(Reading time: 21 - 41 minutes)

"சற்று நேரம் முன்பு தான் அவர்களைக் கொண்டு சென்றார்கள் இளவரசே!"

"யார் கொண்டு சென்றது?"

"அவனோடு சேர்ந்து காவல் புரிந்தவர்கள் தான் இளவரசே!"

"சம்யுக்தன் தனியாகத்தானே காவல் புரிவதாகக் கேள்விப்பட்டேன்" என்று அதிர்ச்சியோடு கூறி "வந்தவர்கள் நம் வீரர்கள் தானே?" என்று கேட்டான்.

"ஆம் இளவரசே! நம் வீரர்கள் தான். அரண்மனை முத்திரை கூட வைத்திருந்தார்கள்".

"அப்படியா?" என்று இளவரசன் அதிர்ச்சியோடு கேட்டான்.

ஏதோ தவறு நிகழ்ந்திருப்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் கண் முன்னே சகுந்தலையின் முகமும் பூங்கொடியின் முகமும் வந்து வந்து சென்றது. நான் அவர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறேன் என்று குற்ற உணர்ச்சியோடு குறுகினான்.

"நீங்கள் எல்லோரும் வைத்தியரின் வீட்டிற்கு இப்பொழுதே சென்று சம்யுக்தன் அங்கு இருக்கிறானா என்று பாருங்கள்!" என்று இளவரசன் கட்டளையிட்டான்.

பாதுகாவலர்கள், "இளவரசே!" என்று பேச முற்பட்டபோது, "நான் சொன்னதைச் செய்யுங்கள்!" என்று இளவரசன் கர்ஜித்தான்.

உடனே, அனைவரும் இளவரசன் இட்ட கட்டளையை நிறைவேற்ற குதிரையில் ஏறிச் சென்றார்கள்.

இளவரசன் என்ன செய்வது என்று புரியாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். அப்போது, அவனை நோக்கி ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. அவன் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். இருளில் சரியாகத் தெரியவில்லை.

உடல் அசைவுகளைப் பார்த்து வருவது ஆண் அல்ல; பெண் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அந்த உருவம் இளவரசனை நெருங்கியபோது அது யாரென்று நன்றாக அடையாளம் தெரிந்தது. அது...அது....பூங்கொடி! அதைச் சற்றும் எதிர்பார்க்காததால் இளவரசன் திக்கு முக்காடினான்.

பூங்கொடி இளவரசனின் முன் நின்று மூச்சு வாங்கக்கூட அவகாசம் இல்லாமல் ஏதோ சொல்ல விழைந்தாள்.

"என்ன? என்ன ஆயிற்று பூங்கொடி? இந்த நேரத்தில் எதற்காக வந்தாய்?" என்று பதைபதைப்போடு கேட்டான்.

பூங்கொடி, "அந்த ஓவியத்தில்..." என்று கூறி மேலும் சொல்லமுடியாமல் திக்கினாள். வார்த்தைகள் வெளிவராமல் தவித்தன.

உடனே, இளவரசனின் சிந்தனையில் சகுந்தலை தன்னிடம் சம்யுக்தனின் ஓவியத்தைப் பற்றிக் கூறியது மின்னல் போல் வெட்டியது. இளவரசன், பூங்கொடி என்ன கூறப்போகிறாள் என்று ஓரளவு யூகித்திருந்தாலும் கனத்த மனதோடு, ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.

பூங்கொடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்களில் மலர்ந்த கண்ணீர் மலர்களைத் துடைத்துக்கொண்டே பேசினாள். 

"ஓவியத்தில் உள்ளபடியே நடக்கிறது. எங்கள் வீட்டு வாசல் முன் குதிரை வந்து நின்றது. முத்துமாலையின் கீழே இந்த ஓலை புதைக்கப்பட்டிருந்தது" என்று கூறிக்கொண்டே அந்த ஓலையை ரவிவர்மனிடம் கொடுத்தாள்.

அந்த ஓலையை வாங்கும்போது ரவிவர்மனின் கைகள் நடுங்கின. வானிலவின் ஒளியின் உதவியுடன் அந்த ஓலையைப் படித்தான். 

"நான் காவல் புரிந்த இடத்திற்கு இளவரசரையும் படையையும் அனுப்பவும்!"

ஓலையைப் படித்த இளவரசன் மூச்சடைத்துப் போய் நின்றான். மிகப் பெரிய தவறு நடந்து இருக்கிறது என்று அவனுள் கூறிக் கொண்டான்.

"எனக்குப் பயமாக இருக்கிறது; ஒன்றும் ஆகி இருக்காது அல்லவா?" என்று பூங்கொடி சிறு குழந்தையைப் போல் கண்களில் நீர் மல்கக் கேட்டாள்.

அந்த வார்த்தைகள் ரவிவர்மனின் இதயத்தைத் தாக்கின். பதில் சொல்ல முடியாமல் தவித்தான். பூங்கொடி அவனிடம் இருந்து ஆறுதலான வார்த்தையை எதிர்பார்த்து அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேர அமைதிக்குப் பின் "கவலைப்படாதே! சம்யுக்தனுக்கு ஏதும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று இளவரசன் கூறியதைக் கேட்டவுடன் தான் அவளுடைய உடலும் உள்ளமும் குளிர்ச்சி அடைந்தது.

அப்போது, இடும்பன் பூங்கொடியிடம் சம்யுக்தன் விவகாரத்தைச் சொல்ல வாயெடுத்தான். ரவிவர்மன் பார்வையாலேயே அதைத் தடுத்து நிறுத்தினான். மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல இடும்பன் பணிந்தான்.

"நீ தைரியமாக உன் வீட்டிற்கு செல். சம்யுக்தனுக்கு நான் பொறுப்பு. என்னை நீ நம்பலாம்" என்று இளவரசன் கூறினான். இதை அவன் உதட்டால் சொல்லாமல் உள்ளத்தால் கூறினான். பூங்கொடி ஆசுவாசமானாள்.

"இடும்பா!" என்று கர்ஜனையோடு இளவரசன் அழைத்தான்.

பணிவோடு இளவரசன் முன்னே இடும்பன் நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.