(Reading time: 26 - 51 minutes)

‘முன்ன அதிசயம்னா இப்போ சரயூங்குறா?’ என்று நினைத்த போதும் எல்லா கண்களும் அவளிடம் திரும்பின.  அவளும் தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள்.  எல்லோருக்கும், அவளிடம் எல்லாம் சரியாக தான் இருப்பதாக தோன்றியது.  இன்று சாரதாவின் வற்புறுத்தலினால் பிங்க் நிற அனார்கலி சூட்-ல் மெல்லிய ஒப்பனையோடு எப்போதையும் விட கூடுதல் அழகோடு இருந்தவளிடம் என்ன பெரிய வித்தியாசத்தை கண்டான் ரூபின் என்று புரியவில்லை அவளுக்கு.

“எப்பவுமே வெளுத்துப் போன ஜீன்ஸ் பேன்ட்-உம், அவளை போல் ரெண்டு பேர் உள்ளே இருந்துக்குற மாதிரி டாப்-சுமாவே இருந்த சரயூ, இன்னைக்கு பொண்ணு மாதிரி துணி போட்டிருக்கா... ஆதோட நிறுத்தாம பெரிய மனசு பண்ணி நமக்காக ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருப்பதை நீங்க பாராட்டலைனா நியாயமா ஃப்ரெண்ட்ஸ்?”

அடுத்த நொடி அங்கெழுந்த சிரிப்பலையில், சரயூவின் கையிலிருந்த முறுக்குகள் ரூபினை நோக்கி படையெடுத்திருந்தன.  தரையில் சரிந்து அவைகளின் தாக்குதலை மிக எளிதாக சமாளித்தவனின் மேல் பாய்ந்தாள் சரயூ.

சிதறியிருந்த முறுக்குகளை பொறுக்கி அவன் வாயில் திணித்தபடி “ஒரு பொண்ணு மாதிரி வீட்டுக்கு வந்தவங்களை கவனிக்கனும் இல்லையா? சாப்பிடு...இது எல்லாத்தையும் சாப்பிடு...” இன்னொன்றையும் அவன் வாயில் வைத்து அடைத்தாள்.

அவனுக்கு இடபுறத்திலிருந்த சௌம்யாவைத் தொட்டு தன்னை காப்பாற்றுமாறு சைகை செய்ய, அவளோ “உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்க... சரயூவை வம்பிழுக்காதனு கேட்டியா? இப்போ நல்லா வாங்கி கட்டிக்கோ” என்றுவிட்டு அவன் படும்பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்.

இப்போது, மறுபுறமிருக்கும் ஜெய்யிடம் உதவி கேட்க, அவனுக்கு சரயூவிடமிருந்து விடுதலை கிடைத்தது.

ரூபினுக்கு புரையேறி முகமெல்லாம் சிவந்து போனது.  அத்தனை முறுக்குகளும் வாயில் திணிக்கப்பட்டால் வேறென்னாகும்.  அவன் படும் பாட்டை பொறுக்கமால்

“சரூ! அவன் பாவம...போதும் விடு....ப்ளீஸ்!” அவளுடைய கைகளை ஜெய் இழுத்து பிடித்திருந்தானே ஒழிய அவளுடைய கோபம் குறைந்திருக்கவில்லை.

அவனிடமிருந்து திமிறியபடி, “நான் பொண்ணு மாதிரி இல்லைனு தானே சொல்லுறா... நான் யாருன்னு இவனுக்கு காட்டாம விடபோறதில்லை... என்னை விடு சஞ்சு!”

அவளுக்கோ ரூபின் தன்னுடைய உடையை குறை கூறியது சுத்தமாக பிடிக்கவில்லை.  அவளுடைய பெற்றோரே அவள் அணியும் உடைகளைப் பற்றி ஏதும் கூறாத போது... என்ன தான் நண்பர்கள் என்றாலும் இத்தனை பேரின் முன்னிலையில் அவன் பேசியதை பொறுக்க முடியவில்லை. 

“சரூ!” என்றொரு அதட்டல் போட்டான் ஜெய்.

அவள் பார்வை ரூபினிடமிருந்து இவனிடமாகத தாவியது.  கோபத்தில் சிவந்திருந்த கண்கள் ‘நான் என்ன செய்தேன்’ என்ற கேள்வியை தாங்கி நின்றன.

“அவன் சும்மா ஃபன்-காக ஏதோ சொன்னான், சரூ! அதுக்கு போயி இப்படி கோபப் படனுமா? அவன் நம்ம ஃப்ரெண்டுனு தெரியுதா இல்லயா?” என்று சிடுசிடுத்தான்.

ஜெய்யின் இந்த முகம் மிகவும் புதியது.  அவனுடைய கோபத்தை கூட வார்த்தைகளில் காட்டாதவனின் கோபப் பேச்சில் அவள் மனதின் இடுக்குகளில் பிறந்தது வலியொன்று.  ஜெய்யை பார்க்காது முகத்தை திருப்பி கொண்டாள்.

“சாரி ரூபின்!” என்றவளின் குரலில் கோபம் துளியும் குறைந்திருக்கவில்லை.  ஆனால் இபோது கோபம் ஜெய்யின் மேல் திரும்பியிருந்தது. 

அவ்வப்போது இவளுக்கும் ரூபினுக்குமிடையே சின்ன சின்ன சண்டைகள் வரும்.  அதை அவர்களே சரி செய்து கொண்டும் விடுவர்.  சில சமயங்களில் இவள் அவனுக்கு பேதி மாத்திரை கூட கொடுத்திருக்கிறாள்.  ஆனால் எல்லாமே ரூபின் அவளுடைய நண்பன் என்ற உரிமையிலும் வேடிக்கையாகவும் செய்தவைகளே.  அவனும் எதையும் பெரிதாக எடுத்து கொண்டதில்லை.  இவர்களின் சண்டைகள் எப்படியானவை என்று சுற்றி இருப்பவருக்கு தெரிந்திருந்த காரணத்தால், அவர்களுக்கு நடுவில் வராது, நீங்களே சமாளியுங்கள் என்று இருந்து விடுவார்கள்.  ஏன் சௌம்யாவுமே அப்படி தான் இவர்கள் நடுவில் வருவதில்லை. 

இன்றோ ஜெய் இவளை அதட்டியதோடல்லாமல் ரூபின் அவளுடைய நண்பன் என்பதை, அவளேதோ மறந்து விட்டதை போல் சொல்லி காட்டவும் ‘ரூபின் என் ஃப்ரெண்டுனு எனக்கு தெரியாதா, என்ன?’ மனதிலிருந்த மொத்த கோபமும் ஜெய்யின் மேல் திரும்பியிருந்தது.  அதே சமயம் அவனுடைய சிடுசிடுப்பு அவளை ஏதோ செய்யவும் ஜெய்யிடம் சண்டை பிடிக்கவும் மனமின்றி போனது.  ரூபினிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருக்க பிடிக்காமல் தோட்டத்துக்கு சென்றுவிட்டாள்.

எப்போதும் போலவே சரயூவிடம் வம்பிழுத்தவனுக்கு, நடந்தது குற்ற உணர்வை தந்தது.  ஜெய்யின் முகத்திலிருந்து எதையும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

“சாரி சஞ்சய்! இப்படி ஆகும்னு நினைக்கலை”

“நான் மட்டும் நினைச்சனா, என்ன? பரவாயில்லை விடு மச்சா!” ஜெய் ரூபினை தேற்றினான்.

“சரயூ உம்மேல கோபத்தோட போயிட்டாளே.  ஐ ம் சாரி மச்சா!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.