சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்
“ஏங்க...”
அவசரமாக கிளம்பி நடந்துக் கொண்டிருந்த அனிருத், மனைவியின் தயக்கமான அழைப்பைக் கேட்டு எரிச்சலோடு பார்த்தான்.
“என்ன சௌமி?”
அவனின் குரலில் ஒலித்த அவசரமும், எரிச்சலும் எதிர்பார்த்தது தான் என்பதால் அதனால் பெரிதாக பாதிப்படையாமல்,
“சாயந்திரம் கோவிலுக்கு போகனும்...” என்றாள் சௌம்யா மென்மையாக.
“நான் ஆறு மணிக்குள்ள வரலைன்னா நீ எனக்காக காத்திருக்காமல் போயிட்டு வந்திரு... அப்பாவிடம் டிரைவர் அரேன்ஜ் செய்து தர சொல்லு...”
அரை மனதுடன் தலை அசைத்தவள்,
“அப்புறம்...”
என்று ஏதோ சொல்ல தொடங்கவும், அதை கேட்க பொறுமை இல்லாதவனாக,
“எதுவா இருந்தாலும் அப்புறம் கேட்கிறேன், எனக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ஒரு கால் இருக்கு... டிரைவ் செய்துட்டே நான் அட்டென்ட் செய்யனும்...”
சொல்லிவிட்டு அவளின் பதிலுக்கும் காத்திருக்காமல் அவசரமாக நடந்தான் அனிருத்.
காரில் ஏறி மொபைல் ஹெட்செட் மாட்டிக் கொண்டு அவன் கிளம்புவதை இமைக்காமல் பார்த்திருந்தாள் சௌம்யா.