தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 02 - பூஜா பாண்டியன்
“இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறேன்” என கூறி கதவை நோக்கி முன்னேறிய அபிமன்யுவை பார்த்து கலங்கிவிட்டாள் உத்ரா.
“இல்லை இல்லை, அது ஒரு தலை விருப்பம் தான்” என அவசரமாக கூறினாள் உத்ரா. இனிமேல் இவன் கண்ணை பார்த்து பேசவே கூடாது என்ற நினைப்புடன். இல்லை என்றால் யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்டதற்கு ஆம் என்று தலையை ஆட்டி இருப்பாளா.
அவளது பதறலான குரலில் நின்ற திரும்பிப் பார்த்த அபிமன்யு “ இப்போ என்ன சொல்ல வருகிறாய்?” என்று நிதானமாக கேட்டான்.
“உங்களை திருமணம் செய்ய எனக்கு சம்மதம் தான். அப்பா இப்பவே ரொம்ப வருத்தத்தில் இருக்கார்.” என எதோ அப்பாவிற்காக ஒப்புக் கொள்வது போல் கூறினாள். கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்பவனிடம் சென்று இத்தனை ஆண்டுகளாக உன்னைத் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் என்று சொல்ல உத்ராவின் ஈகோ இடம் தரவில்லை.
“எனக்கு இந்த காதல் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாது உத்ரா. கல்யாணத்திற்கு பின் என் மனைவியை நன்றாக வைத்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதை நான் சரியாக செய்வேன். உன்னை எனக்கு சிறு வயது முதல் ஓரளவுக்கு தெரியும். அதனால் தான் அப்பா கேட்டதும் சரி என்று சொன்னேன். இதுவே இப்பொழுது வேறு ஒரு பெண்ணை காண்பித்து அப்பா கேட்டிருந்தால் யோசித்து இருப்பேன்.” என விளக்கமாக அபிமன்யு கூற
“எனக்கு உங்களை வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் இல்லை. அதனால் சரி என்று சொன்னேன்.” உத்ராவும் வழுக்கலாகவே பதிலை கூறினாள்.
“இது நம்ம வாழக்கை உத்ரா. வாழ்ந்து பார்ப்போம். பிடித்தால் தொடரலாம். இல்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் அப்பாவிடம் சென்று திருமண வேலைகளை தொடர சொல்கிறேன்.” என கூறி அறையை விட்டு வெளியேறினான் அபிமன்யு.
அப்பாடா என்று மூச்சை விட்டாள் உத்ரா. கல்யாணத்திற்கு பின் அவனை தான் விரும்பினேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள். அத்துடன் மகிழ்ச்சியும் ஆரம்பமானது அவளது மனதில்.
உடனே மாமா பெண்ணான ஜானவியை அழைத்து, பியுடிஷியனை வரவழைத்தாள். ஜானவிக்கு எப்பொழுதும் பூமிஜாவை விட உத்ராவை மிகவும் பிடிக்கும் என்பதால், இந்த திருமணத்தில் உத்தரவிற்கு அடுத்து மகிழ்ச்சியானது ஜானவி தான்.
ஜானவிக்கு உடன் பிறந்தோர் இல்லாததால், பெரியம்மா பையனான அபிமன்யுவை தான், பிடித்த அண்ணனாக நினைத்திருந்தாள்.
“நான் அப்பொழுதே சொன்னேன் அம்மாவிடம், அண்ணாவுக்கு ஏற்ற ஜோடி உத்ரா அண்ணி தான் என்று. என் பேச்சை யார் கேட்டார்கள்.” என்று அங்காலயத்தவாறு பியுடிஷியனிடம் தனக்கும் சிறிது முகத்திற்கு மேக்-அப் போடச் சொன்னாள் ஜானவி.
“எனக்கு முடித்த பின் தான் உனக்கு, அதற்குள் என்னுடைய தோழிகள் வந்திருப்பார்கள், நீ சென்று அவர்களை அழைத்து வா இங்கு.” என்று கூறிய பொழுது தான் நியாபகம் வந்தது, அக்கா அவளுடைய தோழிகள் யாருக்கும் திருமண அழைப்பிதழை கொடுக்காதது.
சே, இந்த அக்கா என்னிடமாவது சொல்லி இருக்கலாம், நானாவது இத்தைனை நாள் சந்தோசமாக இருந்திருப்பேன். என மைன்ட் வாய்ஸில் பேசிக் கொண்டாள் உத்ரா.
உத்ராவிற்கு ஒரு வழியாய் முக அலங்காரம் முடிந்து சிகை அலங்காரம் முடியும் தருவாயில், வீட்டிற்கு சென்று அவளுடைய நகைகளை எடுத்து வந்திருந்தார் சுனைனா. முத்தவளுக்கு நகை வாங்கிய பொழுதே இரு பெண்களுக்குமாக சேர்த்தே வாங்கி இருந்தார் பால்கி. அது இப்பொழுது உபயோகமாக இருந்தது.
அதற்குள் அவளது தோழிகளும் வந்ததால் கல்யாணம் களைகட்டியது. தோழிகள் ஒவ்வொருவரும், என்ன உத்ரா, உன்னோட அக்காவிற்கு திருமணம் என்று அழைத்துவிட்டு இப்பொழுது உனது திருமணம் என்கிறாய். எதோ சினிமாவில் வருவது போல் உள்ளது. இருந்தாலும் மகிழ்ச்சியாகவே உள்ளது. என்ன உன் அக்கா கல்யாணம் என்றால் உன்னோடு சேர்ந்து உன் அக்காவை கிண்டல் செய்து இருப்போம். இப்பொழுது உன்னையே கிண்டல் செய்வது போல் உள்ளது அவ்வளவு தான். என கூறி உத்ராவை கலாயிக்க ஆரம்பித்தனர்.
முகூர்த்த நேரத்தில் இனிதே திருமணம் நடந்தேறியது. மதிய உணவு முடிந்து விருந்தினர் கிளம்பிய பின், இரவு ரிஷப்ஷனிற்கு கிளம்ப தயார் ஆகினர். அபிமன்யு அவனது நண்பர்களை அதற்கே அழைத்து இருந்தான். அபிமன்யு முதலில் தயார் ஆகி விட்டதால் முதலில் வந்து மேடையில் வந்து நின்று விட்டான்.
அதற்குள் அவனது நண்பர்கள் வரவும் அவர்களது அரட்டை ஆரம்பமானது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் உத்ராவும் கிளம்பி வந்து மேடை ஏறினாள்.
மணமகள் மாறியது அவர்களுக்கு தெரியாததால், அனைவரும் கோரஸாக மணமகளே, மருமகளே வா வா என்று பாட்டு பாடி உத்ராவை வரவேற்றனர். ஆனால் அதில் ஒருவன் மட்டும் “ஹே இது பெண்ணோட தங்கைடா” என்று கூறினான். அவன் பெயர் ஷகுன்.
இருந்த ஆறு பேரும் பாடுவதை நிறுத்தி அபிமன்யுவை ஏறிட்டனர்.
“ஆமாம், இது உத்ரா, பூமிஜாவின் தங்கை. இன்று காலையில் தான், பூமிஜாவின் விருப்பத்தை தெரிந்து பெண்ணை மாற்றினோம். என்று பூமிஜாவை விட்டுக் கொண்டுக்காமல் கூறினான் அபிமன்யு.