தற்செயலாய் அவன் அத்தை சொல்ல
தகவல் அறிந்ததும் உள்ளம் பதற
அவள் தவத்திற்கு வரமளிக்கவோ
ஆதித்யா உதயமானானோ (37)
இவள் செயல் யாவும் கேட்டறிந்தான்
இப்படியும் ஒருத்தியா அவன் வியந்தான் (38)
பொன்மேனி உருக்குலைந்து
ஒளிர்ந்த வதனம் இருள் படிந்து
விழிகள் மட்டும் சுடர் விட்டு
வழி பிறக்கும் என்ற நம்பிக்கை நிறைத்து (39)
வார்த்தைகள் பேசவில்லை
வாய்மொழிகள் தேவையில்லை
கண்கள் அகத்தின் சாளரம்
கண்டான் அங்கு அவன் முகம் (40)
தோல் சுருண்டு நகம் கழன்று
கருங்கூந்தல் உதிர்ந்து உடல் மெலிந்து
மரித்தே விட்ட அந்நிலையிலே
மயங்கினான் அவள் அபூர்வ அழகிலே (41)
பல்லாயிரம் அழகு மங்கைகள் காத்திருக்க
பாரெங்கும் இவன் பார்வைக்கு தவமிருக்க
மண்டியிட்டான் அவள் காலடியிலே
மங்கைக்கு உணர்த்தினான் தன் காதலையே (42)
காற்றின் வேகத்தில் நடத்திவிட்டான்
காரிகையை அவனும் மணந்து கொண்டான்
கணவன் என்ற உறவாய்
கையெழுத்திட்டான் முறையாய் (43)
அவள் அன்னைக்கு சொன்னான் தைரியம்
அவள் ஆராய்ச்சி வெற்றி நிச்சயம்
என் புவியோடு வாழ்வேன் பலகாலம்
எனது காதல் மேல் இது சத்தியம் (44)
அவனின் வானளவு உயரம்
அவன் செயல் உலகமெங்கும் பரவும்
செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள
சரமாரியாய் கேள்விக் கணைகள் பொழிய (45)
இதுவரை கண்டதில்லை
இலக்கியமும் சொன்னதில்லை
இவளை விட ஒரு பேரழகி
இனி பிறந்து வரவும் சாத்தியமில்லை (46)
ஆரோக்கியமாய் மனித குலம் தழைக்க
தன்னையே தாரை வார்க்க
அவள் அருஞ்செயல் தெரிவித்தான்
தன்னவளை பெருமையாய் அறிமுகம் செய்தான் (47)
அறிந்தனர் அனைவரும்
அபூர்வாவின் ஆராய்ச்சி
உலக மக்கள் கவனம்
புதிய மருந்தினை நோக்கி (48)
மருந்தின் செயல்பாடு
அவள் உடல் மாற்றத்தில் வெளிப்பாடு (49)
இரண்டே வாரம்
புற்றரிக்கும் அணுக்கள்
அடியோடு மறைந்த மாயம் (50)
மூன்றே திங்கள்
துவண்ட தேகம்
புதிதாய் பிறந்த துள்ளல் (51)
இதன் சிறப்பம்சம்
மருந்தின் கலவை
இயற்கை சாராம்சம்
பக்கவிளைவு பயமில்லை (52)
உலக சுகாதார இயக்கம்
அளித்தது மருந்துக்கு அங்கீகாரம் (53)
பாரதம் என தமிழில்
பதிவு செய்தாள் உரிமத்தில்
மொழியும் நாடும் உலகெங்கும்
மருந்தின் வழியே சிறப்பு பெறும் (54)
உலகெங்கும் பாரதம் மருந்து
இலவசமாய் கிடைக்கும் பொருட்டு
முதலீடு தயாரிப்பு ஏற்றான் கணவன்
மனையாள் கனவை நனவாக்கும் துணைவன் (55)
மருத்துவத்தின் சிறந்த கண்டுபிடிப்பு
நோபல் பரிசு அவளுக்கு என அறிவிப்பு (56)
நேர்காணல்கள் ஊர்வலம்
கேள்விகள் முடியும் தருணம்
அழகு கூட திரும்பிவிடும் என்று
உங்களை காணும் போதே நிரூபணம்
நிருபர் கூற மறுத்தது அவள் வாதம் (57)
இன்றைய தோற்றம் பொலிவான வடிவம்
உங்கள் பார்வையில் அழகின் உறைவிடம்
அன்று பிணியின் பிடியில் கருகிய மலராய்
இரு கண்களுக்கு மட்டும் அபூர்வ அழகாய் (58)
அழகு பொருளிலா
அழகாய் காணும் பார்வையிலா (59)
என்னவன் உணர்வில் என்னவன் செயலில்
என்னவன் விழிகளில் என்னவன் இதயத்தில்
என்னவன் அன்பில் என்னவன் காதலில்
எந்நிலையிலும் நான் அழகு
என்றும் எப்போதும் நான் அழகு (60)
“அவனால் நான் அழகு”
உலகமெங்கும் புற்று நோயோடு போராடும் அனைவருக்கும் இக்கவிக் கதை அர்ப்பணம்
தோழமைகளே!! மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிக்கதையோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சில சொந்த நிகழ்வுகளால் அக்ஞான வாசம் இருந்த என்னை நிழலாய் தொடர்ந்து உற்சாகம் கொடுத்து மீண்டும் துடிப்போடு கவிதைகள் புனைய வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி...
எப்போதும் எந்நிலையிலும் என்னை அழகாய் உணரச் செய்த இரு விழிகளின் அருள் பார்வை எந்நாளும் எனை தொடரும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு கவிக்கதையோடு வருகிறேன்