(Reading time: 37 - 73 minutes)

விஜி… ஜோசியத்தை மருந்து அளவுக்கு தான் மனசு ஏத்துக்கனும்… அதையே உயிர் வாழ தேவையான அத்தியாவசியமான தேவையா நினைச்சுக்க கூடாது… அவங்க நல்லது சொன்னா சந்தோஷமா எடுத்துக்குற மனசு… இப்படி சங்கடப்பட்றா மாதிரி சொன்னா, அதை நினைச்சு உடம்பை கெடுத்துக்கிறோம்… அதுக்குத்தான் முதலிலேயே இந்த ஜோசியமெல்லாம் பார்க்க வேண்டாம்னு சொன்னேன்.. நீ கேக்கல.. இப்போ பாரு மனசுக்குள்ளேயே கவலைப்பட்டு உடம்பு சரியில்லாம போச்சு..

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு விஜி.. அவர் என்னை கைவிட மாட்டாரு.. அந்த ஜோசியரும் அதைத் தானே சொன்னாரு.. அவர் ஒன்னும் கடவுள் இல்ல, அவர் சொன்னது அப்படியே நடக்க.. இந்த ஒரு முறை ராஜா கல்யாணம் நின்னுட்டா… இனி கல்யாணமே நடக்காதாம்மா… என் பிள்ளையை என்னைக்கும் கடவுள் கைவிடமாட்டாரு.. அவன் எவ்வளவோ பட்டுட்டான்.. இனியும் அவனுக்கு கஷ்டத்தை கொடுக்க மாட்டாரு.. அவனும் எல்லோரை மாதிரியும் கல்யாணம், குழந்தைன்னு சந்தோஷமா வாழுவான் பாரு..”

“அண்ணி நீங்க எனக்காக பேசறீங்கன்னு எனக்கு புரியுது அண்ணி… கண்டிப்பா உங்களுக்கும் அந்த ஜோசியர் சொன்னது வருத்தத்தை கொடுத்திருக்கு.. அப்புறம் அண்ணி, இந்த கல்யாணம் நின்னதுல இருந்து இன்னொரு விஷயமும் என்னை உறுத்துக்கிட்டே இருக்கு.. நம்ம ராஜா குன்னூர் போனப்போ அவனுக்கு 25 வயசு தானே… அவனோட பிறந்த நாளுக்குக் கூட அவனோட இருக்க முடியலன்னு வருத்தப்பட்டீங்களே..”

“ஆமா அதுக்கென்ன..??”

“அண்ணி ஜோசியர் சொன்ன 25 வயசு.. கங்கா கழுத்துல இருக்க தாலி, நம்ம ராஜா கங்காவுக்காக உருகுறது.. கல்யாணமே வேண்டான்னு சொல்றது.. இதெல்லாம் பார்க்கும்போது ராஜாக்கும் கங்காக்கும் கல்யாணம் நடந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு அண்ணி.. ராஜா நம்மக்கிட்ட இதை மறைக்கிறானா??”

“என்ன சொல்ற விஜி.. அப்படியெல்லாம் இருக்காது.. கங்காவை பத்தி நமக்கு சொன்னதே உன்னோட புருஷன் தானே… அவனும் ராஜா கூட குன்னூர் போனானில்ல.. அப்புறம் நீ சொல்ற மாதிரி எப்படி நடந்திருக்கும்..??”

“அவர் ராஜா கூட கொஞ்ச நாள் தானே அண்ணி இருந்தாரு.. அப்புறம் இங்க வந்துட்டாரில்ல.. அப்போ இப்படி நடந்திருக்கலாமே..??” என்று விஜிக் கேட்ட கேள்விக்கு கோமதி குழம்பிப் போனார். இருந்தாலும் மனம் அதை ஏற்க மறுத்தது..

“இல்ல விஜி.. இதை என்னால ஒத்துக்க முடியல.. ராஜா கங்காவை கல்யாணம் செய்துக்கிட்டதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?? நானோ அவரோ பசங்களோட எந்த ஒரு செயலையும் அனாவசியமா மறுக்கறவங்க கிடையாதே.. அப்புறம் எதுக்காக அவன் இந்த விஷயத்தை மறைக்கனும்?? ஒருவேளை ஆரம்பத்துல நான் அதை ஏத்துக்க மாட்டேன்னு அவன் மறைச்சிருக்கலாம்னு வச்சிக்க.. ஆனா ஆறு வருஷமா அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன??

அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்கனும்… குடும்பம் குழைந்தைங்கன்னு அவன் வாழனும்னு நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருக்கேன்னு அவனுக்கு தெரியுமே.. ஏன் ஒருக்கட்டத்துல அந்த கங்காவை அவன் கல்யாணம் செய்துக்கிட்டாக் கூட பரவாயில்லங்கிற ஒரு மனநிலைக்கு வந்தது உனக்கே தெரியும்.. அது அவனுக்கும் புரிஞ்சிருக்கும்ல.. அப்புறம் கல்யாண விஷயத்தை மறைச்சிட்டு கல் மனசாவா இருப்பான்..

குன்னூர் போயிட்டு  வந்ததுல இருந்து எவ்வளவு பெரிய விஷயத்தையெல்லாம் அவன் சுலபமா கையாண்டிருக்கான்… இந்த விஷயத்தை மட்டும் அவன் எதுக்கு சொல்ல தைரியமில்லாம மறைக்கனும்..?? கங்கா அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கும் எனக்கும் தெரியாததில்ல.. அப்படிப்பட்ட கங்கா அவனோட மனைவின்னா, இந்நேரம் அவளை இந்த வீட்ல மகாராணியா உக்கார வச்சிருப்பானே.. அப்போ அவனோட முடிவை யாராவது மறுத்திருப்போமா??

நீ சொல்ற மாதிரி நம்ம ராஜா எதுக்காகவோ அதை மறைக்கிறான்னு வச்சிக்கோ.. ஆனா அந்த கங்கா ஏன் அதை மறைக்கனும்.. ஒன்னுக்கு ரெண்டு முறை நானே அவக்கிட்ட போய் என் பையனை விட்டுப் போய்டுன்னு சொல்லியிருக்கேன்.. நீ அவளை கேவலமா திட்டியிருக்க.. நம்ம ராஜாவோட மனைவிங்கிற உரிமை அவளுக்கு இருக்குன்னா.. நாம பேசறதை கேட்டுக்கிட்டு ஏன் அமைதியா இருக்கனும்.. நான் உங்க பையனோட மனைவின்னு உரிமை கொண்டாடியிருக்கலாமே..??

சரி ரெண்டுப்பேரும் இந்த விஷயத்தை மறைக்கிறாங்கன்னு வச்சிக்க.. ஆனா ராஜா இன்னொரு கல்யாணத்துக்கு எதுக்கு சம்மதிக்கனும்?? ஒருவேளை கங்காவை அவன் ஏமாத்த நினைச்சா.. அதுக்காக ஆறு வருஷம் அவன் காத்துக்கிட்டு இருந்திருக்க வேண்டாம்.. எப்பவோ இன்னொரு பெண்ணை ஊரறிய கல்யாணம் செஞ்சிருந்திருப்பான்.. சரி இப்பவே அவன் அவளை விட்டிட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்க நினைச்சிருந்தா.. கிட்டத்தட்ட மணமேடை வரைக்கும் வந்த கல்யாணத்தை கங்காவுக்காக நிறுத்தியிருக்க மாட்டான்.. ஒருப் பொண்ணு கழுத்துல தாலிக் கட்டி மனைவியா ஏத்துக்கிட்டவன், நானே சாகற தருணத்துல இன்னொரு பொண்ணு கழுத்துல தாலிக்கட்டுன்னு சொன்னாலும் அவன் சம்மதிச்சிருக்க மாட்டான்.. என்னோட ராஜாவை பத்தி எனக்கு தெரியும்.. அதனால நீ சொல்ற மாதிரி அவனுக்கும் கங்காவுக்கும் கல்யாணம் நடந்திருக்காது.

“நீங்க சொல்றப்படி பார்த்தா, நம்ம ராஜா இப்படி செஞ்சிருக்க மாட்டான்னு நினைக்கறப்ப மனசுக்கு சந்தோஷமா தான் இருக்கு.. ஆனா இன்னொரு பக்கம் அவனுக்கு கல்யாணம் இனி நடக்காதுன்னு ஜோசியர் சொன்னது கவலையா இருக்கு அண்ணி..”

“ஒரு தாயோட வேண்டுதலை கடவுள் செவி சாய்க்காம இருக்கமாட்டார் விஜி.. ராஜாக்கு கண்டிப்பா நல்லது நடக்கும்.. நீ இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம கடவுளை நம்பு.. இப்போ கொஞ்ச நேரம் தூங்கு..” என்று அவருக்கு போர்வையை போர்த்திவிட்டு விளக்கை அணைக்க எழுந்தவர் வாசலை பார்க்க அங்கே நர்மதா நின்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.