“இன்னும் ஒன்னும் சொல்லலை அது தான் பயமா இருக்கு... இரண்டு மணி நேரமா உள்ளே தான் இருக்காங்க... சிஸ்டர் யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க... இந்த குழந்தைக்காகவாவது கடவுள் அவளுக்கு எதுவும் ஆகாமல் காப்பாத்தனும்...”
பாட்டியின் மடியில் அமர்ந்து விவரம் புரியாமல் சிரித்துக் கொண்டிருந்த மூன்று வயது ஸ்ரேயாவை பார்த்து அவனுக்கு வயற்றினுள் பிசைந்தது...
அதற்கு மேல் நிற்க முடியாது என்று தோன்றவும், அருகே காலியாக இருந்த பெஞ்சில் தோய்ந்து போய் அமர்ந்தான்...
❀✿❀✿❀✿
நான்கு வருடங்களாக தலைவலி என்று கூட எதுவும் சௌம்யா சொன்னதாக அவனுக்கு நினைவில்லை... அவனுக்கு எல்லாம் நேரத்திற்கு தயாராக இருக்க வேண்டும்... காலையில் குளித்த உடன் அணிந்துக் கொள்ளும் உடைகளில் தொடங்கி, காலை உணவு, மதிய உணவு என அனைத்துமே... அவனின் ஒவ்வொரு தேவையையும் புரிந்துக் கொண்டு அவனுக்காக எப்போதும் அனைத்தையும் நேரத்திற்கு தயாராக வைத்திருப்பாள் சௌம்யா...
கதவு திறக்கப் படும் ஒலியில் அவனின் சிந்தனை கலைந்தது...
வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்துக் கொண்டனர்... அவர்களின் மனநிலை உணர்ந்து அமைதியாக பேசிய டாக்டர்,
“அவங்க ஹஸ்பண்ட் யாரு?” என்றார்.
“நான் தான் டாக்டர்...” என்றான் அனிருத் அவசரமாக.
“நீங்க மட்டும் வாங்க...”