காதலிருக்க பயமேன்- மது
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
(மாமலாடன்; குறுந்தொகை 46)
தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாளென்று கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உளவாதலின் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி யான் ஆற்றுகின்றேன்” என்று தலைவி கூறியது
இந்தக் கதையில் கருத்து வேறுபாட்டால் பிரியும் நாயகன் நாயகியை காதல் இணைத்து வைப்பதை ஓர் கதைக்களத்துடன் சொல்லியிருக்கிறேன்.. இந்தக் கதைக் களம் நீண்ட நாட்களாக என் மனதில் ஓர் புள்ளியாக இருந்து இன்று வடிவம் பெற்றிருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்
சில்லென்ற சாரலில்
சிலிர்த்திட துடித்த தேகம்
சாளரக் கண்ணாடி எதிரியாய் (1)
செம்மண் வாசம் - நாசியில்
சுகமாய் தீண்டிட ஏங்கும்
செயற்கை மணம் ஆட்சியாய் (2)
தூறலின் சங்கீதம் செவியினில்
தேனாய் பாய்ந்திட வேண்டும்
தகர்க்கும் ராக் இசை வேம்பாய் (3)
கான்கிரீட் சுவர்க்குள் அவன் உலகம்
காற்று வெளியிடை இவள் இல்லம் (4)
இணைய வலையில் அவனது லட்சியம்
இயற்கை மடியில் இவளது தனித்துவம் (5)
உரித்தான வாய்ப்புகள் அவன் தேவை
உற்றவர்க்கு வறியவர்க்கு இவள் சேவை (6)
அந்நிய தேசத்தில் இவனது அறுவடை
அன்னை மண்ணிற்கு இவளது பணிவிடை (7)
எண்ணம் எதிர்துருவம்
திருநாமம் தொடுவானம் (8)
முகிலன் - பூமிஜா
மழையென காதல் பொழியுமோ
மாறுபட்ட மனங்களை இணைக்குமோ(9)
கலிபோர்னியா தத்தெடுத்த
கணினி உலகத்தின் இந்திய
கோஹினூர் (10)
அசர வைக்கும் அழகன்
அதனினும் வியக்க செய்யும்
அவன் அறிவுத் திறன் (11)