சிறுகதை - நட்பின் இலக்கணம் - வின்னி
அம்மா தடுமாறுகிறாள் மதிய உணவு சமைக்க முட்டை வேணும். காலையில் தலைவலியில் படுத்தவள் சமையலை மறந்துவிட்டாள். “பாலா! ஓடிப்போய் ஒரு பத்து முட்டை வாங்கிக்கொண்டுவா, முட்டைக் குழம்புவைக்க” என்றால்.
பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு சரியான பசி. புத்தகங்களை கதிரையில் எறிந்து விட்டு, அம்மா தந்த பத்து ரூபாவை எடுத்துக்கொண்டு, பத்து வயதான நான், ஒரே ஓட்டமாக ஓடுகிறேன், பத்து முட்டைகள் வாங்க, பத்து வீடுகள் தள்ளி இருக்கும் பத்துமன் என்ற பத்மநாதன் மாமா வீட்டை நோக்கி.
வழியில் கைலாய பிள்ளையார் கோவிலில் பூசைக்கு மேளச் சத்தம் கேட்கிறது. அங்கே போனால் பஞ்சாமிர்தமும் பழவகைகளும் கிடைக்கும்.
எனக்குப் பசித்தபோதும் கோவிலுக்குள் போய் பூசை முடியும்வரை நிற்கமுடியுமா? அம்மாவுக்கு சமைக்க முட்டை வாங்கவேணும்.
அதைவிட முக்கியம் மாமாவின் நாய் பெல்லாவைப் பார்க்கலாமே. எனக்கு நாய்கள் என்றால் கொள்ளை ஆசை. பெல்லா ஒரு ஜேர்மன் ஷெப்பேர்ட் சாதி நாய். மனிதன் தம்மைப்போல நாய்களுக்கும் சாதி பெயர் வைத்து விட்டான்.
ஒன்றாக சேர்ந்து இருக்கும் அவற்றை உயர்ந்த சாதி, குறைந்த சாதி என்று பிரித்து விட்டான், நாகரீகம் தெரிந்த மனிதன். ஆனால், நாய்கள் உயர்வு, தாழ்வு என்று பார்ப்பதில்லை. அவை ஒன்றை ஒன்று கண்டதும் சந்தோசமாகக் குலைத்து, வாலை ஆட்டி, ஒன்றை ஒன்று முகரத் தவருவதில்லை.
பெல்லா என்பது அமெரிக்காவில் பெண் நாய்களுக்கு வைக்கும் பெயர்களில் முதலிடத்தில் இருப்பது.
பத்துமன் மாமாவின் வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன். கட்டியிருந்த மாமாவின் நாய் பெல்லா, என்னைக் கண்டதும் பலமாக குலைக்கத் தொடங்கியது. அதற்குப் பசியோ என்னவோ தெரியவில்லை கயிற்றை அறுத்துக் கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. என்னால் அதன் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. அது தனது கூரிய பற்கலால் எனது தொடையைக் கவ்வி இழுத்தது. என் பெல்லாவா இப்படிச் செய்கிறது என்று எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்!
என்னுடன் அன்பாகப் பழகி விளையாடும் அந்த நாய்க்கு இன்று என்ன வந்தது?
மாமா உரக்கக் கத்தியபடி ஓடி வந்து, அதைப் பிடித்து தூணில் கட்டினார். என் காலில் இருந்து இரத்தம் ஆறாகப் பாய்ந்தது. பெல்லாவின் கூரிய பற்கள் ஆழமாகப் பதிந்து காலில் பெரிய காயங்கள்.