“நீ வேற. நான் இந்த குரூப்லே சேர்ந்து விதவிதமா கத்துகிட்டு, வீட்டிலே ராகி பிரியாணி, காய்கறி கோப்தா இப்படி எதாவது செஞ்சு பைவ் ஸ்டார் செப் ரேஞ்சுக்கு பேர் வாங்கலம்ன்னு பார்த்தா, மூணாவது வருஷம் படிக்கிற நமக்கு இப்போத்தான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் பிள்ளைங்களுக்கு சொல்ற மாதிரி நெல், அரிசி, வாழைன்னு பாடம் எடுத்துட்டு இருக்காங்க?
“அட பக்கி. ராகிலே எப்படி பிரியாணி பண்ண முடியும்? அத நேரடியா சமையலுக்கு யூஸ் பண்ண முடியாது. மாவாக்கிதான் பண்ணனும்.
“யாருக்கு தெரியும்? ராகின்னு சொன்னவுடனே நானும் அரிசி மாதிரி இருக்கும்னு நினைச்சேன். பார்த்தா உருண்டையா கொண்டை கடலை மாதிரி இருக்கு. முன்னே பின்னே கிட்சேன் பக்கம் போனாதானே தெரியும்“
“அப்புறம் வொய் யு டேக் திஸ் கோர்ஸ் யா?”
“இங்கிலீபிசு. நடத்து. நமக்கு சோறு முக்கியம்.. ஆனால் அது எப்போ எப்படி சாப்பிடணும்ன்னு தெரியனும்லே.. கண்ட நேரத்துலே சாப்பிட்டு , அடுத்த வேளை சாப்பிட முடியாம போயிட்டா? அதான் எப்போ, எப்படி எத சாப்பிடனும் இத கத்துக்கதான் ஐ டேக் திஸ் கோர்ஸ் . யு அண்டர்ஸ்டுட்”
“சரி சரி வா கிளாஸ் போகலாம்”
இருவரும் அவர்கள் வகுப்பறைக்கு செல்ல, அன்றைய நாள் வழக்கம் போல் நகர்ந்தது.
மித்ராவிடம் பேசிவிட்டு வந்த ஷ்யாம் , அன்றைய வேலைகளில் மூழ்கி விட, அவள் பேசியதை பற்றி அத்தையிடம் பேச எண்ணியவன் மறந்து போனான்.
ஷ்யாமின் தாத்தாவும், பாட்டியும் ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் அனைத்தும் செய்தான் ஷ்யாம்.
இது கடைசி வருடம் என்பதால் அனேக நாட்கள் மித்ராவிற்கு செய்முறை வகுப்புகளே இருக்க, அவளின் நாட்கள் கொஞ்சம் பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய அளவில் சங்கடங்கள் இல்லாமல் சென்றது. அவளை கேலி செய்யும் கும்பலுக்கும், இவர்களுக்கும் வேறு வேறு டைமிங் வரவே அவர்களை அதிகம் சந்திக்காமல் சென்றார்கள்.
மித்ராவின் கல்லூரியில் பேர்வெல் பார்ட்டி நடக்க இருக்க, அதற்கு தோதான புடவை எடுக்க விரும்பினர் மித்ரா, சைந்தவி இருவரும். சுமித்ராவையும் அழைத்தனர்.
இது எப்போதும் வழக்கமே. அநேகமாக ஷாப்பிங் என்றால் இவர்கள் மூவரும் சேர்ந்து செல்வது தான் வழக்கம். அவர்களை அழைத்து செல்வதும் ஷ்யாம் தான்.
காலையில் சபரி, முரளி இருவரும் மித்ராவை அழைத்துக் கொண்டு ராம் வீட்டிற்கு சென்றனர். ராம், மைதிலி இருவரும் அவர்களை வரவேற்று உபசரித்தனர். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து இருந்தாலும், முரளிக்கு இன்னமும் அங்கே மாப்பிள்ளை உபசாரம்தான்.
அதே போல் அவர்கள் வந்தவுடன் ஷ்யாம், சுமித்ரா இருவரும் ஹாலிற்கு வந்து அவர்களை வரவேற்று சற்று நேரம் பேசிவிட்டே இளையவர்கள் தங்கள் வேலைகளை பார்க்க சென்றனர். இவர்கள் மட்டும் அல்ல நெருங்கிய உறவினர்கள் யார் வந்தாலும் அமர்ந்து பேச வேண்டும். வெளி ஆட்கள் என்றால் வந்தவர்களை வரவேற்று விட்டு ஒதுங்கி விட வேண்டும்.
ராமின் பிள்ளைகள் யாரையும் மதிக்க மாட்டார்கள் என்ற பெயர் வாங்கி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பான். அதே போல் எந்த வேலை இருந்தாலும் முக்கியமான விசேஷங்கள் என்றால் அதில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். எக்ஸாம் , உடல் நிலை சரி இல்லை என்றாலும் கூட சற்று நேரமாவது வந்து அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். ராமை பொறுத்தவரை இது எல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்.
பொதுவான பர்சனல் விஷயங்களுக்கு அதிக கட்டுபாடுகள் கிடையாது.. அதாவது உடை அணிவதோ, ஹேர் டிரெஸ்ஸிங்கோ அதற்கு எல்லாம் மற்றவர்களை உறுத்தாத வரையில் செய்து கொண்டால் ராமை பொறுத்த வரை ஓகே.
மற்றவர்களிடம் பழகும் முறை, அவர்களோடு கலந்து கொள்ள வேண்டிய நிலைமைகள் என்றால் நாகரிகத்தை விட, பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பவன். ஹாய் என்று சொல்வதை விட, வாங்க என்று வரவேற்பதையே விரும்புபவன். அதையே பிள்ளைகளிடமும் எதிர்பார்ப்பான்.
ஆனால் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதிலும் அவனுக்கு நிகர் அவனேதான். ஷ்யாம், சுமித்ரா மட்டுமல்ல அஷ்வின், மித்ராந்தவி, சைந்தவி என எல்லோருக்குமே ராமிடம் பயம் மட்டுமல்ல சலுகையும் உண்டு.
ஷாப்பிங் செல்வதற்காக ராமின் வீட்டிற்கு வந்த தன் அத்தை, மாமவுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே , சந்தோஷும் தன் மனைவி சுருதியுடன் அங்கே ஆஜர் ஆனான். அவர்கள் பின்னால் சைந்தவியும் வர எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டே ஜூஸ் சாப்பிட்டு முடித்தனர்.
ராமிடம் சைந்தவியும், மித்ராவும் ஷாப்பிங் செல்ல வேண்டும் எனவும், சுமித்ராவையும் அழைத்து செல்வதகாகவும் கூற , அவர்களுக்கு சம்மதித்து தலையாட்டியவன்,
“ஷ்யாம்.. மூணு பேரையும் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா “ என்று கூறினான்.
ஷ்யாம் சம்மதித்து அவனுக்கு கடந்த பிறந்த நாளிற்கு ராம் பரிசளித்த பென்ஸ் காரை வெளியில் எடுக்க சென்றான்.
மைதிலி “பசங்களா சாப்பிட இங்கேயே வந்துரீங்களா? என்று வினவினாள்.