அமேலியா - 54 - சிவாஜிதாசன்
அந்த இரவு நீண்ட நெடிய இரவாக இருந்தது. ராணுவ வாகனங்கள் விர் விர்ரென அமைதியைக் குலைத்தபடி சென்றுகொண்டிருந்தன. அப்பகுதி மக்கள் இரண்டு நாட்களாக கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.
ராணுவ வீரர்கள் சந்தேகிக்கும் வீடுகளுக்குள் நுழைந்து சோதனை போடுவது, மக்களை விசாரிப்பது, தேவைப்பட்டால் முகாமிற்கு அழைத்து சென்று துன்புறுத்துவது என இரக்கத்தை மறந்தவர்களாக செயல்பட்டனர்.
ராணுவ முகாமில் இருக்கும் உயரதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து வரும் அரசு அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வருகிறது. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் ஜான்சனை தீவிரவாதிகள் கடத்தியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எப்படியாவது ஜான்சனை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து உயிரோடு காப்பாற்றவேண்டும் என அதிபரின் மாளிகையில் இருந்து கட்டளை வரவே, கட்டளையை நிறைவேற்ற முழு மூச்சோடு ராணுவ அதிகாரிகள் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். தீவிரவாதிகளிடமிருந்து ஜான்சனை காப்பாற்றுவது அத்துணை எளிதல்ல என்பதை அதிகாரிகளும் அறிவர்.
ஜான்சன் அப்படி செய்திருக்கக்கூடாது. உயரதிகாரிகளுக்கு முறையான தகவல் தராமல் தன் நண்பர்களோடு சேர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டதன் விளைவு, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ராணுவத்தை தள்ளிவிட்டது.
ராணுவ வீரன் அவசரமாக கர்னலை நோக்கி ஓடி வந்தான். சல்யூட் வைத்தான். அவன் முகத்தில் பதற்றம்.
"என்ன விஷயம்?" கர்னல் ஜார்ஜ் சற்று பதற்றமாகவே கேட்டார்.
"நீங்க தொலைக்காட்சியை பார்க்கணும் கர்னல்"
கர்னலின் கண்கள் சுருங்கி விரிந்தன. அடுத்த இரண்டு நிமிடத்தில் தொலைக்காட்சியின் முன் நின்றார்.
மூன்று தீவிரவாதிகள் முகத்தை மூடியபடி நின்றார்கள். ஜான்சனை பயங்கரமாக சித்திரவதை செய்து அவனை மண்டியிட வைத்து, ராணுவம் பிடித்து வைத்துள்ள சில தீவிரவாதிகளை விடுதலை செய்யவில்லை எனில் ஜான்சன் கொல்லப்படுவான் என ஜான்சனின் முகத்தை குளோஸ் அப்பில் காட்டிவிட்டு வீடியோ நிறைவடைந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
நீண்ட மூச்சினை இழுத்துவிட்ட கர்னல் இயலாமையோடு சுற்றும் முற்றும் பார்த்தார். பின் மெதுவாக அங்கிருந்து நடந்தார்.
இன்னும் சில மாதங்களில் ரிட்டயர்ட் ஆகப்போகும் கர்னல் ஜார்ஜ் மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளானார். உடலின் பலம் குறையும் நேரத்தில் பயம் மனதை ஆக்கிரமித்துக்கொள்கிறது. கர்னல் காலநிலையை நன்றாக புரிந்து வைத்திருந்தார்.
மனைவியையும் இருந்த ஒரு பிள்ளையையும் பறிகொடுத்த கர்னல் பெருமளவு நேரத்தில் மரணத்தை மட்டுமே சிந்தித்தார். தான் கண்ட முதல் மரணத்தை நினைத்துப் பார்த்தார். அது அவர் தாயின் மரணம். சிறுவயதில் தந்தை பிரிந்து சென்ற பின்பு தாயின் அரவணைப்பில் வாழ்ந்த அவர் தன் ஐந்தாவது வயதில் தன் கண் எதிரே விபத்தில் தாயைப் பறிகொடுத்தார்.
மரணிக்கும் தருவாயில் தாய் கொடுத்த அந்த ஒலம் இன்னும் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதன் பின் ராணுவத்தில் எதிரிகளின் மரணத்தையும் நண்பர்களின் மரணத்தையும் சந்தித்தபடி நாட்களை நகர்த்தினார்.
அவர் ஆசைகளை எல்லாம் மரணம் பிடுங்கிக்கொண்டதாலோ என்னவோ அவர் எதன் மீதும் ஆசை கொள்வதில்லை. நண்பர்களையும் அருகில் விடுவதில்லை.
இப்போழுது அவருக்கு தேவை ஒய்வு. துப்பாக்கி சப்தங்கள், மரண ஒலங்கள், பிரேதங்கள், ரத்தக்கறை, வெடிகுண்டு புகையின் வாசம், எதிரிகளை தேடி அலைவது, சண்டையிடுவது, கொல்வது, அப்பப்பா! இது எதுவும் இல்லாத நிம்மதியான இடத்தில் மீதமிருக்கும் வாழ்நாளை சந்தோசமான நினைவுகளுடன் கழிக்கவேண்டும்.
சலசலவென செல்லும் நதியின் ஒசை, அதில் திரியும் மீன்கள், புற்களின் நுனியில் உள்ள பனித்துளி, மண்வாசம், மலை ஏற்றம், அதன் உச்சியில் தங்கி தனியாக உலகை ரசிப்பது, தனக்கு தேவையான உணவு பதார்த்தங்களை தானே செய்துகொள்வது, வீட்டை சுற்றி சிறிய விவசாய நிலம், அதில் விவசாயம் செய்வது, மிருகங்களுக்கு உணவு வழங்குவது என கற்பனை காணும்போதே தன்னை மறந்தார் கர்னல்.
இப்பொழுது அவருக்கிருக்கும் ஒரே கவலை அவர் மருமகள் தான். கணவனை இழந்த அதிர்ச்சி தாங்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட அவள் மருத்துவ சிகிச்சையால் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள். தான் அமெரிக்கா செல்வதற்குள் அவள் பூரண நலம் பெற்றிருக்கவேண்டும் என தினமும் கடவுளிடம் கோரிக்கை வைக்கும் கர்னல், பிறக்கப் போகும் குழந்தையால் அவளுக்கு நிம்மதியும் கிடைக்க வேண்டும் என விரும்பினார்.
ராணுவ ஜீப் ஒன்று வேகமாக வந்து சீறியபடி நின்றது. அதிலிருந்து ராணுவ வீரர்கள் இறங்கினர். அதில் ஒருவன் கர்னலை நோக்கி வந்தான்
கர்னல் நடந்துகொண்டே அவனிடம் பேசினார். "என்ன ஆச்சு?"