“பாஸ்ட் இஸ் பாஸ்ட் . . பாஸ்ட நெனச்சி பிரசென்ட ஸ்பாயில் பண்ணிகாதனு சொல்லுவா . . இது அவளோட தாரக மந்திரம்”
அதற்குள் ஆகாஷின் பெற்றோரும் அங்கு வரவே . . அவர்களும் அவளை பாராட்டினர். பின்னர் ஆகாஷ் தன் பெற்றோருடன் கிளம்பி விட்டான். கிளம்பும் முன் கண்ணாலேயே ஆறுதல் சொன்னான்.
இந்த அனைத்து உரையாடல்களையும் பக்கத்து அறையில் இருந்தபடி சூர்யா கேட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகு லியா ஆகாஷை போனில் தொடர்புக் கொண்டாள்.
“சுவாதி அங்க வேல செய்யவே இல்ல ஆகாஷ்”
ஆகாஷ் எதிர்பார்த்த பதில்தான் இது என்றாலும் “ஆர் யூ ஷ்யூர் லியா?” என்றான்
“யெஸ் . .” என மேலும் சில தகவல்களை கூறினாள்.
“சரி லியா இன்டியாக்கு போக டிகெட்ஸ் புக் பண்ணிடு . . ப்ளாக் பண்ண அதே டேட்ஸ்தான்”
போனை துண்டித்து சாருவுக்கு விஷயத்தை சொல்ல கால் செய்தான். ரிங் போய்க் கொண்ருந்த சமயத்தில்தான் ஞானோதயம் தோன்றியது இந்த விஷயத்தைக் கேட்டாள் சாரு இன்னும் வருத்தப்படுவாள் என நினைத்தவன் போனை கட் செய்ய யத்தனித்தான்
“ஹலோ” என சாரு முந்திக் கொண்டாள்
என்ன பேசுவது என ஒரு நொடி திணறி “தூங்கிட்டயா?” என்றான்
“தூங்கறவள எழுப்பி தூங்கிட்டயானு கேட்குற ஆள இப்பதான் பாக்குறேன்” என்றாள் கொட்டாவி விட்டபடி.
“சாரி சாரி சாரு . .”
“சும்மா சொன்னே தூக்கமே வரல . . குழப்பமா இருக்கு”
“அக்காவ நினைச்சி இப்படி இருக்காத சாரு . . உன் ஹெல்த்தையும் பாத்துக்கோ”
“சில சமயம் அவ வழில நான் குறுக்கிடறேன்னோ தோணுது . . ஆனா அவ அங்க பத்திரமா இருக்காளாங்கற பயமும் இருக்கு . . அவளுக்கு எங்க மேல பாசம் இல்ல நாங்க மட்டும் ஏன் கவலபடணும்னு கூட தோணும் . . எது சரி எது தப்புனே தெரியில ஆகாஷ்” அவள் மனம் எத்தனை புண்பட்டுள்ளது என்பதை ஆகாஷால் நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது.
“டோண்ட் வொரி சாரு”
“சரி எதுக்கு போன் பண்ணின?”
“சாரி முக்கியமான விஷயம் சொல்லலாம்னு தான் கால் பண்ணே . . சரி நீ தூங்கு நாளைக்கு சொல்றேன்” என்றான்
“இல்லல இப்பவே சொல்லு . . ”
“சொல்லிட்ட நீ ராத்திரி முழுக்க தூங்கமாட்டே”
“பரவாயில்ல சொல்லு . .”
“நிச்சயமா சொல்லிடவா?”
“கமான் ஆகாஷ் . . என்னால சஸ்பென்ஸ தாங்க முடியாது”
“லவ் யூ சோ மச் கொண்டகாரி” என சொன்னான். இதைக் கேட்டு புன்னகையில் விரிந்தது அவளிதழ்.
இந்த சூழ்நிலையிலும் அவளுக்கு இருக்கும் மாபெரும் ஆறுதல் ஆகாஷ்தான். அவன் சொல்லிதான் காதலிப்பது தெரிய வேண்டுமென்பது இல்லை. இருப்பினும் அவன் சொன்னது அவளுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது.
அவன் அவள் மனதை கவலையில் இருந்து திசைதிருப்பதான் இந்நேரத்தில் கூறுகிறான் என்பதும் புரிந்தது. அவன் சொல்லாமலே அவளுக்கு அனைத்தும் புரிந்தது. அவளின் மனஓட்டமும் ஆகாஷிற்கு தெளிவாக தெரிந்தது.
அவள் வெட்க புன்னகையை புரிந்தவனாய் “நீ கேட்ட கேள்விக்கு பதில்” என அவன் சொல்லிவிட இன்னமுமாய் சிவந்தது முகம்.
சதுரகிரி
ஆசிரமம் மௌனமாய் கண்ணீர் வடித்தது. மரங்களும் செடி கொடிகளும் அசையாமல் நின்று தனது இறுதி மரியாதையை செலுத்தியது. வெப்பம் என்றும் இல்லாத அளவு இறப்பிற்கு கோபம் கொண்டு அந்த இடத்தின் சீதொஷ்ன நிலையை கடந்து வெம்மையை கக்கியது.
மேடையில் வெள்ளை துணியால் மூடப்பட்ட சடலம். சற்றுமுன் போஸ்ட் மாட்டம் செய்யபட்டதற்கான அடையாளங்கள் சடலத்தில் தெரிந்தன. நாற்பது வருட வாழ்க்கை . . ஆறடி பெட்டிக்குள் முடங்கியது. சிரிப்பு வேதனை அச்சம் வீரம் காதல் காமம் என எத்தனை எத்தனையோ உணர்வுகளை கொட்டி தீர்த்து வடிந்து போயிருந்தது சடலம்.
சிலரின் முகத்தில் உண்மையான சோகம் சிலர் போலியாக கண்ணீர் வடித்தனர். பாசம் நேசம் உள்ளவருக்கும் அது இல்லாதவருக்குமாய் அந்த சோகம் ரேஷன் கடை பொருட் போல மாறுப்பட்டது.
சுவாதி மனம் துவண்டுதான் போனது. சடலத்தின் முன்னே இறந்தவனின் போட்டோவிற்கு மாலை அணிவித்திருந்தது. அதையே நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நேச்சுரல் டெத் . . ஆனா சட்டபடி எல்லா நடக்கணும் அதனால இதெல்லாம் . .” என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறிக் கொண்டிருந்தார் ஆசிரம நிர்வாகியிடம்.