ராம் மீது அவள் அளவு கடந்த பிரியம் வைத்திருந்த போதும் அவள் ஆழ்மனதில் பதிந்து போன சில விஷயங்கள் அவளை அறியாமலேயே அவளை குழப்பி அடித்தன.
“அம்மு ராம் கூட எம்பிபிஎஸ் படிச்சு முடிச்சு அதற்கும் மேல ஹார்ட் பத்தி ஸ்பெஷலா படிச்சு எழுதின ரிசர்ச் பேப்பர். நீ அதை முழுசா புரிஞ்சுக்க முடியுமா சொல்லு. எப்போவும் அரைகுறை அறிவு ஆபத்தானது” என்றவர் அந்த ரிசர்ச் பேப்பரில் இருந்த தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
“முதல்ல உனக்கு இருந்தது ஹார்ட் ப்ராப்ளமே இல்ல. உன்னோட இதயம் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு” சுமித்ரா சொல்லவும் ஓரளவு தெளிந்து காணப்பட்டாள்.
“ஹ்ம்ம் நீ கல்யாணம் செய்துக்க மாட்டேன்ன்னு சொல்லிட்ட. நான் எப்படியாவது அழுது புலம்பியேனும் ராமிற்கு கல்யாணம் செய்து வைத்திடுவேன் ” சுமித்ரா குண்டை வீசவும் வர்ஷினி திகைத்துப் போனாள்.
உடனேயே அங்கிருந்து எழுந்து வெளியே வந்தவள் கணேஷ் ராமைத் தேடினாள்.
அப்போது பார்த்து அவன் இரு பெண்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் கௌரி ஹாஸ்பிடலில் வேலை செய்யும் மருத்துவர்களே.
வேகமாய் அவனை நோக்கிச் சென்றவள் அவன் கரத்தைப் பற்றவும் சிரித்த முகமாகவே அவளை திரும்பிப் பார்த்தான்.
ஆனால் வாடிய முகமாய் இருந்தவளைக் கண்டதும் பதறிப் போனான்.
“என்னடா ஆச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்க”
“அத்தை வந்து அத்தை....” மேற்கொண்டு ஏதும் பேச முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு.
அதற்குள் சுமித்ராவும் அங்கு வந்துவிட அங்கிருந்த மற்ற இரு பெண்களும் அப்புறம் பார்க்கலாம் என்று விலகி சென்றனர்.
“என்னம்மா ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கா” கணேஷ் ராம் பதட்டத்துடன் தன் அன்னையைப் பார்த்து வினவினான்.
அதற்குள் வர்ஷினி முந்திக் கொண்டாள்.
“அத்தை நீங்க என்ன தான் அழுது அடம் செய்தாலும் ராம் என்னை தவிர யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டார் தெரியுமா” அவனது கரத்தை இறுகப் பற்றி உறுதியாக சொன்னாள்.
“சரி அதனால” சுமித்ரா கேட்கவும் வர்ஷினிக்கு சற்றே கோபம் வந்தது.
“ராம் என்னை தான் கல்யாணம் பண்ணிப்பார்”
“சரி நல்லதா போச்சு” சுமித்ரா சிரித்துக் கொண்டே சொல்லவும் வர்ஷினிக்கு குழப்பம்.
“நான் அழுது அடம் செய்து கல்யாணம் செய்து வைப்பேன்னு தானே சொன்னேன். வேற பொண்ணை கல்யாணம் செய்து வைப்பேன்னு சொல்லலையே” சுமித்ரா சொல்லவும் வர்ஷினிக்கு புரிந்து போனது.
தான் சம்மதிக்கவில்லை எனில் தன்னிடம் தான் அழுது புலம்பி கல்யாணத்திற்கு சம்மதம் பெறப் போவதாக சுமித்ரா மறைமுகமாக கூறினார் என்று புரிந்ததும் அவரை சென்று இறுக அணைத்துக் கொண்டாள்.
அந்நேரம் அங்கு வந்த லக்ஷ்மி ராமசந்திரன் இருவரும் விழாவை தொடங்க இருப்பதாக கூறினர்.
“மாமா அத்தை இன்னும் மூணு மாசம் கழித்து எனக்கும் ராம்க்கும் கல்யாணம் பிக்ஸ் பண்ணிடுங்க” அவளாகவே முடிவு செய்தாள்.
அவள் சொல்லவும் லக்ஷ்மி சுமித்ராவை பார்க்க அவர் தலையசைத்து புன்னகைத்தார்.
கௌரி இல்லாத குறையை சுமித்ரா தீர்த்து வைத்து விடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது லக்ஷ்மிக்கு.
ஏன் மூணு மாசம் தள்ளி போடணும். அடுத்த மாசம் வருண் காயத்ரி கல்யாணத்தோடு சேர்த்தே வைத்து விடலாமே” ராமசந்திரன் கேட்டார்.
“மாமா எங்க கல்யாணத்துக்கு ஜானவி அக்கா, சைந்தவி, லிசி, என்னோட யுஎஸ் பிரெண்ட்ஸ் இவரோட கலீக்ஸ் எல்லோரும் வரணுமே. அவங்க எல்லாம் இங்க வர ப்ளான் செய்ய டைம் வேணும் தானே”
வர்ஷினி சொல்லவும் சுமித்ரா அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். ஒன்று மட்டும் புரிந்தது அவருக்கு. இனி வாழ்க்கை போர் அடிக்காமல் நித்தம் ஒரு ஆச்சரியம் என்று வண்ணமயமாக இருக்கும் வர்ஷினியால்.
“சரி நான் போறேன். நான் போனா தான் பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகும்” என்றவள் துள்ளி ஓடிச் சென்றாள்.
முறைப்படி நிச்சயதார்த்த சடங்குகள் இனிதே நடந்தேற மோதிரம் மாற்றும் வைபவமும் நிறைவேறியது.
மோதிரம் மாற்றியவுடனே அங்கிருந்த திரையில் வீடியோ ஓட விட்டாள் வர்ஷினி
வருண் காயத்ரி இருவரது புகைப்படங்கள் திரையில் தெரிய பின்னணியில் தக்க பாடல் ஒலித்தது.