“சகி… என்னடா சொல்லுற?... என்னாச்சும்மா?...” என்று பதறியவன்,
அடுத்த கணமே தாமதிக்காது, தன் அழைப்பை கட் செய்துவிட்டு, வீடியோ கால் செய்தான்…
அவனது அக்கறை மனம் தொட, கைபேசியில் தெரிந்த திரையில் அவனது முகம் வர, ஒரு பெரிய புன்னகை அவள் இதழ்களில் உதயமாக,
அங்கே அவனோ அவளை ஆராய்ந்தான் அவள் முகம் பார்த்து பதறியவனாய்…
“ராஜா… என்ன இது?... எதுக்கு இவ்வளவு பதட்டம்?... நான் சும்மாதான் சொன்னேன்...”
“பின்ன இருக்காதா?...” என்றவன், அவளை எழுந்து நிற்க சொல்ல, அவள் மாட்டேன் என்றாள்…
“சரி சகி… உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்…”
“அட ராஜா… ராஜா… உங்களை….” என்றவள் வேகமாக எழுந்து கொள்ள முயற்சிக்க, ‘
“ஹேய்… பார்த்தும்மா… பார்த்து சகி… மெதுவாடி…” என்றான் அவன் பதட்ட்டத்துடன்…
“ம்ம்… சுமக்குறது நான்… பதட்டம் உங்களுக்கா?...” என அவள் தன் சூல் கொண்ட வயிற்றை தொட்டுப்பார்த்துக்கொண்டே கூற,
“ம்ம்… வலிக்குதாடி… கஷ்டமா இருக்குதாம்மா?...”
“அய்யோ ராஜா… அதெல்லாம் ஒன்னுமே இல்ல… உங்க பையன் உங்களை மாதிரியே ரொம்ப சமத்து தெரியுமா?... எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்கவே மாட்டான்…”
அவள் சொல்லிக்கொண்டே தன் விரலால் ஒத்தி எடுத்து குழந்தைக்கு முத்தம் கொடுக்க,
“ம்ம்… பையன் எல்லாம் கிடையாது…. பொண்ணு தான்....” என சிணுங்கினான் அவன்…
“இந்த சிணுங்கல் குழந்தைக்கா?... இல்ல நான் முத்தம் கொடுத்ததுக்கா?...”
அவள் கேலியுடன் கேட்க, இரண்டுக்கும் தான் என்றான் அவன்…
“அதுசரி… ம்ம்… சரி ராஜா… நான் போய் குளிக்கணும்… நீங்களும் போய் வேலையைப் பாருங்க…” என்றதும்,
“இருடி… வழக்கமா கொடுக்குறதை மறந்துட்டியே…” என்றான் அவன்…
“ஆரம்பிச்சிட்டீங்களா?...” என பொய்க்கோபம் கொண்டவள், திரையில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவன் நெற்றியில் இதழ் பதிக்க,
“இது போதும்டா… இன்னைக்கு ஃபுல்லா…. ம்ம்… ஹேப்பியா இருக்கு….” என்றான் அவன் சிரித்துக்கொண்டே…
“ராஜா… ராஜா….” சொல்லிக்கொண்டே போனை கட் செய்ய போனவளைப் பார்த்து,
“ஹேய்… உன் வேலை முடிஞ்சதுன்னு கட் பண்ணுற… என் வேலையை நான் இன்னும் பார்க்கவே இல்லையேடி….” என பாவமாக சொல்ல, அவளுக்கோ அவனைக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது…
“ம்ம்… சரி… குடுங்க…” அவள் வெட்கத்தோடு கூற, முதலில் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்,
“வைடி……” என கூற,
“ஹ்ம்ம்… வெட்கமா இருக்குங்க….” என கூற,
“ஒன்னே ஒன்னுடா… ப்ளீஸ்….” என்றான் அவன்..
“ஹ்ம்ம்… ஹூம்ம்… வேண்டாம்….” அவள் சிணுங்க, அவன் சரி என்றான் அடுத்த நொடியே…
“உங்களை…” என்றவள், போனில் தெரிந்த அவன் முகத்திற்கு மூச்சு முட்டும் அளவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன் வயிற்றில் போனை வைக்க, அவன் அவள் நிறைமாத வயிற்றில் இதழ் பதித்தான் மென்மையாக…
“இப்போதான் சகி… நிறைவா இருக்கு….” உள்ளம் கனிந்தவனாய் கூற,
“ராஜா… ராஜா…” என்று சிரித்தாள் அவள்…
பின் மனமே இல்லாது அவன் போனை வைக்க தடுமாற, அவளே அதற்கு வழி செய்து கொடுக்க, அவனும் அவளின் சொற்படி போனை வைத்துவிட, கண் மூடி கணவன் தன்னிடம் பேசியதை அப்படியே ஒருமுறை திரும்ப நினைவுப்படுத்திக்கொண்டு எழுந்த போது அவளது கண்களில் நிறைந்திருந்தது கண்ணீர்…
மௌனமாக அதை துடைத்து எடுத்துவிட்டு அன்றைய தன் நாளை துவங்க முற்பட்ட போது, இங்கே அவனும் அவளிடம் பேசியதை தன் மனதில் ஒரு எண்ணிப்பார்த்துவிட்டு, விழிகளில் துளிர்த்த நீரை துடைத்துவிட்டு திரும்பிய போது, அங்கே வந்தான் வெற்றி…
“என்னடா?.. காலையிலேயே நலம் விசாரிச்சு முடிஞ்சதா?...”
“ஆமாடா… உன் தங்கச்சி உங்கிட்ட எதோ பேசணுமாம்… உன்னை பேச சொன்னா… இரு போன் பண்ணித் தரேன்…”
வேக வேகமாக போன் செய்ய இருந்தவனை தடுத்த வெற்றி,
“டேய்… போதும்டா… என் சிஸ்டர் பாவம்…” என போனை பிடுங்க, ராஜாவோ சிரித்தான்…