"உன் பேர் கருணாநிதி]யா? பையன்னு நெனச்சனே!"
வகுப்பு கலகலவெனச் சிரித்தது. மெலிந்த பெண் வெட்கத்துடன் நின்றாள்.
"அவங்கப்பா ஆம்பிள புள்ள பொறக்கும்னு நெனச்சாராம் சார். பொம்பிள பிள்ள பொறந்ததும் அதே பேர வச்சிட்டாரு" என்றான் ஒரு சுட்டி மாணவன். வகுப்பு மீண்டும் கலகல.
"காயத்ரி!"
"உள்ளேன் சார்!" நின்று உட்கார்ந்தாள். பளிச்சென்று இருந்தாள். வட்டமான முகம். அதிலே அடக்கமான சாந்துப் பொட்டு. இரட்டைச் சடை. கண்களில் ஒரு புத்திசாலித்தனம். இங்கே இப்படி ஒரு பெண்ணா?
*** *** ***
காயத்திரியின் கையெழுத்து அவள் முகம் போலவே பளிச்சென்றிருந்தது. அவள் எழுதியிருந்த கட்டுரையில் கருத்துக்கள் கோவையாக இருந்தன. ஆனால் எழுத்துப் பிழைகள் சகிக்க முடியவில்லை.
அந்த ஆண்டு யூபிஎஸ்ஆர் உட்காரவிருக்கும் அந்தப் பதினெட்டு பேரில் பத்துப் பேர் தேர்ச்சியடைந்தாலே பெரிய விஷயம் என்று அந்த ஒரு வாரத்தில் அன்பரசனுக்குத் தெளிவாகிவிட்டது. அதிலும் அவர்களுக்குப் பாடத்தை இன்னும் தீவிரப் படுத்தினால்தான் முடியும். மிகை நேரப் பாடம் நடத்த வேண்டும். இரண்டு பிள்ளைகள் பல "ஏ" வாங்கும் தரத்தில் இருந்தார்கள். ஒருத்தி காயத்ரி. மற்றவன் அம்பலவாணன்.
பிள்ளைகளுக்கு மாலையில் டியூஷன் நடத்தும் விஷயம் பற்றி ஒருநாள் இடைவேளை ஓய்வின் போது சில சக ஆசிரியர்களிடம் பேசினான். அநேகமாக அனைவருக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் பிற்பகல் மாலை வேளைகளில் ஏதாவது ஒரு வெளிவேலை அவர்களுக்கு இருந்தது. ஓய்வில்லை என்றார்கள்.