காலத்திலேயே இந்த வேலையை விட்டு வேறு வேலைகள் தேடிக்கொள்ள எத்தனை விதமான வழிகள் இருக்கின்றன என்பதை அவன் சக பயிற்சி மாணவர்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
"நெறைய நேரம் இருக்கும் அன்பு. சாயந்திரத்தில ஒரு "டைரக்ட் செல்லிங்" வியாபாரம் ஆரம்பிச்சிட்டா ஒரு மாசம் ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலாம்." எம்வே, ஷேக்லீஸ், ரோஹினி, அடிபிடிக்காத அலுமினியப் பானை, நீர் வடிகட்டும் கருவி எல்லாவற்றையும் காட்டினார்கள்.
"இன்சூரன்ஸ¥க்கு ஆள் பிடிச்சிக் குடுத்தா ஒவ்வொரு ஆளுக்கும் கமிஷன் மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். செய்றியா? எனக்குத் தெரிஞ்ச ஏஜன்ட் இருக்கார். சொல்லட்டுமா?"
"எப்படியாச்சும் ம.இ.கா.வில சேந்திடு அன்பு! ஒரு வருஷத்தில ஒரு கிளைய கேட்டு வாங்கிடலாம். அப்புறம் அப்படியே தலைவருக்கு நெருக்கமாயிட்டா, அப்பறம் என்ன? தலைமை ஆசிரியர் மூக்கில விரல விட்டு ஆட்டிடலாம்!"
எந்த ஆண்பிள்ளைக்கும் ஆசிரியர் வேலையில் அர்ப்பணிப்போடு இருந்து இந்த "பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்ள" உதவ வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கவில்லை. சில பயிற்சி ஆசிரியைகள் மட்டுமே இந்தப் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று இந்த ஏழைத் தமிழ்ப் பிள்ளைகளை எப்படியாவது உயர்த்தி இந்த சமுதாயத்தைத் தூக்கி விட வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
அன்பரசனுக்கும் இது தன் வாழ்க்கையில் ஒரு தற்காலிகக் கட்டம் என்றுதான் தோன்றியது. இந்த வேலை ஒரு கண்ணியைப் போல. எப்படியோ வந்து மாட்டிக் கொண்டோம். விரைவில் காண்டிராக்டை முடித்துக் கொண்டு இதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.
ஆறாம் வகுப்பில் ஆசிரியர் இன்னும் வந்திருக்காத காரணத்தால் சத்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. வகுப்புக்குள் நுழைந்த போது "நான் ஒருதரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி" என்று ஒரு மாணவன் ரஜனிகாந்த் வசனம் பேசிக்கொண்டிருந்தது தெளிவாக விழுந்தது.