(Reading time: 19 - 38 minutes)

அதன் பின்னான நாட்கள் திஷானிக்கு அத்தனை உடல் உபாதைகளையும் தாண்டி மனதை உற்சாகமாகவே வைத்திருந்தது.அபினவின் காதலில் முங்கித் திளைப்பது ஒருபுறம் எனில் சாரதாவும் ராகவனும் மகளாய் அவளை தாங்கிக் கொண்டனர்.

சாரதாவின் கவனிப்பில் ஓரளவு தேறி வந்தவளுக்கு சற்று மேடிட்ட தன் வயிற்றை பார்த்து பார்த்து பூரித்துப் போனாள்.

நான்காவது மாத ஆரம்பத்தில் செக் அப்பிற்குச் செல்ல மருத்துவரின் அறையில் நாற்காலியில் அபினவ் அமர்ந்திருக்க தடுப்பு திரைக்குப் பின் திஷானியை செக் அப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.

சில நிமிடங்களில் வித்தியாசமான ஒரு ஒலி அறையை நிறைக்க அபினவ் என்னவோவென திரையை வெறிக்க உள்ளிருந்து மருத்துவர் குரல் கொடுத்தார்.

“சார் உங்க பேபிஸோட ஹார்ட் பீட்..ரெண்டு பேரும் சமத்தா இருக்காங்க ஓ.கே தான”,என்றவர் திஷானியை பார்த்து புன்னகைத்தார்.

அந்த ஒலி நின்ற பிறகும்கூட அபினவின் காதுகளில் அது தொடர்ந்து கொண்டேயிருந்தது…அதன்பின் டாக்டர் கூறிய அனைத்தையும் மூளை வாங்கிக் கொண்டாலும் மனம் முழுவதும் ஒருவித உற்சாகம் கரைபுரண்டு ஓடியது அவனுக்கு.

வீட்டிற்கு வந்த பின்பு தாய் தந்தையிடம் அதை பற்றி பேசி பேசி ஓய்ந்து போனான்.அறைக்குள் வந்த பின்பு திஷா செல்லமாய் அவன் தலை தட்டினாள்.

“சத்தியமா உங்க அட்டகாசம் தாங்கவே முடில அபிப்பா..ஹார்ட் பீட் கேட்டதுக்கே இப்படினா அடுத்த ஸ்கேன்ல பாப்பாவையே பாக்க போறோமே நீங்க என்ன பண்ணுவீங்க?”

“திஷா பேபி எனக்கு அதை நினைச்சா வயித்துல பால் பாலா உருளுது..பாக்கணும்னு ஆசை இருந்தாலும் அதெல்லாம் ஒரு மாதிரியான பீலா இருக்கு..”,என்றவனுக்கு பேசும் போதே உடல் சிலிர்த்தது.

திஷானி அவனை வகையாய் பெரியவர்களோடு சேர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

அடுத்ததாய் அந்த நாளும் வந்தது காலையிலிருந்தே அபினவிற்கு இருப்பு கொள்ளவில்லை.யாருடனும் ஒழுங்காக கூட பேசமால் பதட்டத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.திஷானிக்கோ சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாய் இருந்தது எதற்கும் கவலைபடாமல் சுற்றித் திரிபவன் ஒரு ஸ்கேனிற்கு இந்த பாடு படுகிறானே என நினைத்து நினைத்து ரசித்தாள்.

மருத்துவமனைக்குச் சென்று அவர்கள் முறை வந்ததும் திஷானியை மட்டும் உள்ளே அழைக்க சற்றே நிம்மதிதான் அடைந்தான் என்று கூற வேண்டும்.வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை பத்து நிமிடம் கழித்து நர்ஸ் வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

திஷானி அவனையே பார்த்திருக்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரையும் டாக்டரின் கணீர் குரல் நடப்பிற்கு அழைத்து வந்தது.

“வைப்பை வீட்ல போய் ஆசைதீர பாருங்க குழந்தையை பார்க்க ஆசை இல்லையா இங்க பாருங்க உங்க குட்டீஸ் இரண்டும் சமத்தா தூங்கிட்டு இருக்காங்க”,என்றவற்றை காதில் வாங்கியவாறு திரையை பார்த்தவனுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.

இரண்டு பிஞ்சுகளும் ஒன்றையொன்று பார்த்தவாறு விழிமூடி படுத்திருந்தன..டாக்டர் ஒவ்வொரு பகுதியாய் காட்டி இது மூக்கு இது கண் இது வாய் என்றவர் கைகள் அருகில் வந்த நேரம் சற்றே சிரித்தவாறே,

“ம்ம் ரெண்டு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க போலயே கையை பிடிச்சுட்டு இருக்குறத பாருங்க”,என திஷானியை பார்த்து சிரித்தார்.

லேசாய் விரல்களை அணைத்தவாறு இருந்ததை பார்த்தவனுக்கு அதற்குமேல் உள்ளே நிற்கத் தோன்றாமல் எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் என வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.

திஷானி மெதுவாய் வெளியே வர அவனை பார்த்தவளுக்கு அவனின் சிவந்த கண்கள் மனதை மேலும் உருக்கியிருந்தது..

ஒன்றும் பேசாமல் கேன்டீனிற்கு அழைத்துச் சென்றவள் மெதுவாய் அவனருகில் அமர்ந்தாள்.

“வர வர நீங்க ஏன் இப்படி ஆய்ட்டீங்க அபிப்பா..”

“தெரில திஷாம்மா இரண்டு உயிர் கைகோர்த்து கால் சுருக்கி அதை பார்க்க பார்க்க என்ன சொல்லனே தெரியாம நின்னேன் இதுல டாக்டர் வேற பேபிஸ் தூங்குறாங்க ப்ரெண்ட்ஸ் ஆய்டாங்கனு என்னென்னவோ சொன்னப்போ..”,எனும்போதே கண்கள் தானாய் ஆனந்தத்தில் கலங்கியது..

“ரிலாக்ஸ்ங்க..நானே என்ன நிலைமைல இருக்கேன் தெரியுமா இந்த குட்டி இடத்துல இரண்டு பேர் ஷேர் பண்ணிட்டு என்ன அழகா தூங்கி எழுந்து விளையாடினு எத்தனை எத்தனை அழகான விஷயம் இல்ல..அதுவும் எனக்கு இதெல்லாம் நடக்குறது கனவு மாதிரி இருக்குங்க..

உங்களுக்கு என்னை பிடிச்சுதுங்கிற ஒரு விஷயம் என் மொத்த வாழ்க்கையையும் எப்படி மாத்திருக்குனு உங்களுக்கு புரியுதா..அதையெல்லாம் நினைச்சு சந்தோஷப்படுறத விட்டுட்டு இப்படி கண்கலங்கிட்டு இருக்கீங்க..இது உங்களுக்கு செட்டே ஆகல..”,என இதழ் சுழித்துக் கூற சற்றே தன்னை மீட்டெடுத்தவன் அவளின் இதழில் பார்வையை பதித்தவாறே கரெக்ட் திஷா பேபி எப்படியெல்லாம் செலெப்ரேட் பண்ணணும் இந்த மொமண்டை அதை விட்டு நா ஏன் உன்ன மாதிரி வொர்ஸ்ட் ஆய்ட்டேன்…ச்ச வா வா போலாம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.