தொடர்கதை - காதல் இளவரசி – 04 - லதா சரவணன்
அந்த கண்ணாடிமாளிகை போன்ற அலுவலகத்தை அண்ணாந்துப் பார்த்தாள், என்ன உத்ரா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தாமாதிரி பாக்குறே ?
கிண்டலா ? எல்லாத் தேவைகளுக்குமே இரண்டு பக்கங்கள் இருக்கு நித்திலன். ஒரு கட்டிடம், நான்கு நாற்காலிகள் நோட்டு புத்தகங்கள், இப்போ கணிப்பொறி, டெலிபோன், இன்னும் எத்தனையோ ஆடம்பரமான இத்யாதிகள் என எத்தனையோ வசதிகளைக் கொண்ட நவீன அலுவலகம் இப்போ கால மாற்றத்தில் அனைத்துமே மாறிக்கொண்டுதான் இருக்கிறது அதைத்தான் நினைத்தேன் சரி வாங்க உள்ளே போகலாம்
ஏற்கனவே நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து , வெறும் வேலைக்கான உத்தரவினைப் பெறத்தான் இங்கே வந்திருக்கிறோம் அப்படித்தானே உத்ரா ?
தங்களின் வருகையினை வரவேற்பினரிடம் தெரிவித்துவிட்டு, அமரும் போது இந்த வேலை தேவையா ? உத்ரா இன்னொரு முறை யோசித்துப் பார்க்கலாமே இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை, நேரம் மிச்சம் இருக்கிறது. உனக்காக கமலியைக் கல்யாணம் செய்து கொண்டேன் இனிமேல் என்ன உன் அக்காவிற்கும், அம்மாவுக்கும் ஒரு நல்ல வழியை நான் ஏற்படுத்தி தரமாட்டேனா ? என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா ?
நித்திலன் ஒரு நண்பன் என்பதையும் மீறி உறவு என்னும் ஒரு வட்டத்திற்குள் நீங்கள் நுழையப்போகிறீர்கள் அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் லட்சுமியை உங்களுக்கு மனமுடிப்பதில் மிகுந்த நிம்மதியும் கூட, எனக்கு உங்களை விடவும் நல்ல உறவு அவளுக்கு கிடைக்காது. காதல் தனிப்பட்ட இருவரின் விஷயம் ஆனால் கல்யாணம் அப்படியில்லை, அது பல உறவுகள் சம்பந்தப்பட்டது, யாருக்கும் மனது வருத்தம் வந்துவிடக்கூடாது. நீங்களும் உங்கள் குடும்பமும் ஏதும் கேட்கவில்லையென்றாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. அதை நான் சரிவர செய்யவேண்டும். உதவி என்று கேட்பது வேறு சரணாகதி என்பது வேறு. நான் உங்களின் உதவியைத்தான் கேட்கிறேன். என் குடும்பத்தையே உங்களிடம் சரணடைய வைக்க நினைக்கவில்லை. இது வேறு ஒரு மாதிரியான முடிவு என்னில் இருந்து என்னையே ஒளித்துக்கொள்ள என்று வைத்துக்கொள்ளுங்களேன். மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பற்றி நாம் நிறைய பேசிவிட்டோம் இனிமேல் ஏதும் பேசவேண்டாம் என்று தோன்றுகிறது.
முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அவள் தன் பேச்சினை முடிக்க, அதே நேரம் அவளுக்கு அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.
உத்ராவுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு, அங்கே பாடம் செய்து வைக்கப்பட்டு இருந்த கடல் வாழ் நீரினங்களைப் பார்வையிட்டபடியே உத்ராவை சந்தித்தது நினைவுக்கு வந்தது.
மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உத்ராவை முதன் முதலில் தந்தைக்கு உணவு கொடுபோன போது சந்திக்க நேர்ந்தது. கடையின் நிர்வாகி நித்திலனுடன் பயின்றவன் என்றாவது ஒரு நாள் இப்படி கடைக்கு செல்லும் போது அவனையும் சந்திப்பது நித்திலனின் வழக்கம். அன்று நண்பனின் கவனம் வேறு எதிலோ சிதறியிருக்க அவனின் பார்வையும் அதே இடத்தில நிலைத்தது.
ஒன்னும் இல்லை நித்தி அந்த வாடிக்கையாளர் வந்து நான்குமணி நேரம் ஆகிறது இரண்டு ஆடைகள் தான் எடுத்திருக்கிறார். இந்த ஏரியா கவுன்சிலர் பொண்டாட்டி எப்போ வந்தாலும் அலப்பறைதான். ஆனால் அவங்களை அட்ஜெட் செய்து புடவை எடுக்க வைக்கிறது எல்லாம் நம்ம உத்ராவாலதான் முடியும், இத்தனை பொறுமையான பொண்ணை நான் பார்த்ததே இல்லைடா
நண்பனின் சொல்லில் அன்றே விதையாய் விழுந்ததுதான் உத்ராவின் மீதான நேசம். அந்த கவுன்சிலர் மனைவியை வெளியே அனுப்பும் வரையில் அந்தம்மாளின் அலட்டலுக்கு சற்றும் முகம் சுணங்காத இருந்த அவளின் அமைதியும் பொறுமையும், புன்னகை கீற்று மாறாத முகமும், அப்படியே நெஞ்சில் தங்கிவிட்டது, அதன்பிறகு வாடிக்கையாளனாக மாறி நண்பனாய் உயர்ந்து காதலனாய் மனதிற்குள் இடம் பிடிக்கும் சமயம் தான் உத்ரா தன் தங்கையை மணம் புரிய சொல்லி சொன்னபோது திகைத்துதான் போனான் நித்திலன்.
கோபத்தில் உனக்கென்ன அந்தகாலத்து அவள்ஒரு தொடர்கதை சுஜாதான்னு நினைப்பா ? சற்று கிண்டல் தொனிக்கும் தொனியிலேயே கேட்டும் விட்டான்.
சொந்த ரத்தத்திற்கு செய்வதை தியாகம் என்று மூலாம் பூசும் குணம் எனக்கு இல்லை நித்திலன். அவள் ஒரு தொடர்கதை அந்த படத்தை நான் கூட பார்த்திருக்கிறேன். எத்தனை அழகான படைப்பு அந்த கதாநாயகியின் பாத்திரம். அவளுடன் என்னை ஒப்பிட்டது சந்தோஷம்தான். அந்த கதாநாயகியைப் போல எனக்கு சில பிரின்சிபல்ஸ் எல்லாம் உண்டு. உங்களைப் பார்க்கும் போது எனக்கு காதல் வரவில்லை, அன்பான சகோதர பாசம் தான் தோன்றுகிறது. அப்படி உங்களின் அன்பிற்காக நான் ஒப்புக்கொண்டாலும் நம் கல்யாணம் முழுமையடையும் என்று எனக்குத் தோன்றவில்லை நித்திலன். அது ஒரு ஒப்பந்தமாகிப் போகும் என் சுமையை நான் யார் மேலும் ஏற்றிவிடத் தயாராக இல்லை, அதன்பிறகு தன் தங்கையைப் பற்றி பேசி அவளுடைய திருமணத்தினைப் பற்றிய கனவுகளை சொல்லும் போது, தன்னையும் அறியாமல் நித்திலனே அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அவளுக்கு நல்லதொரு நண்பனாகிப் போனான்.