சிறுகதை - கார்ப்பொரேட் பூக்கள் - பூவேந்தன்
அது ஒரு திங்கட்கிழமை, ரகு தன் 36 – வயதில் இப்படி ஒரு கார்ப்பொரேட் கம்பெனியில் வேலைக்கு வருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை, வாழ்க்கை எப்படி அழைத்து போகிறதோ அப்படியே வாழ பழகிவிட்டான். அதுவும் கடந்த பதினோரு வருடங்களாக….
அது ஒரு பன்னாட்டு வங்கியின் Back Office. அதன் வரவேற்பு இடத்தில் அமர்ந்திருந்தான். அழகாய் வரிசையாய் இருந்த பூக்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான் .எல்லாமே பிளாஸ்டிக் பூக்கள்.
அவன் கவனம் கலைத்த அந்த பெண் அவனை அழைத்துச் சென்று அருகில் இருந்த பெரிய ஹாலில் அமரச் சொன்னாள்.
அவளோடு சேர்ந்து இன்னும் முப்பது பேர் இருந்தார்கள் முதல் நாள் முழுக்க HR –ல் இருந்து வேலையில் சேர்வதற்கான படிவங்கள் நிரப்பவும் வங்கி கணக்கு தொடங்கவும் சரியாக இருந்தது.
நாளை முதல் ட்ரெயினிங், இரண்டு வாரங்களுக்கு பிறகு வேலை என்று சொன்னார்கள்.
மாலை பேருந்து பிடித்து தங்கியிருக்கும் அம்பத்தூர் அறைக்கு வருவதற்கு இரவு 9 மணி ஆனது .
மறுநாள், அலுவலகம், அதே ஹால், ரகு மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தான்.
அந்த அறைக்கு உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்து சற்றே பெரிதாய் அதிர்ந்தான் ரகு. தன் கண்களை சற்றே தாழ்த்திக் கொண்டான். அவள் எல்லோருக்கும் பொதுவாய் ஒரு ஹாய் சொல்லி விட்டு பேச தொடங்கினாள்..நுனிநாக்கு ஆங்கிலத்தில்..
“நான், வந்தனா, வந்தனா பிரேம்குமார். உங்களுக்கு இந்த வாரம் முழுக்க ட்ரெயினிங் தரப் போகிறேன். முதலில் உங்கள் எல்லோரையும் அறிமுக படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதல் பெயர், கடைசி பெயர் சேர்த்து சொல்லுங்கள். படிப்பு, முன் அனுபவம், சொந்த ஊர் சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.”என்றாள்.
ஒவ்வொருவராய் தங்களை அறிமுகம் செய்தார்கள் .
ரகுவின் முறை வந்தது, அவனும் ஆங்கிலத்தில்
“என் பெயர் ரகு, ரகு கருணாகரன், பி.எஸ்.சி சொந்த ஊர் சேலம்,” என்று சொல்லி அவள் கண்களை பார்த்தான்
அவள் எந்தவித முகமாற்றமும் இன்றி அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.
ஒரு செயற்கை புன்னகையோடு..
எல்லோரும் சொல்லி முடித்ததும், அவள் பேச தொடங்கினாள். “இந்த வங்கியின் தோற்றம், உலகளவில் வங்கியின் செயல்பாடுகள், கிளைகள், சென்னையின் இதன் பணி என்று எதேதோ சொல்லிக் கொண்டே போனாள்.
ரகுவுக்கு பிரம்மிப்பாக இருந்தது. வந்தனாவின் ஆங்கில புலமை, மேல்நாட்டு உடை அவளின் உடல் மொழி, எல்லாமே ஒரு அதிசயமாய்…
உணவு இடைவேளையில் கூட எதுவும் பேச முடியவில்லை. மாலை ட்ரெயினிங் முடிந்ததும் அனைவரிடமும் ஒரு படிவத்தை கொடுத்து “உங்கள் இருப்பிட முகவரி தொலைபேசி எண் ஆகியவற்றை எழுத சொன்னாள்.
நாளை மாலை முதல் கம்பெனி –CAB–ல் போக ஏற்பாடு செய்வதற்கு என்றாள்” சென்றாள்.
அவள் செல்வதை எந்த சலனமும் இன்றி பார்த்து கொண்டே இருந்தான் ரகு.
மறுநாளும் ட்ரெயினிங்கில் பேசும்போது சந்தேகம் கேட்கும் போது கூட எதுவும் தெரியாமல் இருந்தது போல் அவள் பேசியது இன்னும் கவலையாய் இருந்தது ரகுவுக்கு.
மாலை ட்ரெயினிங் முடித்து, வீட்டுக்கு போக கம்பெனி CAB – ல் அமர்ந்திருந்தான் ரகு.
ஏனோ வேறு யாரும் ஏறவில்லை அவனோடு, CAB – புறப்படுவதற்கு சற்று முன் அவரச அவசரமாக ஓடி வந்து அந்த CAB – ல் ஏறினாள் வந்தனா.
நீங்க எங்க எறங்கனும்
அண்ணா நகரா?
இல்லங்க அம்பத்தூர், என்றான்.
ஓ….. சரி…. நான் அண்ணா நகர் என்றாள்,
CAB – புறப்பட்டு அண்ணாநகர் வரும் வரை எதுவும் பேசமுடியவில்லை, அருகில் இருந்தும் சிரிக்கவில்லை அவள் வீடு வந்ததும் இறங்கிவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு போனாள். செயற்கையாய்.
காலமெல்லாம் உன்னொடு இருப்பேன் என்று கை பிடித்து அழுத்தி சொன்ன என் வந்தனாவா இது, ரகு அமிலத்தில் கரைந்தான்.
ஏன்டா சென்னைக்கு வந்தோம் என்றிருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் நரகமாய் நகர்ந்தது.
சனிக்கிழமை, விடுமுறை.
வந்தனாவை போய் பார்தால் என்ன, பரபரப்பானான்.
சட்டென குளித்து உடை மாற்றி புறப்பட்டான் அண்ணாநகர் பேருந்தில் தன் நினைவுகளை பின்னோக்கினாள்.
சேலம்.
ரகு கல்லூரி படிப்பு முடித்து வெட்டியாய் நண்பர்கள் சூழ நகர்வலம் வந்த காலம்.
அப்படியான ஒரு நாளில்தான் ஊருக்கு புதிதாய் வந்து கல்லூரியில் சேர்ந்த வந்தனாவை பார்த்தான் ரகு.
ஏனோ, பார்த்தவுடன் அழகாய் மனதில் பொருந்தினாள். இரண்டு நாள் அவள் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து தன்னை கவனிக்க வைத்து, மெதுவாக அவளிடம் பேசத் தொடங்கினாள்.
வந்தனா, நான் ரகு..
“என்ன விஷயம் சொல்லுங்க”,