தொடர்கதை - காதலான நேசமோ - 12 - தேவி
அந்த திருமண மண்டபம் நான்கு தளங்களாக இருந்தது. கீழே டைனிங் ஹால், முதல் மாடியில், மணமேடையும், பக்கங்களில் மணமக்களுக்கான அறைகளும் இருந்தது. அதில் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் தங்கி இருந்தனர்.
மற்ற உறவினர்களுக்கு மேலே உள்ள இரண்டு தளங்களிலும், வரிசையாக பத்து பத்து அறைகள் இருக்கவே, அதை எடுத்துக் கொண்டனர். ஒரு சிலர் மெயின் ஹாலில் படுத்துக் கொண்டனர்.
காலையில் பியூட்டி பார்லரில் இருந்து எத்தனை மணிக்கு வருவார்கள் என்று கேட்பதற்காக தன் அத்தை மைதிலியை தேடி வந்து இருந்தாள் மித்ரா.
சுமித்ரா, சைந்தவி இருவரும் அவர்கள் பிரெண்ட்ஸ் இன்னும் சில பேரை அங்கே தங்க வைத்து இருந்ததால், அவர்களின் வசதியை கவனிக்க சென்று இருந்தார்கள். அதனால் மித்ரா மைதிலியை தேடி தனியாகவே வந்து இருந்தாள்.
மாப்பிள்ளை, பெண் இருவர் வழியிலும் முக்கியமான ஒரு சில உறவினர் மட்டுமே இருந்தனர். அதனால் மணப்பெண் தனியாக செல்கிறாளே என்று எல்லாம் யாரும் எண்ணவில்லை. அப்போதும் ஒன்று இரண்டு பேர் யாரை தேடுகிறாய் என்று கேட்டு, மைதிலி என்றவுடன் சரி என்று அனுப்பி வைத்தனர்.
மூன்றாம் தளத்திற்கு வந்தவள், தன் அத்தை இருந்த அறைக்கு சென்றாள். அப்போது தான் ஷ்யாம் அழைத்து மித்ரா பாட்டி அறைக்கு சென்று இருந்த மைதிலி, அறையை பூட்டியதை கவனித்து, அவர் பின்னாடி சென்றாள் மித்ரா.
அவர்கள் பேசிக் கொண்டு இருந்த அறைக்கு அருகே செல்லும்போது சரவணன் குரல் ஒலிக்கவே, இப்போது அங்கே போவது சரியாக இருக்குமா என்று எண்ணியவள், பக்கத்து அறை திறந்து இருக்கவே அங்கே அத்தை வரும் வரை காத்து இருக்கலாம் என்று எண்ணி உள்ளே இருந்தாள்.
மித்ரா பாட்டியின் அறைக்கதவு மூடப்பட்டு இருந்தாலும், பாட்டி சற்று நேரம் முன் பால்கனியில் நின்று இருந்ததால், அந்த கதவு திறந்து இருக்கவே, அங்கே நடந்த பேச்சு வார்த்தை அனைத்தும் மித்ராவிற்கு கேட்டது.
முதலில் ஷ்யாம் பற்றி ஏதோ பேசிக் கொண்டு இருந்தவர்கள், மித்ராவை பற்றி பேச ஆரம்பிக்கவும், அதிலும் கல்யாண வாழக்கைக்கு சரி வருவாளா என்ற கேள்வி அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் அப்படியே விழுந்து விட்டாள்.
என்ன சத்தம் என்று பார்க்க வந்த ஷ்யாம்,
“மித்ரா. என்ன ஆச்சு?” என்று பதறியவன் “அம்மா” என்று தன் அன்னையை அழைத்தான்.
அவனின் பதட்டமான குரல் கேட்ட எல்லோரும் அந்த அறைக்கு செல்ல, அங்கே மித்ரா மயங்கியதை பார்த்து திகைத்து நின்றனர்.
முதலில் சுதாரித்த மைதிலி,
“ஷ்யாம் .. தள்ளு. “ என்றபடி அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தாள்.
அவள் கண்கள் திறக்கும் முன், மித்ராவின் பாட்டி, சரவணனை பார்த்து
“ஏன்பா நீ படிச்சவன் தானே? என்ன கேக்குறதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லை?
சரவணன் பதில் சொல்வதற்குள் அவன் அம்மா
“பெரியம்மா, படிச்சவனோ, படிக்காதவனோ கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது நல்ல படியா வாழறதுக்கு தானே. அதுவே சந்தேகம் என்றால் எப்படி கல்யாணம் பண்ணிப்பாங்க?
“ஏன் அப்படி என்ன சந்தேகம் உன் பையனுக்கு வந்துச்சாம்? நிச்சயம் முடிஞ்ச பிறகு தினம் போனில் பேசிட்டு தானே இருக்கார்? அப்போ எல்லாம் வராத சந்தேகம் விடிஞ்சா மனையில் நிக்கணும். இப்போ வருதா?
இப்போது சரவணன் “ஆமா.. உங்க வீட்டு பொண்ணு என்ன பேசினா? சும்மா ம்ம்.. மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா? கல்யாணம் பண்ண போறவன பத்தி தெரிஞ்சிக்கனும்ன்னு எண்ணமே கிடையாது. நானே போன் பண்ணினா கூட, மாமா பையன் போன் பண்ணுவார். அப்புறம் உங்ககிட்டே பேசட்டுமான்னு கேட்டா?
அடப்பாவி என்று திகைத்த ஷ்யாம், இதற்கு பதில் சொல்ல எண்ணினான். ஆனால் ஏற்கனவே தன்னை வைத்து தான் அவன் பிரச்சினை செய்கிறான் என்று புரிந்ததால் , தானும் பேசினால் அவன் கூறுவதை உண்மையாக்குவது போல் ஆகும் என்று தன்னைக் கட்டுபடுத்தி , சரவணனை முறைத்தான்.
ஆனால் இப்போது எதிர்பாரா விதமாக மித்ராவின் பாட்டி “ஆமாம். நீ பேசின லட்சணமும் தான் எனக்கு தெரியும். நீ அவகிட்டே என்னைக்காவது அவள பத்தி விசாரிச்சியா? இல்லை அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டியா? “
“நான் கேக்கலைன்னு உங்களுக்கு தெரியுமா?
“அப்படி இருந்தாதான், இந்நேரம் அவளை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கணுமே. “
இதுவரை பேசாமல் இருந்த ராம் “எல்லோரும் கொஞ்சம் பேசாம இருங்க.” என்றவன், சரவணன் அம்மாவிடம் திரும்பி
“அம்மா.. இப்போ நீங்க என்னதான் சொல்ல வரீங்க?
“எங்களுக்கு மித்ராவ பத்தி முழு விவரமும் தெரியனும்”