பார்வதி சிரித்துக்கொண்டே நகர்ந்தாள்.
சிதம்பரம் டி.வி.யை 'ஆன்' பண்ணி, வடிவேலு நகைச்சுவையை ரசிக்க ஆரம்பித்தார்.
'.....வருவான்.....ஆனா வரமாட்டான்......'
' அவன் சொன்னான்,...எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கறான், ரொம்ப நல்லவன்டா....."
இப்படி தோரணமாக ஜோக்குகளை ரசித்ததும், மனம் லேசாகியது!
விதி யாரை விட்டது?
சிதம்பரத்தின் கைபேசி சிணுங்கியது.
" உங்க தொகுதி எம்.பி.யும் எம்.எல்.ஏ.யும் உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வந்துண்டிருக்காங்க! ஏதோ ரொம்ப முக்கியமான விஷயமாம்! வீட்டிலே இருங்க!"
சிதம்பரத்துக்கு ஒன்றும் புரியவில்லை!
இரண்டு வி.ஐ.பி.க்களும் என்ன முக்கியமான விஷயமா என்னை பார்க்க வராங்க, ஒருவேளை தேர்தலுக்கு நன்கொடை வசூலிக்க வராங்களோ!
பார்வதி அவர் எதிரே வந்து நின்று அவரை முறைத்துப் பார்த்தாள்.
" என்னை என்ன பண்றச் சொல்றே? ஆளுங்கட்சிக்காரங்க! வராதேன்னு சொல்ல முடியுமா? வரட்டும், என்ன சொல்றாங்கன்னு கேட்போம்!"
" வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறாம இருந்தால் சரி!"
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, சிதம்பரம் எழுந்து கதவை திறந்தார்.
" வாங்க! வாங்க! சொல்லி அனுப்பியிருந்தா, நானே வந்திருப்பேனே....."
" அது முறை இல்லீங்களே! முதல் அமைச்சர் உங்களிடம் ஒரு முக்கியமான தகவலை சொல்லி உடனடியா உங்க சம்மதம் பெற்றுவர எங்களை அனுப்பியிருக்கார்...."
சமையல் அறையிலிருந்த பார்வதி, தன் காதுகளை தீட்டிக்கொண்டாள்.
" சமீபத்திலே ஒரு சட்டத் திருத்தம் செய்து இனிமேல், கார்ப்பொரேஷன் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கௌன்சிலர்களே தேர்ந்தெடுக்கலாம்னு முடிவாயிருக்கு........."
" ஆமாம், நானும் படிச்சேன் பேப்பரிலே!"
" முதல் அமைச்சர்தானே, எங்க கட்சி தலைவரும்கூட! அவர் முடிவு எடுத்திருக்காரு, இந்த முறை உங்களை மேயராக்கணும்னு!
உங்களைப்பற்றி அவருக்கு கிடைச்சிருக்கிற தகவலின்படி நீங்கதான் அந்த கௌரவமான பதவிக்கு ரொம்ப பொருத்தமானவராம்!"
" ரொம்ப சந்தோஷம்!"