சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்
“......பசிக்குப் பிச்கை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...."
- மெளனி
நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க்க முனைந்து நிற்கிறாள் அண்ணி.
அண்ணியைத் தவிர இந்த வீட்டில் வேறுயார்தான் முனைப்புமிகக் கொண்டவர்களாயுள்ளனர். அண்ணாவுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர் வேறெதையும் இப்போ ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது.
முன்னரெல்லாம், அண்ணா இரவு நேரங்களில் வானத்தைப் பார்த்தபடி நெடுநேரம் நிற்பார். அக்காலங்களில் அவரது நெஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட இரவுகளில் நட்சத்திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி நிற்பார். அங்கே அம்மாவும் அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம். ஒரு நாளைக்கு வடக்குமூலையில் அவை தெரிவதைக் காண்பார். பிறகொரு நாளில் அவை சற்று இடம் பெயர்ந்து போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும் அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவைப் பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில் நீர் திரளும்.
நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார். கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாகத் தொ¢யக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி