
" இந்த தேதிகள் என் ஜாதகப்படி பொருத்தமானவையா? தைரியமாக நான் போட்டியிடலாமான்னு ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்க, ஜோசியரே!" என்று அவரிடம் ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினார், சிதம்பரம்!
சிரித்துக்கொண்டே பணத்தை வாங்கி, இடுப்பில் முடிந்து வைத்துக்கொண்ட ஜோசியர் சுந்தரம், தேதிகளை படித்தார்.
" உங்க ஜாதகத்தை பலமுறை பார்த்துள்ளதால், எனக்கு அது மனப்பாடமாகிவிட்டது.
முதலாவதாக, அடுத்த தமிழ் வருஷம் முழுவதும் உங்களுக்கு யோகம்தான்! புது வருஷத்திலே, தேர்தல் நடப்பது, உங்களுக்கு ரொம்ப சாதகம்! தைரியமாக களத்திலே குதிக்கலாம், வெற்றி உங்களுக்கே!"
இந்த நல்ல வார்த்தை கேட்டு மகிழ்ந்து, சிதம்பரம் இன்னொரு ஐநூறு ரூபாய் நோட்டை சுந்தரத்திடம் நீட்டினார்.
" எதுக்கு? முதல்லேயே, பணம் தந்துட்டீங்களே.......?"
" இந்தப் பணம் உங்களுக்கில்லே, நீங்க தினமும் காலையிலே குளித்து பக்திசிரத்தையா இரண்டு மணி நேரம் கும்பிடறீங்களே, அந்தப் பெருமாளுக்கு! பாலாபிஷேகம் பண்ணுங்க!"
இதயம் பூரிப்பில் குளிர, சிதம்பரம் அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என யோசித்துக்கொண்டே, வீடு திரும்பினார்.
அங்கே, அவருடைய விசிறிகள் கூட்டம் அவருக்காக காத்திருந்தது!
"தலைவரே! மூணு வருஷமா காத்திருந்தது, இதற்குத்தானே! வந்துவிட்டது நேரம்!