சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அப்புறம், அவனும் அவன் நண்பர்கள் போல் மனைவிக்காக இறங்கி வந்து விட்டால் என்னவாவது?
திருமணத்திற்கு முன்பு வரை விவேக்கிற்கு உலகமே அவன் அம்மா லக்ஷ்மியும், அக்கா வெண்ணிலாவும் தான். வெண்ணிலா இப்போது திருமணமாகி சிங்கப்பூரில் இருக்கிறாள். முதல் குழந்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவளுக்கு துணையாக இருக்க லக்ஷ்மியும் சென்ற மாதம் தான் சிங்கப்பூர் சென்றார். பாரதி லக்ஷ்மியின் பள்ளி தோழி அருணாவின் மகள். பாரதி அவனை புரிந்து நடந்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் லக்ஷ்மியும் வெண்ணிலாவும் தான். திருமணம் நிச்சயம் ஆன பின்பும், ஏன் திருமணமான பின்பும் கூட, பாரதி அவனை விட வெகு நேரம் நேரிலும், தொலைபேசியிலும் பேசியது அவனுடைய அம்மாவுடனும், அக்காவுடனும் தான்!
மனம் அதன் போக்கில் வேலை செய்யும் போதும், கைகள் தன் போக்கில் இயங்க, காரில் வீட்டின் அருகில் வந்து விட்டதை உணர்ந்தான். பாரதி இப்படி யாரோ போல் நடந்துக் கொள்வது அவனுக்கு கடுப்பாக இருந்தது. பேசாமல் ஒரு சாரி சொல்லி பார்க்கலாமா? இந்த எண்ணம் தோன்றிய மறு கணமே, இல்லை வேண்டாம்... என மறுப்பும் மனதில் தோன்றியது...
இன்னும் இரண்டு நாட்களில் அவனின் பிறந்த நாள் வேறு வருகிறது. பொதுவாக அவனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இது தான் லக்ஷ்மியும், வெண்ணிலாவும் இல்லாது அவன் கொண்டாட போகும் முதல் பிறந்த நாள். பாரதிக்கு இது போல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடி பழக்கம் இருக்குமா? அவனுடைய பிறந்த நாள் அவளுக்கு நினைவு இருக்குமோ என்னவோ? ஆனால் அவளையும் குற்றம் சொல்ல முடியாது, அவன் அவளிடம் மனம் விட்டு பேசினால் தானே அவளுக்கு தெரியும். கேள்வியும் கேட்டு, மனைவிக்கு பரிந்து பதிலும் சொல்லும், தன் மனதை நினைத்து அவனுக்கே வியப்பாக தான் இருந்தது. நாளை அவளை வெளியில் அழைத்து சென்றால் என்ன?
❀✿❀✿❀✿
வழக்கம் போல் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு, பாரதி அழைத்த போது, அமைதியாக உணவும் முடித்து விட்டு, அவள் மற்ற வேலைகளை முடித்த பிறகு அவளிடம் பேசுவது என முடிவு செய்து தொலைகாட்சியில் எதையோ ஓட விட்டு காத்திருந்தான்