அவன் கண்களை வெறித்துப் பார்த்தவள், “அத்தான், உரிமைன்னு நான் சொல்றது உங்களை தான் பணத்தை அல்ல! சொத்து உங்களுடையது நான் வெறும் காவல் காரி தான்..அதை எப்பவேணும் நாலும் நீங்க எடுத்துக்கலாம், ஆனா உங்க மீது இருக்கும் உரிமையை மட்டும் எப்பவும் நான் யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்….” தளராது தயங்காது கூறினாள் மீனா.
அர்ஜூனுக்கு புரிந்தது, அவளுடன் வாயாட அவன் விரும்பவில்லை நேரே அவள் பின் கழுத்தைப் பிடித்தவன், “அதையும் தான் பார்க்கலாம் டீ, இப்ப போய்த்தொலை” என்று அறையின் வெளியே தள்ளினான்.
அலுவலகம் சென்றவன் இரண்டு நாள் வீடு திரும்பவில்லை. நேராக கிளம்பி அவன் அலுவலகம் சென்றவள், அவன் மனைவி என்றுக் கூறாது அவனைப்பார்க்க அனுமதி கேட்டு அமர்ந்திருந்தாள். வெகு நேரத்திற்கு பிறகு, சுகுமார் வெளியே வந்தான், அர்ஜூனின் நண்பன் என அவர்களது திருமணத்தில் மீனாவிற்கு அறிமுகமானவன். கேள்வியாய் அவளை நோக்கி வந்தவனிடம், “அண்ணா இரண்டு நாளா அவர் வீட்டுக்கு வரலை, எனக்கு பயமா இருக்கு.. அவர் உள்ளே இருக்காரான்னு மட்டும் பார்த்து சொல்லுங்க போதும் !” என்று கெஞ்சலாய் கேட்டவளை, தன்னை அண்ணா என அழைத்தவளை அவனால் ஏமாற்ற முடியவில்லை.
“உங்களுக்கு அர்ஜூனை பார்க்கனுமா என்னோடு வாங்க என்றவன், வெளியே சென்று காரை எடுத்தான், தயங்கி நின்றவளைப் பார்த்து, “நீங்க என்ன அண்ணான்னு கூப்பிட்டீங்க நானும் உங்களை தங்கையா நினைச்சு தான் கூப்பிடுறேன் வாங்க ப்ளீஸ்”, என்றான். அவள் காரில் ஏறிக்கொண்டாள்.
“மீனா, அர்ஜூன் எங்கிட்ட, நீங்க அவனோட இந்த கல்யாண டிராமாக்கு ஒத்துக்கொள்ள சொத்தில் பத்து சதவிகதம் கேட்டதாகவும் அதற்கு அவன் சம்மதிக்க உங்கள் திருமணம் நடந்ததாகவும் சொன்னான்”.
இதைக் கேட்டதும் மீனாவிற்கு தூக்கிவாரிப் போட்டது, கண்களில் நீர் கோர்த்தது.
“சாரி மீனா, உங்களைப் பார்த்ததுமே நீங்க அப்படி பட்டவங்க இல்லைனு நான் தெரிஞ்சுக்கிட்டேன், என்னால் உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ நிச்சயம் பன்றேன், நான் அர்ஜூனோட லீகல் அட்வைசர் மட்டுமில்ல அவன் வெளி நாட்டில் படிச்சபோது நானும் அவன் கூட இருந்திருக்கேன்.. அவன் சம்பந்தப்பட்ட எல்லாம் எனக்கு தெரியும்!” என்றவனைப் பார்த்து கண்ணீர் மல்க “தேங்க்ஸ் அண்ணா” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் மீனா.
கார் ஒரு பெரிய ஹோட்டலில் முன் நன்றது. இருவரும் மாடி ஏறி சென்று ஒரு அறையின் முன் வந்து நின்றனர். “மீனா இங்கதான் அர்ஜூன் இருக்கான், ம்ம் அந்த ரீட்டாவும் கூட இருப்பா.. கவனமா பேசு.. நான் அந்த காரிடர் கிட்ட நிக்கிறேன், நான் உனக்கு உதவுவது தெரிஞ்சா அர்ஜூன் எங்கிட்டேயும் எல்லாத்தையும் மறைச்சிடுவான், அப்புறம் நமக்கு அவனை ட்ராக் பன்றதுக்கு வேற வழி இல்லை” என்று கூறி காரிடர் நோக்கி நடந்தான்.
மீனா கதவைத்தட்ட, ரீட்டா திறந்தாள், மீனாவை பார்த்ததும் அர்ஜூனை அழைத்தாள், அதற்குள் மீனா அவளைத் தள்ளிவிட்டு உள்ளே செல்ல அங்கே படுக்கையில் பெர்முடாசுடன் படுத்து டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனான். மீனா அர்ஜூனை வீட்டுக்கு அழைத்தாள், அவன் வர மறுக்க அவளும் அங்கிருந்து அகல மறுக்க அங்கே வாக்குவாதங்கள் முற்றி ரீட்டாவும் அர்ஜூனும் சேர்ந்து அவளை வெளியே தள்ளி கதவை சாத்தினர். இதை ஒருவாறு எதிர்பார்த்த சுகுமார் அவளை ஓடிவந்து தூக்கிவிட்டான் மீனாவிற்கு அவமானம் தாழவில்லை. காரில் ஏறியதும் வாயில் கர்சிப்பை வைத்து பொத்திக்கொண்டு அழுதாள்.
சுகுமார் அவளிடம், “மீனா, அழாதே, இன்னும் எதுவும் நம் கையை விட்டு போகவில்லை”, என்றவனை ஏறிட்டுப்பார்த்தவள். “எது அண்ணா போகலை, பாழாய் போகும் சொத்து போகலை அவ்வளவுதான், எங்க கல்யாணம் நடந்து ஒரு மாசமாச்சு இன்னும் அவர் விரல் கூட என் மீது படலை, ஆனா, இங்க இவளோட குடும்பமே நடத்துக்கிட்டு இருக்காரு…சீ நான் என்ன பாவம் செய்தேனோ”, என்று கதரியவளைப் பார்த்து மனமுருகிப்போனான் சுகுமார்.
“மீனா, இங்கப்பாரு இந்த கன்றாவிய குடும்பம்னு நீயே சொல்லலாமா? முதல்ல அழுகையை நிறுத்து..”
முகத்தை துடைத்து தீர்க்கமாக யோசித்தவள், “அண்ணா, அவர் விருப்பம் அந்த பெண்தானா, இனிமேல் போராடுறதுல அர்த்தமில்லை..மியூச்சல் டிவர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க அவராவது நிம்மதியா இருக்கட்டும்!” இதைக் கேட்டு காரை நிறுத்தியவன்,
“மீனா, கொஞ்சநேரம் முன்னாடி வரை நீ ரொம்ப தைரியமான பொண்ணு, அர்ஜூனைத் திருத்தி உன் வழிக்கு கொண்டு வந்திடுவேன்னு நினைச்சேன், இந்த ரீட்டா நல்லவளில்லை மா, அர்ஜூன் சொத்து ஏதும் அவன் பேரிலிலைன்னு அவளுக்கு நல்லா தெரியும், அதை அடையும் வரை நிச்சயம் அர்ஜூன் அவளைத்தொடுவதைக் கூட அனுமதிக்கமாட்டாள், அர்ஜூனை விட ரீட்டாவைப்பற்றி எனக்கு நல்ல தெரியும், நீ கவலைப்படாமல் இரு”
வீட்டுவாசலில் அவளை இறக்கி விட்டவன். “மீனா, இன்னிக்கு இராத்திரி அர்ஜூன் வீட்டுக்கு வருவான்” என்று கூறிவிட்டு கிளம்பினான். நாள் முழுதும் பூசை அறையிலேயேக் கிடந்தவள், இரவு கார் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள், அர்ஜூன் நல்ல போதையில் இருந்தான் சுகுமாரும் அவளும் சேர்ந்து மாடியில் உள்ள படுக்கை ஆறையில் அவனைக் கிடத்தினர். “மீனா அர்ஜூனை பார்த்துக்கோ, எனக்கு முக்கியமான வேலையிருக்கு என தாமதிக்காது வெளியேசென்றுவிட்டான் சுகுமார்.