அதைச் சுற்றிச் சுற்றி வருவாள். மற்றவர்களை சற்று தள்ளி நின்றே பார்க்கச் சொல்வாள்! மறக்காமல், தினமும் தன் சேய்க்கு திருஷ்டிப் பொட்டு வைக்கத் தவறமாட்டாள்.
தன் சேலையை எட்டாக மடித்து மெத்தையாக்கி அதை தன் அருகிலேயே படுக்க வைத்து கவனித்துக் கொள்வாள்.
முதன்முதலில், சேயின் பார்வையை, ஒலியை, உடல் அசைவை அவள் கண்டு களிப்பதோடு, அதை தன் இறுதி மூச்சு உள்ளவரை, நினைவில் வைத்திருப்பாள்!
மற்றவர்களை அழைத்து சேயின் அழகை ரசிக்கவைத்து அதைக் கண்டு பெருமை அடைவாள்!
தன் கையால், சேய் அணிய உடை தயாரிப்பாள். அதன் பசி நேரம் தெரிந்து, அது கேட்காதபோதே, தாய்ப் பால் தருவாள்.
அது தாய்ப்பால் அருந்தும்போது, அதன் தலை மயிரைக் கோதி, அதன் பிஞ்சு உடலைத் தடவி, முத்தமிட்டு தன்னை மறப்பாள்.
இப்படி வளர்கிற சேய், பள்ளிப் பருவம் அடைந்ததும், அதை சீவி சிங்காரித்து உடை அணிவித்து, பள்ளிக்கு அனுப்புகிற காட்சியை கண்டு களிக்க, ஆயிரம் கண் போதாது!
பள்ளியிலிருந்து சேய் திரும்புகிற நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பே, உள்ளுக்கும் வாசலுக்குமாக நடை பயில்வாள்!
உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புகையில், மதிய உணவு மூன்றடுக்கு கேரியரில் தந்து மகிழ்வாள்! சேய் திரும்பியதும் கேரியரை பிரித்துப் பார்த்து ஏதாவது மிச்சம் இருந்தால், " ஏன்டா குழந்தே! சரியா சாப்பிடலே, வயிறு சரியாக இல்லையா? அல்லது உணவு பிடிக்கலையா?" என கேள்வி கேட்டு துளைப்பாள்!
சேய், சிறுவனாகிப் பின் வாலிபனாகிப் பின் இளைஞனாகிப் பின் குடும்பத் தலைவனாகிப் பின் தந்தை ஆகிப் பின் தாத்தாவானபிறகு கூட, தாய்க்கு அவன், 'குழந்தே' தான்!
மகனின் திருமணத்தின்போது, அவள் அடைகிற ஆனந்தம் விவரமாகச் சொல்ல, சொற்கள் போதாது!
தாயின் இறுதி வினாடிகளிலும், கணவனின் மடியில் படுத்திருந்தாலும், கண்கள் மகனைத் தேடும்! மகன், தன் வாயில் ஊற்றும் ஒரு சொட்டுப் பாலைப் பருகியவாறே, அவள் உயிர் பிரியும்.
தொட்டில், கட்டில், சுடுகாடு வரை தாய் தன் சேய்க்கு அன்புமழை பொழிய ஒரு வினாடியும் தவறமாட்டாள்.
வாழ்க்கையிலே எல்லா பெண்களும் ஏங்குவது, தன் சேயிடம் அன்பு செலுத்தவே!