என்றும் இல்லை தேய்பிறை - வத்சலா
This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.... ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையை போல் அவளும் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.... பெற்றவர்கள் பேசி திருமண தேதியும் நிச்சியதிருந்தார்கள்...இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.... இப்போதும் கூட அவன் முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.... ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது.. அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்... அது அவளே தான்...!!!
அதிர்ச்சி கடலில் விழுந்தவனாக அந்த பைக்கையே பார்த்திருந்தான் கெளதம். அந்த பைக்கை செலுத்திக்கொண்டிருந்தவனின் மீது அவன் பார்வை பதிந்தது. அவனுடைய அதிர்ச்சிக்கு காரணம் அந்த பைக்காரனே!!!! பற்றி எரிந்தது கௌதமின் இதயம். அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்தவனையும் நன்றாக தெரியுமே கௌதமுக்கு. அவன் கார்த்திக்!!!!
இவனுக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்???? மிகப்பெரிய கேள்வி எழுந்தது அவன் மனதிற்குள். ஒரு பெண் ஒரு ஆணுடன் பைக்கில் பயணம் செய்துவிட்டால் இருவரையும் இணைத்து விதவிதமாக கற்பனை செய்யும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டவன் இல்லை கெளதம்.
ஆனால் இங்கே நடந்துக்கொண்டிருக்கும் கதை வேறு!!!! அவன் தெரிந்துக்கொண்டே ஆகவேண்டும். அவனுக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம் என அவன் தெரிந்துக்கொண்டே ஆகவேண்டும்!!!!
அண்ணனா???? வேறே ஏதாவது உறவுக்காரனா???? இல்லை உயிர் நண்பனா??? தெரிந்துக்கொண்டே ஆக வேண்டும்.!!!! அவர்கள் இருவருக்கும் தெரியாமல், கொஞ்சம் இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்ந்தான் கெளதம்.
அவள் சௌம்யா.!!!! அவளை அவன் பார்த்து சரியாக ஒரு மாதம் தான் ஆகிறது. ஒரு தரகரின் மூலமாக கிடைத்த அவளின் ஜாதகம் அவனுடைய ஜாதகத்துடன் ஒத்துப்போக, கௌதமுக்கும், சௌம்யாவுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக, நிச்சயிக்க பட்டது தான் அவர்கள் திருமணம்.
அதற்கு பின் அவளது அன்பும், குணமும் அவனை மொத்தமாக ஆட்கொண்டதும் நிஜம். அடுத்த வாரம் திருமணம்.!!!!! இந்த நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் அந்த ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர். இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான் கெளதம். சிரித்து மகிழ்ந்து ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தாள் அவள். சில நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் என்ன சம்மந்தம் என புரிந்து விட்டது கௌதமுக்கு. கனலான மனதுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் கெளதம்.
வீட்டுக்கு வந்த பிறகும் ஆறவில்லை அவன் மனம். 'சொல்லிவிடலாமா அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா? 'இப்போது வேண்டாம்' என்றே தோன்றியது அவனுக்கு.
'அந்த கார்த்திக்கும் அவன் குடும்பமும், இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் கொடுத்த வலியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? அதே வலியை அவர்களும் அனுபவிக்க வேண்டாமா? அப்படி என்றால் இந்த பிரச்சனைக்கான விடை என்ன? திருமணத்தை நிறுத்தி விடுவதா????'
நினைக்கும் போதே சுரீரென வலித்தது கௌதமுக்கு. 'இல்லை அது நடக்காது. ஒரே மாதத்தில் தனது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்ட சௌம்யாவை அழவைக்கும் எண்ணம், விட்டுக்கொடுக்கும் எண்ணம் சத்தியமாக இல்லை அதுவும் இல்லாமல் .நடந்ததில் அவள் தவறு எதுவும் இல்லையே.???'
யோசித்து யோசித்து இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தான் கெளதம். நாளைக்குள் அதை செயல்படுத்திவிடும் எண்ணத்துடன் உறங்கிப்போனான் அவன்.
மறுநாள் திங்கட்கிழமை காலை அலுவலகத்தை அடைந்ததும் முதல் வேலையாக சௌம்யாவை அழைத்தான்.
'குட் மார்னிங் கௌஸ்...' என்றது மறுமுனை. இதற்கெல்லாம் ஒன்றும் குறைவே இல்லை. கொஞ்சம் பற்றிக்கொண்டுதான் வந்தது அவனுக்கு.
'ம்..' என்றான் அடிக்குரலில்.
'என்ன 'ம்'? மூட்லே இல்லையா?'
'நேத்து செம ஷாப்பிங் போல,,' நேரடியாக விஷயத்துக்கு வந்தான் கெளதம். 'நேத்து நான் உன்னை ஷாப்பிங் மாலிலே பார்த்தேன்.
'அப்படியா? நான் உங்களை பார்க்கவே இல்லையே???. ஏன் கெளதம் என்கிட்டே பேசாம போயிட்டீங்க?
'கேட்கிறாள் பார் கேள்வி'!!!!! 'உன்னை மட்டும் இல்லை. உன் கூட இருந்தானே அவனையும் பார்த்தேன். அதான் பக்கத்திலேயே வரலை.'
சட்டென்ற மௌனம் அவளிடம். 'ஓ!!! என்னுடன் அவனும் இருந்தானோ??? அதை மறந்து போனேனே?'
அது... அவன் என்னோட...'
'அவன் யாரு???. அவன் உனக்கு என்ன வேணும்??? எல்லாம் எனக்கு தெரியும்..... அதுக்கு மேலே அவன் எனக்கு என்ன செஞ்சிருக்கான்னு உனக்கு தெரியும் அப்படிங்கறதும் எனக்கு தெரியும்..' அவன் குரலில் அப்படி ஒரு காரம்.
'கெளதம் அது...'