பண்ணிட்டியேன்னு நான் ஒன்ன அணைச்சிக்கிட்டு அழுது சமாதானம் ஆயிடலாம். ஆனா ஒரு வாரம் போனா எல்லாம் சகஜமா போயிடும். ஒனக்குக் கூட்டாளிங்க வந்திருவாங்க. பழைய ஆசைங்க எல்லாம் வந்திரும். அம்மாவ ஏமாத்திறது எவ்வளவு சுலபம்னு ஒனக்குந் தெரியும். ஒனக்கு கைவந்த கலைதான. ஆகவே எல்லாம் மிந்தியப் போலத்தான் நடக்கும். பிரயோஜனமில்லப்பா!"
அதிர்ச்சியடைந்து அவளைப் பார்த்தான். "இல்லம்மா! நான் உண்மையிலேயே திருந்திட்டேன்!"
"அப்படியா? எவ்வளவு நேரமா திருந்தியிருக்க? இதோ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சு போச்சின்னு நெனச்சவுடனே பல வருஷங்களா இருந்த கெட்ட பழக்கத்த உட்டு ஒரு நிமிஷத்தில திருந்திட்டியா? அவ்வளவு சீக்கிரம் திருந்தினவன் மறுபடி கெட்டுப் போறதுக்கு எவ்வளவு நேரம்பா வேணும்?"
அம்மா குரல் அடைக்க அடைக்க மிக மெதுவாகப் பேசினாள். அவளால் உரத்துப் பேச முடியவில்லை. கோபத்தைக்கூடக் காட்ட முடியவில்லை. பலவீனமான தொனியில் அளந்து அளந்து பேசினாள். ஆனால் அவன் இதயத்தைக் குறி வைத்து குறி வைத்து அடித்தாள்.
"என்ன என்னதாம்மா பண்ணச் சொல்ற?" அழுதான்.
"ஒண்ணும் பண்ண வேணாம் முத்தையா. எதுவும் பண்ணிப் பிரயோஜனமில்ல! நீ விரும்பின வழியில நீ போகலாம். என்ன என் வழிக்குப் போக விடு!" மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
"ஹீம்" என்று குரல் விட்டுக் கேவி அழுதான். "வேணாம்மா! அப்படிப் பேசாத. நீ போயிட்டா எனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதி?"
அவனைப் பார்த்தாள். "உனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதிங்கிறத நீதான் தீர்மானிச்சிட்டியே தம்பி! உங்கப்பா காட்டின வழிதான் உனக்கு வாய்ச்சிருக்கு. நீ இப்படியே போனா இந்தக் குடும்பம் முன்னேற முடியாம பாழாத்தான் போகும். நான் உயிரோட இருந்தாலும் இல்லைன்னாலும் இப்படித்தான் நடக்கும். ஆகவே இதையெல்லாம் பாக்காம நான் சீக்கிரமே போயிடலான்னு முடிவுக்கு வந்திட்டேன். ஒங்க தலைவிதிப்படி ஒங்க விருப்பப்படி நடக்கட்டும். நீ என்னுடைய கட்டுப்பாட்டில இல்ல. முழுக்க முழுக்க உன் நண்பனோட கட்டுப் பாட்டில