தொடர்கதை - காதலான நேசமோ - 06 - தேவி
மித்ராவின் நிச்சய வேலைகள் ஆரம்பித்து இருந்தனர் சபரி வீட்டினர். ஜெர்மன சென்று இருந்த ஷ்யாம் அங்கே நடந்த ஒரு தொழில் நுட்ப கண்காட்சியில் இவர்கள் கம்பெனி பொருட்களை அறிமுகபடுத்த வாய்ப்பு கிடைத்து இருக்க, அதில் மிகவும் பிஸியாக இருந்தான்.
தன் தந்தைக்கு போன் செய்து கண்காட்சி பற்றி சொல்லியவன் அவரின் பதிலைக் கூட கேட்க நேரமில்லாமல் வைத்து விட்டான். அதனால் அவனிடம் மித்ரா நிச்சயம் பற்றி சொல்ல முடியாமல் இருந்தனர் ராம் வீட்டினர்.
அப்படியும் தனித்தனியாக ராம், மைதிலி, அஷ்வின் என அவனுக்கு மெயில் செய்து இருந்தனர். போதாகுறைக்கு மித்ராவும் மெசேஜ் செய்து இருந்தாள்.
ஆனால் ஷ்யாமிற்கு தான் எதை கேட்கவும் நேரம் இல்லை. பர்சனல் மெயில் அவன் ஓபன் செய்யவே இல்லை.
மித்ராவும் அவன் பேசுவானோ என்று காத்து இருந்தாள். பேசவில்லை என்றதும் தன் மாமாவை அழைத்து கேட்க , ராம் அவனின் வேலையை பற்றி சொல்ல, சரி என்று விட்டு விட்டாள்.
சுமித்ரா, சைந்தவிக்கும் எக்ஸாம் முடிந்து விட்டதால் எல்லோருமே சேர்ந்து நிச்சயதார்த்தத்துக்கு வேண்டிய பர்சேஸ் செய்தனர்.
நிச்சய புடவை மாப்பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்பதால், அதற்கு முன் கட்டுவதற்கு, அதற்கு மேட்சாக நகைகள் எல்லாம் எடுக்க சென்றனர்.
மைதிலி, சபரி, ஸ்ருதி மூவரும் தங்கள் பெண்களை எடுக்க விட்டு விட்டு அமர்ந்தனர்.
முதலில் மித்ராவிற்கு எடுக்க சைந்தவியும், சுமித்ராவும் போட்டி போட்டுக் கொண்டு தேர்ந்தெடுத்தனர். அவர்களின் தேர்வுகள் நன்றாக இருந்தாலும், இரண்டு புடவை போதும் என்று எண்ணியதால் எதை எடுக்க என்று தெரியாமல் முழித்தாள் மித்ரா.
வழக்கமாக மித்ராவின் உதவிக்கு வரும் ஷ்யாம் இல்லாததால் வெகு நேரம் தடுமாறினாள்.
சுமித்ரா, சைந்தவியும்
“அடியே மத்து.. உன்னை கல்யாணத்துக்கு புடவை செலக்ட் செய்ய சொன்னா வளைகாப்பிற்குதான் எடுப்ப போலே. சீக்கிரம் எடுடி,”
“போங்கடி. எனக்கு எதை எடுக்க என்றே தெரியவில்லை. நீங்களே சொல்லுங்க”
“அடியே. நல்லா வந்துரும் வாயிலே.. “
“என்ன வாந்தியா?”
“ஆரம்பிசுட்டாடி.. உன் மொக்கைய நிறுத்து. உனக்கு என்ன புடவை பிடிச்சு இருக்கோ அதை எடு”
“எனக்கு எல்லாம் தான் பிடிச்சு இருக்கு”
“நிச்சயத்துககே எல்லாம் எடுத்துட்டா , கல்யாணத்துக்கு புதுசா நெய்யதான் சொல்லணும்.”
“அது இல்லடி.. இது நிச்சயம் அப்படின்னு போது அது சபைக்கும் எடுப்பா தெரியனும் அப்படின்னு அம்மா சொல்றாங்க. நான் செலக்ட் பண்றது அவங்க சொல்ற மாதிரி இருக்கான்னு தெரியனும். அதே சமயம் அது எனக்கு வசதியா இருக்கணும். எப்போவுமே ஷ்யாம் அத்தான் தான் கரெக்ட்டா இருக்கான்னு சொல்லுவார். அவங்க பைனல் பண்ணிட்டங்கன்னா எனக்கு திருப்தியா இருக்கும். இப்போ அவங்கள பிடிக்க முடியலையா ? என்ன செய்யன்னு புரியல?”
இப்போதும் சைந்தவி அவளின் பதிலில் முழித்தாள். சுமித்ராவிற்கு அவள் முதலில் பேசியது தெரியாது என்பதால் அவளுக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை. இவள் மனதில் என்ன இருக்கு? என்று புரியாமல் திணறினாள் சைந்தவி.
இவர்களின் வாக்கு வாதத்தை பார்த்த மைதிலி என்ன என்று கேட்க அருகில் வரும்போதே மித்ராவின் பேச்சை கேட்க, மைதிலிக்கும் திகைப்பாய் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,
“மித்துமா.. இதுக்கு ஏன் குழப்பம்? உன் வுட்பி கிட்ட பேசி அவருக்கு எதை பிடிச்சு இருக்கோ அதை எடுத்துக்கோ “ என்றாள்.
“அத்தை அவங்க இதுவரைக்கும் பேசினதே இல்லை. அவங்ககிட்டே நான் எப்படி கேட்கறது?
“என்ன? இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் வச்சுட்டு, உன்கிட்ட பேசவே இல்லையா?
“ஆமா அத்தை.”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத மைதிலி, அவளின் குழப்பத்தை உணர்ந்து,
“சரி. அவங்க செலக்ட் பண்ணினதில் உனக்கு எது பிடிச்சது?”
மித்ரா ஐந்து புடவை எடுக்க, அவள் எடுக்கும் முறையை வைத்தே, அவளின் விருப்பத்தை புரிந்தவளாக அதில் இரண்டு புடவை எடுத்து மித்ராவிடம் கொடுத்தாள்
“தேங்க்ஸ் அத்தை. எனக்கும் இதுதான் ரொம்ப பிடிச்சது. ஆனால் பாட்டி வேற சபைலே நீ எங்க வீட்டு பொண்ணுன்னு தெரியற மாதிரி நல்ல புடவையா எடு. அப்படின்னு சொன்னாங்களா. அதான் ரொம்ப யோசித்தேன் அத்தை.”
அதை கேட்டு திடுக்கிட்ட மைதிலி
“பாட்டி வேற என்ன சொன்னாங்க? அதுக்கு அம்மா ஒன்னும் சொல்லலையா
“வேற ஒன்னும் சொல்லலை அத்தை. அதோட அம்மா கோயிலுக்கு போயிருக்கும்போது தான் சொன்னங்க.”