உடனே பதில் சொல்லாது ஒன்றிரண்டு வினாடிகள் தயக்கத்திற்கு பிறகு,
“நீ வா, வந்து பேசலாம்.. இப்போதும் வேலை செய்றேன்னு வராமல் இருந்திடாதே!”
மேலே அவன் பேசும் முன் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது...
அப்பாவின் பேச்சில் இருந்த கசப்பு அவனுக்கு புரியாமல் இல்லை...
அவசரமாக லேப்டாப்பில் அனைத்து டாகுமேன்ட்டுகளையும் சேவ் செய்து விட்டு கிளம்பினான்.
❀✿❀✿❀✿
அனிருத் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை அடைந்த போது, அவனின் பெற்றோர், தங்கை குடும்பம், சௌம்யாவின் பெற்றோர் என அனைவரும் இருந்தனர்... ஒவ்வொருவரின் முகத்திலும் இருந்த கவலையும், மின்னிக் கொண்டிருந்த கண்ணீரும் பயத்தை தர,
“என்னப்பா என்ன ஆச்சு? சௌம்யா எப்படி இருக்கா?” என்றான் வேகமாக.
“கோவிலுக்கு போன போது ரோட் க்ராஸ் செய்யும் போது வேகமா வந்த வேன் இடிச்சிருச்சுப்பா... ஏதோ நல்ல நேரம் கோவிலுக்கு வந்திருந்த நாலு நல்லவங்க உடனே காரில் கொண்டு வந்து அட்மிட் செய்திருக்காங்க.. சௌம்யா செல்போனில் ரிசன்ட் கான்டாக்ட் லிஸ்ட் பார்த்து, முதலில் உன்னை தான் தொடர்புக் கொள்ள முயற்சி செய்திருக்காங்க... நீ லைனில் கிடைக்காததால், அவளுடைய அம்மாக்கு சொல்லி இருக்காங்க...”
சௌம்யாவின் பெயரை பார்த்துவிட்டு கைப்பேசியை எடுத்து பேசாமல் வைத்த நினைவில் அவன் மனம் சுட்டது...
“டாக்டர் என்ன சொல்றாங்க?”