அவன் செய்ததில் அப்பாவுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை.
'சரி விடுடா. இப்போ எதுக்கு பழசையெல்லாம் கிளறிட்டு.??? எல்லாத்தையும் எல்லாரும் மறந்திடுவோம் அதுதான் நல்லது..'
'முடியாதுபா... ' என்றான் உறுதியாக. 'எத்தனை நாள்... எத்தனை நாள் உங்க யாருக்கும் தெரியாம நான் தனியா பாத்ரூம்லே அழுது இருக்கேன் தெரியுமா? என்னாலே யாரையும் மன்னிக்க முடியாது. அனுபவிக்கட்டும். அவங்களும் அனுபவிக்கட்டும்.'
தளர்ந்து போன நேரத்தில் அவரையும் குடும்பத்தையும் தாங்கி நிறுத்தியவன் கெளதம். அவன் சொல்வதை மறுத்து பேசும் அவனை நோகடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.
'சரி நடப்பது நடக்கும்படி நடக்கட்டும்...' எல்லாருமே மௌனமானார்கள்.
மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று மாலை கௌதமின் வீட்டுக்குள் புயலென நுழைந்தாள் அந்த பெண். அவள் ப்ரியா. அன்று கெளதம் தனது பக்கம் திரும்ப மாட்டனா என்று தவித்துப்போய் நின்ற இதயத்துக்கு சொந்தக்காரி.
அவளை பார்த்ததும் அத்தனை பேரும் கொஞ்சம் திகைத்துப்போக, புருவங்கள் உயர ஒரு முறை அவளை பார்த்தவன் பார்வையை திருப்பிக்கொண்டு அவளை கொஞ்சம்கூட கண்டுக்கொள்ளாதவனாக ரிமோட்டை இயக்கிக்கொண்டிருந்தான் கெளதம். அவன் முன்னால் சென்று நின்றாள் ப்ரியா
'தப்பு செஞ்சவ நான். எனக்கு என்ன தண்டனை வேணுமானாலும் குடு. அவங்களை எல்லாம் எதுக்கு தண்டிக்கிற..' அவள் பேசிக்கொண்டிருக்க டி.வி.யை விட்டு அகலவில்லை அவன் பார்வை.
'உன்கிட்டே தான் பேசிட்டிருக்கேன்... என்ன நினைச்சிட்டு இருக்கே நீ? பெரிய நாட்டமை மாதிரி தீர்ப்பு வழங்கிட்டு வந்திட்டே அங்கே எல்லாரும் எப்படி அழுதிட்டு இருக்காங்க தெரியுமா...'
ரிமோட்டை சோபாவின் மீது போட்டுவிட்டு எழுந்து அவள் முகத்தை நேராக பார்த்தான் கெளதம்
'அய்யோ பாவமே... அழறாங்களா எல்லாரும்??? நாங்க யாரும் வாழ்க்கையிலே அழுததே இல்லைமா. அதனாலே எங்களுக்கு அழுகைன்னா என்னனே தெரியாது. அழறதுன்னா..... இந்த கண்ணிலே தண்ணி வருமே அதானே??? சரி போ... நீ போய் எல்லார் கண்ணையும் துடைச்சு விடு...போ.... ' அலட்சியமாக சொல்லிவிட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் கெளதம்...
'இது நல்லா இல்ல...'
'எது நல்லா இல்ல? நாலு நாள் அவங்க அழுதா உன்னாலே தாங்க முடியலையே?? நாலு வருஷம். முழுசா நாலு வருஷம். நாங்க இருக்கோமா செத்தோமான்னு கூட உனக்கு தெரியாது. இப்போ எந்த தைரியத்திலே இந்த வீட்டு படி ஏறி வந்தே????.' அவன் குரல் கொதித்தது.
ப்ரியா!!!! கௌதமின் உடன் பிறந்த தங்கை ப்ரியா. அவனுக்கு இரண்டு தங்கைகள் மூத்தவள் வித்யா. வாய் பேச முடியாத பெண் வித்யா. இளையவள் ப்ரியா.
நான்கு வருடங்களுக்கு முன்னால் ப்ரியா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கிருந்து வந்தானோ? எப்படி விழுந்தாளோ???? கார்த்திக்குடன் காதலில் விழுந்தாள் ப்ரியா. அப்படி ஒரு கண்மூடித்தனமான காதல் அவன் மீது. கார்த்திக் சௌம்யாவின் அண்ணன்.
'படிக்கும் வயதில் எதற்காம் இந்த காதல்? விஷயம் அறிந்து ஓரிரு முறை இருவரையும் கண்டிக்கவும் செய்தான் கெளதம். குடும்ப சூழ்நிலை சரியாகட்டும் அதன் பிறகு நான் எல்லாவற்றையும் சரியாக நடத்தி வைக்கிறேன் என்றும் சொன்னான் கெளதம். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
கௌதமின் குடும்பம் பெரிய வசதியான குடும்பம் இல்லை. அவனது தந்தை வேலையை விட்டு ஒய்வு பெற்றிருந்த நேரம் அது. மூத்த மகனான அவனுக்கும் ஒரு நிரந்தர வேலை கிடைத்திருக்கவில்லை அப்போது.
வாய் பேச முடியாத மூத்த பெண் இருக்கும் பொது கடைக்குட்டியின் திருமணத்தை பற்றி நினைக்க கூடிய முடியாத சூழ்நிலையில் குடும்பம் இருந்த போது திடீரென ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்து நின்றாள் ப்ரியா.
'சத்தியமாக... சத்தியாமாக இதை தாங்கிக்கொள்ளும் அந்த குடும்பத்தில் மனநிலையில் யாருமே இல்லை. கொதித்து, துடித்து போனார்கள்.'
கோபத்தின் எல்லையில் வெடித்தார் அப்பா. எதுவுமே அவர்களை பாதிக்கவில்லை.
'நம்ம குடும்ப சூழ்நிலை எப்போ சரியாகும்ன்னு எனக்கு தெரியலைண்ணா அதுவரைக்கும் எங்களாலே காத்திருக்க முடியாது. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவங்க வீட்டிலேயும் சொல்லலை. அங்கே போவோம். அவங்க ஏத்துக்கிட்டா சரி. இல்லைனானாலும் பரவாயில்லை. இவர் ஒரு நல்ல வேலையிலே இருக்கார் நாங்க சமாளிச்சுப்போம்' வாசல் படி தாண்டி நடந்தாள் ப்ரியா. .
அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள் இருவரையும். காதலை ஏற்றுக்கொண்டவர்கள் தெய்வமாகிப்போனார்கள். குடும்ப சூழ்நிலை அழுத்தி பிடிக்க தளர்ந்து போய் நின்றவர்கள் வில்லன்களாகி போனார்கள்.
அதன் பிறகு ஒரு தொலை பேசி அழைப்புக்கூட வரவில்லை அவளிடமிருந்து. அவளை தேடி சென்று பார்க்கும் மனநிலை யாருக்கும் அப்போது இல்லை. அவர்கள் வீட்டில் இருப்பவர்களில் கார்த்திக்கை தவிர வேறே யாரையும் பார்த்தது கூட இல்லை இவர்கள்.
ப்ரியா என்றால் அவனுக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு. அதனால் தானோ என்னவோ அவள் செய்த இந்த காரியத்தை அவனால் மன்னிக்கவே முடியவில்லை. அவளோடு சேர்த்து அவள் குடும்பத்தினரையும் மன்னிக்க முடியவில்லை.