ஆனா, பெரியவங்க தங்களிடையே விரோதம் பாராட்டி பிரிந்ததனாலே, உங்கப்பா எவ்வளவோ முறை கெஞ்சியும் தந்தையின் சம்மதம் பெறமுடியவில்லை!
புத்திசாலியா இருந்தா, உங்கப்பா என்ன செய்திருக்க வேண்டும், சத்தியத்தை கை விட்டு, சொத்துக்காக, என்னை மறந்து, அவங்கப்பா சொன்ன வேற ஒருத்தியை கல்யாணம் செய்துகொண்டு அத்தனை சொத்துக்கு வாரிசு ஆயிருக்கணும், உங்கப்பா!
சத்தியத்தை மீறுவது பாபம்னு அப்பாவித்தனமா என்னை கட்டிக்கிட்டு, அந்த சொத்தை இழந்து நிற்கிறார்.
அந்த கோடிக்கணக்கான சொத்து, இப்ப தர்மசொத்தாகி, எவன் எவனோ அனுபவிக்கிறான்!
மகேஷ்! நீயே சொல்லு! இப்படி ஒரு அசடு இருக்குமா, என் வயிறு பற்றி எரியுதுடா!"
மகேஷின் தந்தை, சிறு கடை ஒன்றை நடத்தி, ஏதோ கடவுள் அருளில், கடனின்றி குடும்பம் நடத்துகிறார்.
அவருக்கு எந்த மனக் குறையும் இல்லை! சிரித்த முகத்துடன் எளிமையாக வாழத் தெரிந்தவர்.
அவ்வப்போது, பண நெருக்கடி ஏற்படும்போது, அம்மா புலம்பிக்கொண்டே இருப்பாள். அப்பா காதிலே வாங்கிக் கொள்ளவே மாட்டார்.
மகேசனுக்கு பரிதாபமா யிருக்கும், அப்பாவைக் கண்டு!
இதற்கு ஒரு முடிவு வர இறைவன்தான் வழி செய்ய வேண்டும்! என மகேசன் பிரார்த்தித்தான்.
"மகேஷ்!" என குரல் கொடுத்தவாறு, ஒரு அழகான பெண் வீட்டுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்ததும், அவன் தாய் வந்திருந்த பெண்ணை வரவேற்று உபசரித்தாள்.
" மகேஷ் வெளியிலே போயிருக்கான், வந்துடுவான், உட்காரும்மா!"
அந்தப் பெண் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, "ஆண்டி! வீட்டை ரொம்ப அழகா வைச்சிருக்கீங்க!" என பாராட்டினாள்.
" ரொம்ப தேங்க்ஸ்...உன் பெயர்?"
" சுகுமாரி!"
" பொருத்தமான பெயர்! நீயும் மகேசனுடன் படிக்கிறியா?"
" ஆமாம், ஆண்டி! ரெண்டு பேரும் ஒண்ணாங் கிளாஸிலிருந்து சேர்ந்து படிக்கிறோம், நல்லநட்பு! ஆனா, எங்க நட்பு, பள்ளிக்கு, காலேஜுக்கு உள்ளேயேதான்! இன்றுதான் முதன்முதலா, உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், ஒரு அவசரம்!"
" அப்படியா! இப்ப மகேஷ் வந்துடுவான்...இருந்து பார்த்துட்டுப் போ!"