'உண்மையை சொல்லு. நான் உன்னை பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடியே உனக்கு எல்லாம் தெரியும் தானே?'
'தெ... தெரியும்...' அவளிடம் கொஞ்சம் நடுக்கம்.
'ஸோ.... எல்லாரும் பிளான் பண்ணி எங்களை ஏமாத்தி இருக்கீங்க. எங்க கிட்டே இருந்து எல்லாத்தையும் மறைச்சு இருக்கீங்க அப்படித்தானே?'
'அப்படி இல்லை கெளதம்... இந்த கல்யாணம் ஆனா எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும்ன்னு...'
'பார்ரா...' என்றான் கெளதம் எள்ளலாக 'அது எப்படி சரியாகும்.??? இனிமே எல்லாம் ஜாஸ்தி தான் ஆகப்போகுது. நான் யாரையும் சும்மா விடறா மாதிரி இல்லை.'
'கெளதம்... எது எப்படி போனாலும் நீங்கதான் எனக்குன்னு நான் உறுதியா முடிவு பண்ணிட்டேன் கெளதம். இந்த ஒரு மாசத்திலே என் மனசு முழுக்க உங்களை நிரப்பி வெச்சிருக்கேன் கெளதம்.
'அட இந்த டயலாக் நல்லா இருக்கே...'
'ப்ளீஸ்... கெளதம்...வேறே என்ன வேணுமானாலும் திட்டுங்க. நான் கேட்டுக்கறேன். ஆனா என் மனசை, என் காதலை மட்டும் கேலி பண்ணாதீங்க. எனக்கு எல்லாமே நீங்கதான் நினைச்சு இருக்கேன். சத்தியமா கெளதம்....' அவள் குரல் கொஞ்சம் கரைய கொஞ்சமாக இளகினான் கெளதம்.
'நிஜமாவா?' தழைந்தது அவன் குரல்.
'சத்தியமா கெளதம்...'
'சரி அதையும் பார்ப்போம். ஈவினிங் ஆறு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன். அப்போ நீ என்ன சொல்றேன்னு. பார்க்கறேன்.
மாலை சரியாக ஆறு மணி. சௌம்யாவின் வீட்டுக்குள் நுழைந்தான் கெளதம். அவனது கையில் ஒரு கவர். அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவன் வரும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாரும் அந்த வீட்டு கூடத்தில் இவனுக்காக காத்திருந்தனர்.
அவளது அம்மா அப்பா உட்பட அனைவரும் இவனை பார்த்தவுடன் மௌன சிலைகளாக எழுந்து நிற்க அவனது கத்தி முனை பார்வை எல்லாரையும் உரசி சென்றது .யாராலும் எதுவும் பேச முடியவில்லை. எப்படி பேசுவார்களாம்???
சௌம்யாவின் பக்கம் திரும்பியவன் அவளிடம் அந்த கவரை நீட்டினான்.
'நீ போட்டிருக்கிற நகை எல்லாம் கழட்டி வெச்சிசிட்டு இந்த டிரெஸ்ஸை மாத்திட்டு வா. நாம கிளம்பலாம்...' ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு கவரை வாங்கிக்கொண்டாள் சௌம்யா. சின்ன திருப்தியான புன்னகை கௌதமிடம்.
'கெளதம் ...' கார்த்திக்கின் குரல் மெல்ல ஒலிக்க விருட்டென அவனை நோக்கி நீண்டது கௌதமின் ஆள்காட்டி விரல்.
'நாங்க கிளம்பறவரைக்கும் நீ வாய் திறக்காம இருந்தேனா உன் மரியாதை கெடாம இருக்கும்...' பெருமூச்சுடன் தலை குனிந்தான் கார்த்திக்.
'ஸோ... இந்த கல்யாணம் நடந்தா எல்லா சரியாயிடும்னு எல்லாரும் கணக்கு போட்டு இருக்கீங்க இல்லையா?' சின்ன கேலி சிரிப்புடன் இடம் வலமாக தலை அசைத்தான் கெளதம். 'அது எப்படிங்க சார் அவ்வளவு ஈஸியா முடிவு பண்ணிட்டீங்க?
'இந்த கல்யாணம் நிச்சியம் பண்ண தேதிலே, நிச்சியம் பண்ண இடத்திலே கரெக்டா நடக்கும். ஆனா நீங்க யாரும் கல்யாணத்துக்கு வரப்போறதில்லை' அவன் சொல்ல சௌம்யா உட்பட அனைவரும் பேரதிர்ச்சியில் முழுகினர்.
'அட.. என்னப்பா இது எல்லாரும் இப்படி ஷாக் லுக் கொடுக்கறீங்க. என்னை பொறுத்த வரைக்கும் இதுதான் ரொம்ப நியாயமான தீர்ப்பு. இத்தனை வருஷம் நாங்க எல்லாரும் எவ்வளவு வலியை அனுபவிச்சு இருப்போம்??? அதுக்கு நீங்க எல்லாரும் பதில் சொல்ல வேண்டாமா?' என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து அந்த செக்கை எடுத்து அங்கிருந்த டீ பாயின் மீது வைத்தான்.
'இது நான் கையெழுத்து போட்டிருக்கிற ப்ளாங் செக். நீங்க இதுவரைக்கும் இந்த கல்யாணத்துக்காக செலவு பண்ணி இருக்கிற தொகையை இதிலே நிரப்பிக்கலாம். என் கல்யாணத்தை எப்படி நடத்திக்கறதுன்னும் எனக்கு தெரியும். என் பொண்டாட்டியை எப்படி பாத்துக்கறதுனும் எனக்கு தெரியும்.'
கற்சிலையாக நின்றிருந்த சௌம்யாவின் பக்கம் திரும்பினான் கெளதம்.
'நான் என் முடிவை சொல்லிட்டேன். உனக்கு நடந்தது எல்லாம் தெரியும். தப்பு செஞ்சவங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனை இது தான்னு நான் நினைக்கிறேன். நவ் தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ். இதிலே உனக்கு உடன்பாடு இல்லைனா. நான் இப்படியே கிளம்பறேன்.'
சில நொடி யோசனை அவளிடம்.....
'கொஞ்சம் இருங்க கெளதம். நான் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்...; சொல்லிவிட்டு நகர்ந்தாள் சௌம்யா.
சில நிமடங்களில் சௌம்யாவும், கௌதமும் அந்த வீட்டை விட்டு வெளியேற கார்த்திக், சௌம்யாவின் அப்பா, அம்மா மூவரின் இதயமும் துவண்டு போய் இருக்க.....
இவர்கள் இல்லாமல் இன்னொரு ஜோடி கண்களும் கண்ணீரை தாங்கி நின்றன. தான் அங்கேயே நிற்பது தெரிந்தும் கெளதம் தனது பக்கம் ஒரு முறை திரும்பக்கூடவில்லையே என்ற வலியில் உடைந்து போய் நின்றது அந்த இதயம்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தான் கெளதம். அவன் பின்னால் தயக்கம் கலந்த நடையுடனும், தவிப்பான பார்வையுடனும் சௌம்யா. நடந்ததை அங்கே இருந்த அவனது அப்பா, அம்மா தங்கை வித்யா என மூவருக்கும் விளக்கினான் கெளதம்.