சிறுகதை - மனைவி அமைவதெல்லாம்... - பிந்து வினோத்
அலுவலகத்தில் இருந்து கிளம்பிய விவேக்கிற்கு, வீட்டிற்கு செல்ல சற்றே அலுப்பாக இருந்தது. இந்நேரம் அவன் மனைவி பாரதி, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி, இரவு உணவு பணிகளை தொடங்கி இருப்பாள். அவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்கள் ஆகிறது. அவனுடைய அலுப்பிற்கு காரணம் அவனே தான்...
விவேக் திருமணத்திற்கு முன்பே தனக்குள் சில பல தீர்மானங்களை மனதில் எடுத்து வைத்திருந்தான். அதில் முதன்மையானது, எந்த காரணத்திற்காகவும் மனைவிக்கு விட்டு கொடுக்க கூடாது என்பது!
அவனுடைய நண்பர்கள் பலரும் திருமணம் ஆன புதிதில் மனைவியை சந்தோஷப்படுத்த என பல விதங்களில் விட்டு கொடுத்து அவர்களுக்கு ஏற்றவாறு நடந்துக் கொண்டு விட்டு, பின் மாற முடியாமல் தவிப்பதை கண்டு அவன் எடுத்த முடிவு அது. திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் அவன் பக்கம் தவறு இருந்தாலும் அவன் மனைவியிடம் அதற்காக விளக்கமோ, மன்னிப்போ கேட்டது இல்லை. பாரதியும் இதுவரை அதற்காக எல்லாம் அவனிடம் கோபித்துக் கொள்ளவில்லை. முதல் முறையாக இப்போது தான் பாரதி ஏதோ விதத்தில் அவளின் கோபத்தை வெளிக் காட்டுகிறாள். அதுவும் அவள் கோபப்பட்டு கத்தவும் இல்லை, பேசாமல் இருக்கவும் இல்லை, வேண்டியதற்கு பேசினாள், வழக்கம் போல் சமைத்தாள், அவ்வளவு தான்.
உண்மையில் இப்போது விஷயம் பெரியது ஒன்றும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் பாரதிக்கு பிடித்த அஜித் திரைப்படத்திற்கு மாலை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தவன், அன்று அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட வேலையினால் மறந்து போய் விட்டான். திரைப்படம் பற்றி அவனுக்கு நினைவு இருந்தால் தானே மனைவிக்கு கைப்பேசியில் அழைத்து விபரம் சொல்வதற்கு! இரவு வழக்கத்தை விட தாமதமாக வீடு திரும்பியவனுக்கு, வெளியில் செல்ல வெகு நேரம் முன்பே தயாராகி காத்திருந்து அலுத்து போய் அமர்ந்திருந்த மனைவியை பார்த்த பின்பு தான் படம் பற்றிய நினைவே வந்தது.
ஆனால் அப்போதும் பாரதி அவனிடம் சண்டை எல்லாம் போட வில்லை. அவன் வேலை பற்றி சொன்னதை கேட்டு தலை ஆட்டி விட்டு, அவன் சாப்பிடவில்லை என்பதை கேட்டு தெரிந்துக் கொண்டு உணவு பரிமாறியதோடு சரி, வேறு எதுவும் பேசவில்லை. தவறு தன் மீது தான் ஒரு சாரி சொன்னால் சரி ஆகி விடும் என்பது விவேக்கிற்கும் புரிந்தது... ஆனால் சாரி