‘இவ ஒண்ணுமே செய்யாமலா அவன் ஆசிட்டை எரிஞ்சிருப்பான்’, என்ற மனதை வருத்தும் புற முதுகு பேச்சுகளும்... அவளை மிகவும் கொன்றது! அவள் தன்னம்பிக்கையை குழி தோண்டி புதைத்தது!
இவை எல்லாவற்றிற்கும் முற்று புள்ளி வைக்கும் எண்ணத்தில் தான் படிப்பை முடிக்கும் வரை பர்தாவை போட்டு கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள்!
வினயன் போராட்டம் நடத்திய அன்று கூட மருத்துவரை பார்க்க செல்ல வேண்டியிருந்தது. அதை சொன்னால், தேவையில்லாத விளக்கங்கள் அளிக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் சென்று வர நினைத்தாள்!
ஆனால், இப்படி வினயன் தன்னை துரத்துவான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை அவள்..
அவன் அறைந்த வேகத்தில், கீழே விழுந்தவளின் முகத் திரை விலகி, அவள் சிதிலமடைந்த உருவம் வெளிப்பட, அதைக் கண்டு தான் இவன் ஸ்தம்பித்து நிற்கிறான் என்பதை கூட ஆராயவில்லை அவள்!
தன் பெண்மையை களவாட போகிறானோ என்ற எண்ணமே மேலோங்க,
ஆண் வர்கத்தின் மீதிருந்த வெறுப்பில், “பிணந்தின்னி கழுகுகளா!”, என்று விழித்து தன் குமுறலைக் கொட்டி தீர்த்தாள். அவள் பேசி முடிக்கும் வரை அதிர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்...
பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாது, சற்று தள்ளி கண் எரிச்சலில் உழண்டு கொண்டிருந்த தன் நண்பர்களை அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அந்த சம்பவத்திற்கு பின், எத்தனையோ முறை அவனை கடந்து சென்றிருப்பாள்! அவள் முகத்திரையையே ஊடுருவது போன்ற ஒரு நிலைத்த பார்வை சில நொடி! அவ்வளவே!!
அந்த பார்வை என்ன சொன்னதோ! கண்டிப்பாக அதில் பரிதாபம் இல்லை என்று மட்டும் இவளுக்கு புரிந்தது! அதுவே நிம்மதியாக இருந்தது!
அவன் நண்பர்கள் கூட அவளைப் பார்த்தால் அமைதியாக சென்று விடுவர். ‘என் உருவத்தைப் பத்தி ஏதாவது சொல்லி இருப்பானோ’, என்று சந்தேகம் வரும் இவளுக்கு!
வினயன் அடாவடித்தனத்தை எல்லாம் தூக்கி போட்டு ஆளே மாறி விட்டான் காது பட வந்த செய்தியை நேரிலே பார்த்து உணர்ந்தாள்..
“லாஸ்ட் இயர்ல எதிர்காலத்தை நினைச்சு பயமும் பொறுப்பும் வந்திடும்!”
அவன் மாற்றத்தை பார்த்து விமர்சித்தனர் அவன் பேராசிரியர்கள். இந்த பேதை பெண்ணிற்கு மனதில் ஓர் ஏக்கம் ..
‘அவன் மாறியது என்னால்.. எனக்காக.. என்று இருக்க கூடாதா’, இந்த எண்ணம் வரும் பொழுது,
‘உன் முகத்தை பார்த்த பின்பு அவனுக்கு அப்படி ஒரு ஆசை வருமா?’, அவளுக்குள் எந்த ஓரத்தில் உட்கார்ந்திருந்த தாழ்வு மனப்பான்மை தலை விரிக்கும். அப்படியே தனக்குள் சுருண்டு கொள்வாள்.
வினயன் பேட்ச் மாணவர்களுக்கு ஜூனியர்கள் நடத்திய பிரிவு உபச்சார விழாவில் அவள் அருகில் தான் இருந்தான்! அவள் பேட்ச்சில் இருந்த அத்தனை பேரிடமும் பேசியவன், அப்பொழுதும் இவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை!
அதன் பின், வருடங்கள் ஓட ஓட அவளுக்கு தோன்றும்...
‘இந்த நேரம் குடும்பம், குழந்தைன்னு செட்டில் ஆகியிருப்பியோ! என்னமோ போ! நீ என்னை விட்ட லுக் மட்டும் புரியவே இல்லை! ஃபேர்வெல் அன்னைக்காவது நான் அதை உன்கிட்ட கேட்டு இருக்கணும்! எப்பவாவது என்கிட்ட மாட்டினா கண்டிப்பா கேட்பேன்.... பக்கத்தில் உன் வைஃப்வே இருந்தா கூட !’
அவன் முகமும், அந்த பார்வையும் மனதில் இருந்து அகலாமல் அவளை தொல்லை செய்ய, மானசீகமாக அவனிடம் பேசிக் கொள்வாள்.
ஆனால், இன்று இதோ.. உன் கண் முன் உட்கார்ந்திருக்கிறான்! உன்னைக் கண்டதும் அழுகிறான்! சிரிக்கிறான்! சுட்டும் விழிச் சுடர் என்கிறான்! கண்ணம்மா என்கிறான்! இதை ரசிக்காமல் உன் சுட்டு பொசுங்கிய தேகத்தை நினைக்கிறியே!!!! இன்று தானே தன்னம்பிக்கை வந்து விட்டது என்று பர்தாவை தூக்கி போட்டாய்!
அறிவு உரைக்க.. அன்பில் தோய்த்து பாரதியின் வார்த்தைகளை அவன் உரைத்த விதம்... அவள் மனதை ஆக்கிரமித்த வலியை இதமாய் கரைத்தது!
அன்பு எந்த ஒரு காயத்தையும் ஆற்றி விடும் என்று சொல்வார்களே?? அது இது தானோ??
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவன் மடியில் இருந்த குழந்தையை! பக்கத்தில் ஒரு பெண் - அவன் மனைவியாக இருக்க வேண்டும்!
புரிந்து கொண்டவளுக்கு.. யதார்த்தம் உரைத்தது! இது தான் வாழ்க்கை! வீணான கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே அந்த பெண்ணைப் பார்த்தாள்..