என்ன சொல்லி தேற்றிட முடியும்?... அவளின் இழப்புக்கு என்ன ஆறுதல் அவர் அளித்திட முடியும்?... எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவளுக்கு மருந்தாகிடுமா?...
“நான் போக சொல்ல வேண்டான்னு சொல்லியிருந்தா போயிருக்கமாட்டீங்க தான?... உங்களை நானே கொன்னுட்டனே… என்ன சொன்னாலும் மறுத்தோ எதிர்த்தோ பேச மாட்டீங்களே… அன்னைக்கு மறுத்து பேசியிருந்தா, இன்னைக்கு நான் என் ராஜாவை இழந்திருக்கமாட்டேனே….”
அவள் மனம் சத்தமில்லாது குருதி வடிக்க, அவன் உடல் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட, பொம்மை போல பித்து பிடித்தவளாய் இருந்தாள் அவள்…
மறுநாள் அதிகாலை வழக்கம் போல கடிகாரத்தினைப் பார்த்தவள், நேரமாயிற்றே என்ற நினைவில் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள்…
“அச்சச்சோ… அவர் போன் பண்ணியிருப்பாரே… நான் எடுக்கலையே…” என பதட்டத்துடன் தன் கைபேசியை எடுத்து அவனுக்கு போன் செய்தாள் வேகமாய்…
போனை காதுக்கு கொடுத்துக்கொண்டே கட்டிலை விட்டு எழ முயற்சித்தவள்,
“உங்க பையன் இருக்கானே… எழுந்துக்க விடுறானான்னு பாருங்க… வயித்துக்குள்ள இருந்து என்னை அசையவிட மாட்டிக்கிறான்… அப்படியே உங்களை மாதிரி…” சொல்லியவள், சட்டென தன் வயிற்றினை எப்பொழுதும் தொட்டு பார்ப்பது போல் பார்த்திட, அந்த நேரம் தொட்டிலின் அடியில் கிடந்த அவனது செல்போனில்
“நலம் நலமறிய ஆவல்…
உன் நலம் நலமறிய ஆவல்…..” என பாடல் பாடி ஒலிக்க,
நடந்து முடிந்த நிகழ்வு இமைகளுக்குள் நொடிப்பொழுதில் வந்து செல்ல, கண்ணீர் கடலாய் பெருகி வழிந்தது அவளின் கண்களில்…
பாடல் சத்தம் கேட்டு, பிள்ளை அழுக, அதில் நனவுக்கு வந்தவள்,
“வந்துட்டேன் ராஜா…….” என விரைந்து சென்று அவன் அவளுக்கென விட்டுச்சென்ற உயிரை கையிலேந்தி முகம் எங்கும் முத்தமிட்டு, மார்போடு சேர்த்து வைத்துக்கொள்ள, தாயின் அரவணைப்பில் குட்டி ராஜாவும் தன் அழுகையை நிறுத்த,
அவளின் விழிகளில் வழிந்த கண்ணீர் குட்டி நிவித்ராஜின் மேல் விழ, அவன் சிணுங்கியபடி, தாயின் மார்போடு மேலும் ஒன்ற, அவனின் முகத்தினை துடைத்துவிட்டு, நிமிர்ந்தபோது, தூரத்திலே பாடல் ஒலித்தது…
“நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா???…
நலம் நலமறிய ஆவல்!!!….” என…
This is entry #146 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்
எழுத்தாளர் - மீராராம்
{kunena_discuss:1083}