ஆணென்ன பெண்ணென்ன? – விமலா தேவி
This is entry #85 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
“அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே… அவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை… ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்… பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்… இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவுகள் மட்டுமே… இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்… ச்சேச்சே… அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக் பயணம் செய்வதாவது… அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்… அது அவளே தான்…!”
சாகித்யா…
இன்னொருவனுடன் தன் இன்றைய காதலி நாளைய மனைவி சாகித்யா பைக்கில் அதுவும் நெருக்கமாக… நினைக்கவே சுரேஷிற்குப் பற்றிக்கொண்டு வந்தது... கோபத்துடன் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் நேரே வீட்டிற்குச் சென்று விட்டான்…
பைக்கில் ரோகித்துடன் சென்றுகொண்டிருக்கும்போதே, அவள் சுரேஷிற்குப் போன் செய்ய, அவனோ அதை எடுக்கவில்லை கொஞ்சமும்… மீண்டும் மீண்டும் அவள் முயற்சிக்க, அவன் அவளது அழைப்பை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை…
சாகித்யா சென்று கொண்டிருந்த சாலையில் ஒரு ஊர்வலம் வந்து கொண்டிருக்க, அவள் தன்னுடன் வந்த ரோகித்தை பைக்கை நிறுத்த சொல்லிவிட்டு, தான் இங்கிருந்து சென்றுவிடுவதாக சொல்லி அவனை போக சொல்லிவிட்டு நேரே சுரேஷின் வீட்டிற்குச் சென்றாள்…
சாகித்யாவைக் கண்டதும் சுரேஷின் அம்மா முகம் மலர அவளை வரவேற்க, “ஹாய் ஆன்ட்டி… எப்படி இருக்கீங்க?...” என நலம் விசாரிக்க, அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்… அந்நேரம் சுரேஷ் அங்கு வர, “வா…” என ஒப்புக்கு சொல்லிவிட்டு தன் அறைக்கு அவன் சென்றுவிட,
“நீ போய் பேசிட்டிரும்மா… நான் இப்போ வந்திடுறேன்…” என சுரேஷின் அம்மாவும் அவர்கள் இருவரும் பேச வழி செய்து கொடுத்து விட்டு அகன்றார்…
“வேலையா இருந்தீங்களா சுரேஷ்?...”
“ஏன் கேட்குற?...”
“இல்ல நான் உங்களுக்கு போன் பண்ணிட்டே இருந்தேன் நிறைய தடவை… ஆனா நீங்க எடுக்கவே இல்லையா… அதான் கேட்டேன்…”
“ஓ… ஆமா உன் கூட பைக்கில் இருந்தவன் யாரு?...”
“அவன் என்னொட ஃப்ரெண்ட் ரோகித்…”
“எனக்கு இந்த மாதிரி நீ அவனோட பைக்கில் போறதெல்லாம் பிடிக்கலை… ஏன்னா நீ எனக்கானவ…”
“நான் எப்பவும் உங்களுக்கானவ தான் சுரேஷ்… ஆனா அவன் என்னோட ஃப்ரெண்ட்…”
“இருந்துட்டு போகட்டுமே… ஆனா நீ என் வாழ்க்கையில இருக்குறப்போ என்னுடையவளா மட்டும் நீ இருக்கணும்னு நான் நினைக்கிறேன்…”
“என்ன சுரேஷ் இப்படி பேசுறீங்க?.. நான் தான் சொல்லுறேன்ல அவன் என்னோட ஃப்ரெண்ட்னு…”
“நானும் தான் சொல்லுறேன் நீ என்னவள்னு… அதை ஏன் நீ கேட்கமாட்டிக்குற?...”
“எதை சுரேஷ் கேட்கணும்?... அவன் கூட பைக்கில் போறது தப்புன்னு நீங்க சொல்லுறதை நான் கேட்கணுமா?...”
“ஆமா நீ அவனோட பைக்கில் சுத்துறது எனக்குப் பிடிக்கலை…”
“அவன் கூட சுத்துறேன்னு சொல்லுறீங்களே, அவனோட இப்போ நான் யாரைப் பார்க்க கிளம்பினேன்னு உங்களுக்கு தெரியுமா?...”
“யாரை?...”
“உங்களைத்தான் பார்க்க வந்தோம் இரண்டு பேரும்…”
“உன்னையே அவன் கூட பேசாத பழகாதன்னு நான் சொல்லிட்டிருக்கேன்… நீ அவன் கூடவே வந்து என்னை மீட் பண்ண நினைச்சியா?...”
“ஏன் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?.. அவங்க கூட நீங்க பேசமாட்டீங்களா?, பழக மாட்டீங்களா?..”
“நான் பேசுவேன் பழகுவேன்… ஏன்னா நான் ஆம்பளை…”
“ஓ… அப்போ நான் பொண்ணு… அதனால என் மேல உங்களுக்கு சந்தேகம் வருது?.. அப்படித்தான?...”
“ஆமான்னு தான் வச்சிக்கோ… இன்னைக்கு இப்படி இருக்குறவ நாளைக்கும் அவன் கூட பைக்கில் போனா என் மானம் மரியாதை என்னாகுறது?... எனக்கான நீ என் இஷ்டப்படி தான் இருக்கணும்…”