‘எது எப்படியோ... என் மகள் விருப்பத்தை நான் நிறைவேத்துவேன். ஒரு அப்பாவா அது என்னோட கடமை’
ரவிகுமார் அடுத்து செய்ய வேண்டியதை முடிவெடுத்த போது ராகுலின் கைபேசி சிணுங்கவும் யோசிங்க என்பதாக தலையை அசைத்துவிட்டு வெளியில் வந்து அழைப்பை ஏற்றான்.
“எங்கிட்ட ஏன் சொல்லல?” அவன் குரலின் கடுமையில் திகைத்தாள் மைத்ரீ.
ஜெய்யே அவன் காதலை யாரிடமும் சொல்லாத போது, இவள் எப்படி அதை பற்றி இவனுக்கு சொல்வதாம். இவர்கள் இடையில் ஒளிவு மறைவு இருக்க கூடாதென்று ராகுல் நினைப்பது புரிகிறது தான். ஆனால் நண்பனின் காதலை இவனிடம், அதுவும் சரயூவின் அண்ணனான ராகுலிடம் சொல்வது எப்படி முடியும்?
“உனக்கு முன்னாடியே தெரியும் தானே? ஏன் எங்கிட்ட சொல்லல?” இவளிடம் பதிலில்லாமல் போகவும் கோபம் கூடியிருந்தது அவனிடத்தில்.
‘இவன் கோபத்தை பார்த்தா முன்னாடியே விஷயம் தெரியவும் ஒரு வேளை ஜெய்யை ஏதாச்சும்.... இவன் மட்டும் என்னை காதலிச்சு கல்யாணம் செய்துக்கலாம் ஆனா ஜெய் காதலிச்சது இவனோட தங்கைன்னதும் அது தப்பா?’
“முன்னாடியே சொல்லியிருந்தா, என்ன செய்வதா இருந்தது?” இவளும் சூடாகவே திருப்பி கொடுத்தாள்.
“நீ சொல்லியிருக்கவும், அம்மா அப்பாட்ட சரியான நேரத்துல இதை பற்றி பேசியிருக்கலாம். இப்படி திடீர்னு உங்க பேரன்ட்ஸ் சரயூவை கேட்கவும் எனக்கே ஷாக். அப்பாக்கு அவள் மேல ரொம்பவே பாசம். அதான் என்ன சொல்றதுனு ரொம்பவே யோசிக்கிறாரு” குடும்பத்தின் மீதான பாசமும் கனிவும் கலந்திருந்தது அவனிடத்தில்.
கொஞ்ச நேரத்தில் அவனைப் பற்றி என்னவெல்லாம் நினைத்துவிட்டாள். குற்ற உணர்வு மேலோங்க
“சாரி ராகுல்!” உண்மையாக வருந்தும் குரல்.
புரிந்து கொண்டான் போலும், “பரவாயில்ல விடுடா!” வார்த்தைகளால் அவளை அரவணைத்தான்.
“அப்போ நீங்க செய்து கொடுத்த சத்தியத்துக்கு வேலையே இல்லை போல”
“ஏன்டா அப்படி சொல்ற? எங்கிட்ட நீ கேட்ட முதல் பரிசுடா அது. உனக்கு என்ன வேணுமோ கேளு ஆனா என்னால செய்ய முடிஞ்சதா இருக்கட்டும்”
“நான் கேட்க வேண்டிய வேலையே இல்லயே. நீங்கதா ஆல்ரெடி ஜெய் காதலுக்கு பச்சை கொடி காட்டியாச்சே”
“திருடி! அப்போ என்னை ரிஜெக்ட் பண்ணிட்டு ஜெய் லவ் சேஃப் செய்யதா அன்னைக்கு சத்தியம் வாங்குனியா?” அவளுடைய திட்டத்தை சரியாக கணித்தான்.
“வாவ் ! என்னோட ராகுல் இவ்வளவு ஷார்ப்பா?!” சந்தோஷத்தில் ஆர்பரித்தாள் மைத்ரீ.
“உன்னோட ராகுலாச்சே....” குழைந்தன அவன் வார்த்தைகள்.
வெட்கத்தில் முகம் சிவந்தாலும் ‘ஆமா! என்னோட ராகுல்’ கர்வம் கொண்டது மனது.
“வள வளன்னு பேசாம போயி அத்தையும் மாமாவும் என்ன முடிவு எடுக்குறாங்கனு போய் பாரு ராகுல். நாம அப்றம் பேசலாம்”
மறைமுகமாக அவளின் அழைப்புக்கான காரணத்தை சொல்லியிருந்தாள் மைத்ரீ.
“இப்பவே புருஷனை விரட்ட ஆரம்பிச்சிட்டியா? சரிங்க எஜமானி அம்மா! உங்க அத்தை மாமாவை போய் பார்க்கிறேன்”
அவன் சொல்லிய விதத்தில் சத்தமாக சிரித்து விட்டாள் மைத்ரீ. அதை ரசித்தவன், “நைட் மறக்காம ஃபோன் பண்ணு மையூ! நான் காத்துட்டிருப்பேன்” சற்று அழுத்தமாக சொல்லியிருந்தான்.
“இல்லைனா என்ன செய்வீங்களாம்?” குறும்பாக இவள் கேட்க
அவளின் குறும்பை பிரதிபலித்தான், “இல்லைனா நான் உனக்கு ஃபோன் செய்வேன்”
சற்று நேரத்திற்கெல்லாம் பாக்கு வெற்றிலை மாற்றி, ஜெய், சரயூ நிச்சயம் அவர்களுக்கே தெரியாமல் நடந்திருந்தது. இருவரும் படிப்பை முடித்த பிறகு இதை பற்றி சொல்லலாம் என்று முடிவானது. இது தெரிய வரும் போது அவர்களின் இன்ப அதிர்ச்சியை எப்படி வெளிபடுத்துவர் என்று நினைத்து அவரவரின் கற்பனையில் மகிழ்ந்திருந்தனர்.
இவர்கள் நினைத்தது போல் ஜெய், சரயூ நிச்சயம் நடந்தது யாருக்கும் தெரியாமல் இருக்குமா?
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}