கூடிவிட்டது, காலம்!
இனி ஒவ்வொரு நிமிடமும் இதே நினைப்புத்தான்! வெற்றிவிழா கொண்டாட்டம் எங்கே எப்படி சிறப்பாக கொண்டாடலாம்னு இப்போதிலிருந்தே திட்டம் போடுவோம்........"
தொண்டர்களின் ஆர்வமும் உற்சாகமும் சிதம்பரத்தை தொற்றிக் கொண்டது!
அவருடன் தொண்டர்களும் உள்ளே சென்று வீட்டின்முன் போடப்பட்டிருந்த பந்தலின்கீழே, சௌகரியமாக அமர்ந்தனர்.
சிதம்பரம் தொண்டர்களில் ஒருவரை அழைத்து, அவரிடம் பணத்தை கொடுத்து, பக்கத்து டீக்கடையிலிருந்து எல்லோருக்கும் மசால்வடையும் டீயும் வரவழைக்கச் சொன்னார்.
" தலைவரே! தொண்டர்களின் குறிக்கோள், உங்களுக்கு வெற்றி தேடித் தருவதல்ல...."
" அடப்பாவி! முதல்லேயே குண்டைத் தூக்கிப் போடறே.....!"
" முழுக்க கேளுங்க, தலைவரே! உங்க வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது, எங்க குறிக்கோள் உங்களை எதிர்த்து ஒரு பயல் நிற்கக்கூடாது, நின்னாலும் அவனுக்கு டிபாசிட்கூட கிடைக்கக்கூடாது......."
"ஓ! அதைச் சொல்றியா? அது சரி, என்னை எதிர்த்து யாராவது போட்டி போடுவாங்கன்னு நினைக்கிறே?"
" ஒருத்தனுக்கும் துணிவிருக்காது, ஆனா அரசியல்கட்சிங்க கட்டாயமா ஒருத்தரை கட்சி சார்பிலே நிறுத்தணுமே.....!"
" ஆமாமாம்! அதிலேயும் ஒரு நல்லது இருக்குடா! தேசீய கட்சிங்க நாலு, மாநில கட்சிங்க நாலுன்னு எட்டு கட்சிகள் போட்டி போட்டு களத்திலே குதிச்சா, நமக்கு எதிர்ப்பா இருக்கிற கொஞ்சம் பேரும் எட்டாக பிரிந்துடுவாங்கல்லே, அது நமக்கு நல்லதுதானே?"
அதற்குள் மசால்வடையும் டீயும் வந்து சேரவே, தொண்டர்கள் பிசியாகினர்.
இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு, சிதம்பரம், தொண்டர் தலைவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
" பரமசிவம்! போன தடவை மாதிரியே புரோகிராமா, அல்லது ஏதாவது மாறுதல் செய்வோமா?"
" தலைவரே! போன தேர்தலுக்குப் பிறகு, தொகுதியிலே ரொம்ப மாற்றம் வந்திருக்கு, அதனாலே நம்ம பிளானும் மாறணும்........"
" என்னென்ன மாறுதல் வந்திருக்கு?"
" ரெண்டு லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, மூணு லட்சமா அதிகரித்துவிட்டது, அதிலே புதிதா வந்தவங்க, அங்கங்கே திட்டுத்திட்டா குடியேறிக்கிறாங்க! அதனாலே, நாம