அன்பரசன் அவள் அருகே போனான். பேசினான்: "காயத்ரி! கணக்குப் போட்டது போதும். புத்தகத்தை எடுத்து வை! உங்கிட்ட கொஞ்சம் நான் பேசணும்!" என்றான். சிரிப்பு மாறாமல் புத்தகத்தை எடுத்து வைத்தாள். ஒரு காதல் உரையாடலுக்குத் தயாரானவள் போல் இருந்தாள்.
"காயத்ரி! இப்பல்லாம் உன் கவனம் படிப்பில இருக்கிறதா தெரியில. கவனம் சிதறுது. கற்பனையிலேயே இருக்கிற. இதுக்கு என்ன காரணம்?"
"உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!" என்பது போலத் தலை குனிந்து அர்த்தத்தோடு இமைகள் படபடக்கச் சிரித்தாள்.
"இதப் பாரு. உன் மனசில நீ நெனச்சிருக்கிறது என்னன்னு எனக்குக் கொஞ்சம் தெரியுது. ஆனா அந்த அசிங்கத்துக்கெல்லாம் நான் ஆளில்ல. எனக்கு உன் மாதிரி உன் வயசில ஒரு தங்கச்சி இருக்கு. அதுவும் நீயும் எனக்கு ஒண்ணுதான்!"
காயத்ரி நிமிர்ந்து பார்த்தாள். புன்னகை மறைந்து விட்டது. தட்டுத் தடுமாறிச் சொன்னாள்: "சார் நான் உங்கள..."
"காதலிக்கிறேன்னு சினிமா வசனம் பேசப் போறியா? தோ பாரு! இந்த மாதிரி நெனப்பெல்லாம் விட்ரு! இதெல்லாம் விடாம சினிமாவும் வீடியோவும் பாக்கிறதினால வர்ர வீண் நினைப்பு. வாழ்க்கைக்கு உதவாது. விட்டுத் தொலை! படிப்பில கவனத்த செலுத்து! யூபிஎஸ்ஆர் நல்ல முறையில பாஸ் பண்றதப் பார்!" என்றான்.
"சார்! என் மனசுக்குள்ள நான் உங்களத்தான்...!" என்று இழுத்தாள்.
இந்த எண்ணம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தெரிந்தது. இந்தப் பருவத்தில் இந்தக் காதல் மண்ணாங்கட்டி ஆசைகள் ஒட்டுப்புல்லைப் போல பரபரவென்று மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. யார் எவர் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கிறது. நெருங்குவதும் உரசுவதும் இருந்தால் போதும் பற்றிக் கொள்ள. தன் மனதிலும் கூடத்தான் பற்றுகிறது. ஆனால் தனக்கு அதைப் பிய்த்து எரியும் பக்குவம் இருக்கிறது. அவள்