17. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
அன்று மைத்ரீயின் பிறந்த நாள்.
அன்பு கலந்த அம்மாவின் அசத்தல் சமையலில் தொடங்கி, வீட்டில் அனைவரின் பரிசு மழையில் நனைந்து கோவிலுக்கு சென்று இறைவன் ஆசியும் பெற்றது வரை எல்லாம் வழக்கம் போல் நிறைவாக இருந்தன.
காலையிலிருந்து எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தாலும், ஏனோ ஒரு குழப்பம்.. இன்னதென்று சொல்ல முடியாத சிறு நெருடலும் படபடபபும் இருந்து கொண்டேயிருந்தது.
‘என்னவோ படபடனு... ஜெய்ட்ட சொல்லலாம்.. ஆனா என்னன்னு கேட்டு குடைஞ்சிடுவா. எனக்கே என்னன்னு தெரியாதப்போ, அவங்கிட்ட என்னத்தை சொல்ல?’
தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவளை கலைத்தது அவளின் கைபேசி.
அழைப்பது யாரென பார்த்தவளின் மனதிலிருந்த சிந்தனைகள் ஒதுங்கிகொண்டன. லேசான புன்னகையோடு அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ ரோஷ்னி!”
“.........”
“அதெப்படி மறப்பேன்? சரியா 5 மணிக்கு அங்க வந்திருவேன்டி. அடிக்கடி மெஸ்ஸெஜ், ஃபோன் கால்னு என்னை தொல்லை பண்ணாம இருந்தினா போதும்”
“..........”
“சரி...சரி... இப்போவே கிளம்புறேன். ஃபோனை வைடி! பை!”
அழைப்பை துண்டித்தவள், முன்பே திட்டமிட்டிருந்தபடி தனது கல்லூரி தோழிகளை ரெஸ்டாரண்டில் சந்திக்க தயாரானாள்.
முன் பதிவு செய்திருந்த அந்த மேஜையில் அமர்ந்தவளின் பார்வை சுற்றிலும் ஒரு முறை சுழன்று தன் கைபேசியில் நிலைத்தது.
‘இவளுங்க எப்பவும் லேட்டு. இந்த அழகுல என்னை லேட்டா வராதனு வேற சொல்லுறது. எங்க இருக்காளுங்களோ?’
விருவிருப்பாக கைவிரல்கள் இயங்க, தனது தோழிகள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிய, வாட்ஸ்அப்பில் மெஸ்ஸெஜை அனுப்பினாள்.
ஒரு சில நொடிகளில் தோழியிடமிருந்து பதிலாக வந்தது ஒரு புகைப்படம். அதை பார்த்தவளின் தலை கிறுகிறுத்தது. வாகனங்கள் நிரம்பி வழிந்த சாலையின் நடுவே மாட்டியிருந்த காரிலிருந்து தலையை நீட்டியபடி ரோஷினியும் சாராவும் இவளை பார்த்து சிரித்தனர்.
“சரியான நேரத்துக்கு வரனும்னு சொல்லி, நான் இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க... நீங்க டிராஃபிக்ல மாட்டினதுமில்லாம, என்னை பார்த்து சிரிக்கிறீங்களா? என் கையில கிடைச்சீங்க, அவளோதா” என்ற மெஸ்ஸெஜை சில கோப இமோஜிகளுடன் அனுப்பியவளுக்கு தனியாக என்ன செய்வதென சலிப்பாக இருந்தது.
‘என்ன செய்யலாம்?’ யோசித்தபடி நிமிர்ந்தவளின் கண்கள் மறுபடியும் அந்த ரெஸ்டாரென்டை அளந்தன.
அது ஒரு அழகான பீச் (Beach) ரெஸ்டாரண்ட். நான்கு உயர்ந்த சுவர்கள் சூழ, மேற்கூரை இல்லாது, தரையெங்கும் கடற்கரை மணல் நிறைந்திருக்க, நெருக்கமும் இல்லாத, தூரமும் இல்லாதா சமமான இடைவெளியில் படகுகள். அவைகளின் மத்தியில் ஆங்காங்கே பனை மற்றும் தென்னை மரங்களென ஒவ்வொன்றும் காண்போரை கவருமாறு மிகவும் ரசனையோடு அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த எல்லாமே செயற்கையானவையானாலும், கடற்கரையில் இருக்கும் உணர்வை கொடுக்க தவறவில்லை. படகில் உட்கார்ந்து அதன் நடுபகுதியில் இருந்த பலகையின் மேல் தட்டுகள் வைத்து உணவு உட்கொள்ள வசதியாக அதன் உயரத்தை அமைந்திருந்தனர்.
அந்த ரெஸ்டாரெண்டின் அழகை இன்னும் கூட்டும் விதமாக இருந்தது அங்கு பணிபுரிந்தவர்களின் சீருடை. அதை சீருடை என சொல்லலாமா? பொதுவாக சீருடை ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களானாதாக இருக்கும். ஆனால் இங்கோ மிகவும் வண்ணமயமாக ஹவாயன் தீம்-ல் (Hawaiian theme) இருந்தது உடை. ஆண் பெண் என இருபாலரும், ஹவாயன் தீம் (Hawaiian theme) உடை அணிந்து, அங்கு வரும் மக்களுக்கு முழுமையான கடற்கரை உணர்வை கொடுத்தனர்.
மைத்ரீ முதன்முறையாக இங்கு வந்திருக்கவும், அதன் அழகையும் அங்கு பணிபுரிவர்களின் வண்ணமயமான உடையையும் சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தாள்.
எல்லோரும் சுறுசுறுப்பாக தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்க, ஒரு வெய்ட்ரெஸ் (waitress) மட்டும் இவளையே பார்ப்பது தெரிந்தது.
‘நாம கொஞ்ச ஓவராதா இந்த இடத்தை பார்த்துட்டமோ! ச்சே... அக்கம் பக்கம் எல்லாத்தையும் கவனிக்கனும்னு நினைச்சு, இனிப்பே பார்க்காத ஒருத்த மிட்டாய் கடையை முறைச்சி பார்த்த மாதிரிதா பார்த்து வச்சிட்டனோ? அந்த பொண்ணு என்னையே பார்க்குதே’ என்று எண்ணியபடி சட்டென கைபேசியில் தலையை கவிழ்த்து கொண்டாள்.
இவளின் கணிப்பு சரியென்பதை போல் அந்த வெய்ட்ரெஸ் இப்போது இவளருகில் வந்து, “எக்ஸ்க்யூஸ் மீ!” எனவும்
‘இதென்னடா வம்பா போச்சு! இந்த இடமும் இவங்க யூனிஃபாரமும் அழகாயிருக்கேனு பார்த்தா...’