"நான் போறன்....." மொட்டையாக முணுமுணுத்தான்.
மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள் முடுக்கால் திரும்பி மறையுமுன் 'சட்' என ஒருதரம் திரும்பிப் பார்த்தான்.
அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினாள்.
வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள்.
சீலன்!
என்னவாயிற்று இன்று இவனுக்கு?
மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டுப் போனானோ?
திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது.
"ஏன் மேனே தலையிடிக்குதோ....."
"சாச் சாய்....."
குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான்.
"இரு கோப்பி போட்டுத் தாறன்...."
"........"