ஏதோ ஒன்று... விவரிக்க முடியாத ஒரு மெல்லிய உணர்வை, அவனுடைய ‘மையூ’ என்ற அழைப்பு இவளுக்கு கொடுத்திருந்தது. பயத்தால் ஏற்படும் உடல் நடுக்கத்தை இவளாலே சட்டென கட்டுக்குள் கொண்டு வர முடியாத போது அவனுடைய மென்மையான வருடல் குறைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.
அவள் பயம் குறைந்திருப்பது புரிந்தவனாக பேச ஆரம்பித்தான்.
“கொஞ்ச நேரம் அவசர படாம இருந்தா, நீயே இந்த கண் கட்டை எடுத்திடலாம் மையூ! ஆனா.. அதுக்கு முன்னாடி, நல்ல பிள்ளையா நான் பேசறத கேப்பியாம்”
சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னவன் அவள் கைகளை விடுவித்தான். இப்போது மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல், சரியென்பதாக தலையை ஆட்டினாள் மைத்ரீ.
“என் அழகு மயிலுக்கு, இந்த ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றவன், அவளுக்கு பிடித்த வண்ண வண்ண மலர்கள் நிறைந்த பூங்கொத்தை கொடுத்தான்.
இடைவரை உடலை இறுக்கி பிடித்திருந்த துணியில்.. சின்ன சின்ன மயிலிறகுகள் மிகவும் நெருக்கமாக சிதறியிருக்க, அதற்கு கீழே மயில் கழுத்து நீல நிற வெற்றுத்துணி, விரிந்து கூடையை போல் நின்றிருந்த லாங்க் கௌன்-ல் (Long gown) மயிலைப் போன்ற அழகோடு இருந்தவளை அப்படிதான் அழைக்க தோன்றியது அவனுக்கு.
அவனுடைய ‘மயில்’ என்ற அழைப்புக்கான காரணம் அவளுக்கும் புரிந்தது. நாணம் மேலெழ பெண்ணவளின் உடல் தானாக குறுகியது. இதனால் தோன்றிய படபடப்பை மறைத்தவாறு,
“தேங்க் யூ மிஸ்டர்.....” அவன் பெயர் தெரியாமல் பாதியில் நிறுத்தினாள்.
“நீங்க யாரு? உங்க பேரென்ன? என்னை உங்களுக்கு எப்படி தெரியும்? ஏன்...” கேள்விகளை அடுக்கி கொண்டே போனவளை அவனுடைய பதில் நிறுத்தியது.
“உன் ரசிகன்”
“என்னது?!”
“ஆமா வண்ண மயிலே! நான் உன்னோட ரசிகன்”
“விளையாடாம, உண்மையை சொல்லுங்க”
அதை கேட்டவன் பெரிதாக சிரித்துவிட்டு, “உண்மையை தானே, கண்டிப்பா சொல்ற...”
“மையூ! உன்னோட வாழ்க்கைல என்னையும் சேர்த்துப்பியா? என்னோட வாழ்க்கைய, இனிமேல் நம்மோட வாழ்க்கையா, ரசிச்சு வாழ ஆசையா இருக்குடா” உயிருக்கு வார்த்தை வடிவத்தை கொடுத்து அதை அவளின் காலடியில் இட்டவன், ஆர்வமாக அவள் சொல்ல போகும் பதிலுக்காக அவளுடைய முகத்தை நோக்கினான்.
வெறும் வார்த்தகளால் ஒருவரின் உயிரை நனைக்கமுடியுமா?! இங்கு முடிந்தது. அவனுடைய வார்த்தைகள் அவளின் உயிரை நனைத்திருந்தது. அதோடு நிற்காது உடலின் ஒவ்வோரு செல்லிலும் ஒரு புத்துணர்வையும், உற்சாகத்தையும், சிறு அச்சத்தையும் அறிமுக படுத்தி சென்றது. அது கொடுத்த சிலிர்ப்பு உடலெங்கும் ஓடி மறைந்தது.
யாரோ ஒருவன்.. கண்களை கட்டி, அவனை பார்க்கவும் விடாது.. காதலை சொன்னால், எந்த பெண் தான் அவன் காதலை ஏற்பாள்? இப்போது அந்நிலையில் இருக்கும் மைத்ரீ, என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள். ஒரு புறம் உயிரை தொட்ட அவனுடைய வார்த்தைகள்.. மறுபுறம் யாரென தெரியாதவனை ஏற்பதா என்ற கேள்வியும் தயக்கமும்.
அவளுடைய முகத்தையே பார்த்திருந்தவனுக்கு, அதில் தெரிந்த கலவையான உணர்வுகள், என்ன சொல்ல போகிறாளோ எனற தவிப்பை விதைத்தது.
நிமிடங்கள் நத்தையாய் நகர்ந்ததே தவிர அவளிடமிருந்து பதிலேதுமில்லை.
அவள் பேசபோவதில்லை என்று தெரிந்த கொண்டவன் தானே பேசினான்.
“உனக்கு சம்மதம்னா கண் கட்டை கழட்டலாம். நீ எங்கிட்ட கேட்ட, கேட்காம மனசுல வச்சிருக்க எல்லா கேள்விக்கும் கண்டிப்பா பதில் கிடைக்கும் மையு!”
அதற்கு பிறகும் அவள் அமைதியாக இருந்தாலே ஒழிய எதையும் சொல்லவுமில்லை, கண் கட்டை நீக்கவுமில்லை.
‘உனக்கு என்னை பிடிக்கலையா? உன்னை சேர எனக்கு தகுதியில்லைனு நினைக்குறியா? இல்லை...இல்லை.. நீ என்னை ஏத்துக்குவ. என் காதல் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு... அது நிச்சயமா நம்மை சேர்த்து வைக்கும். இப்படி அமைதியா இருக்காளே!’ வேதனையாக இருந்தது.
‘உன் வாழ்க்கையில எனக்கு இடமிருக்குனு சொல்லலைனாலும் ஏதாவது சொல்லுடா! உன்னோட அமைதி என்னை கொல்லுது, மையூ!’
ஐந்து நிமிடங்கள் காத்திருந்தவன்,
“பரவாயில்லை மையு!” எவ்வளவு முயன்றும் குரல் உடைந்தது அவனுக்கு.
அவனுடை கம்பீரமான குரலில் இப்போது இருந்த மாற்றம், அவளை உலுக்கியது.
‘அழறானா?! எனக்காவா? நான் அவனுக்கு அவ்வளவு ஸ்பெஷலா?’
“நம்ம ரெண்டு பேருக்குமான நாளா இந்த நாள் மாறியிருந்திருந்தா, இதை உன்...” அடைத்த குரலை செருமி சரி செய்தவன், “இதை உன் கையில் நானே போட்டு விடனும்னு ஆசையா வாங்கிட்டு வந்த.....”